Friday, August 16, 2013

கொழும்பு மயூராபதி ஆடிப்பூரத் தேர் தீர்த்தம்

தலைநகர் கொழும்பு 6 மயூரா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் மயூரபதி சிறீ பத்திரகாளி அம்மன் ஆலயம். "அம்பிகையே  ஈஸ்வரியே எம்மை ஆளவந்து கோயில்கொண்ட வேப்பிலைக்காரி " ஆக வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் அருளும் அன்னையாக விளங்குகின்றாள்.

செவ்வாய் வெள்ளி தினங்களில் சிறப்பான பூசைகளும், பெளர்ணமி, நவராத்திரி, சிவராத்திரி, திருவெம்பாவை போன்ற  தினங்களில் விசேடஅபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

வருடாந்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வருடம் 26வது வருடாந்த மஹோற்சவம் ஆடி மாதம் நடாத்தப்பட்டது. ஆடிப்பூரம் தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்த உற்சவமும் வெகுசிறப்பாக நடாத்தப்படுகிறது.

தேர்  வண்ண நிறங்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் சூழ வீதிவரும் காட்சி மனதுக்கு இதத்தை தரும்.



தலைநகர் கொழும்பு வாழைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு பக்தி மயம் வீசி விளங்குவதைக் காணலாம். வீடு, கடை வாயில்களில் பூரண கும்பம்வைத்து அம்பாள் வீதிவலம்வரும்போது வழிபடுவார்கள். ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெறுவர்.

தேர்த் திருவிழா அன்று பெண்களின் பாற்குட பவனி காலையில் ஆரம்பமாகும். பால்குடபவனியையும் அம்பாள் பால் அபிசேகத்தையும் கண்ணாரக் காண்பது குளிர்ச்சி.



அங்கப்பிரதட்சணை, காவடி, கற்பூச்சட்டி,  துலாக்காவடி எனத் தங்கள் நேர்த்திக் கடன்களை அடியார்கள் செலுத்துவார்கள்.

பஞ்சரதத்தில் அம்பாள் தேரேறி வீதி உலா வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.



தீர்த்தோற்சவம் இந்து மாக்கடலில் நடாத்தப்படுகிறது.


அம்மன் தீர்த்தமாட வீதி வரும்போது தவில் நாதஸ்வர கோஸ்டியினர் முன்னே வரும் காட்சி இது.




 அம்பாள் தீர்த்தோற்சவத்துக்காக எழுந்தருளி வரும்காட்சிகள்.


ஆரம்பத்தில்  இரு அரச மரங்களுக்கு நடுவில் வேப்பமரம் அமைந்திருக்க அதன் கீழ் சூலமாக வைத்து மக்களால் வழிபடப்பட்டு வந்தாள்அம்மன். பின் சிறிய தகரக் கொட்டகையில் அமைந்திருந்து 1980களில் அடியார்களுக்கு அருள் பாலித்து வந்தார்ள்.

நாளடைவில் பெருகி வரும் பக்தஅடியார்களின் விருப்பத்தின் படி 85 அளவில் ஆலயம் கட்டத் தீர்மானித்து ஆலயத் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.


1987 அளவில் பொன் வல்லிபுரம் அவர்கள் மேற்பார்வையில் ஆலயப் புணருத்தாரணங்கள் ஆரம்பிக்பப்பட்டன. இந்தியாவிலிருந்து தெய்வ விக்கிரகங்கள் வரழைக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டன.

1987 நவம்பர் மாதம் அம்மனுக்கு கும்பாபிசேகம் நடாத்தப்பட்டு விழா சிறப்புற எடுக்கப்பட்டது.

கலைக் கூடம் ஒன்று ஆலய சூழலில் அமைக்கப்பட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஆலய முகப்பில் கல்யாண மண்டபமும் கட்டப்பட்டது. திருமணங்கள், பூனூல் சடங்குகள், நடாத்தப்பட்டு வருகின்றன.

மக்கள் ஜாதி மத பேதமின்றி கோவிலில் வழிபட்டு வருகின்றனர்.


கடற்கரைக்கு  தீர்த்தம் ஆட அம்பாளுடன் செல்லும் அடியார்கள் கூட்டம்.

அனைவரும்  மயூரபதிசிறீ பத்ரகாளிஅம்மன்  அருள் பெற்று வாழ்வோம்.

Saturday, July 27, 2013

தொடர் பதிவு - கணினியில் தவளல்

எனக்கும் கிடைத்தது ஒரு வாய்ப்பு. பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தன்னார்வ நிறுவனம் ஒன்று நடாத்திய கணினியின் பயன்பாடு பற்றிய உரை நிகழ்வு அது.  அந்த நிகழ்வில் பங்கு பற்ற எனக்கும் ஒரு அழைப்பு கிடைத்தது.

கனவுகளில்தான் கணினியை அன்று கண்டோம்.


இது போர் முற்றி யாழ் குடாநாட்டில் நாம் முடங்கியிருந்த காலத்தில் நடந்தது. காலம் சரியாக ஞாபகம் இல்லை. 1994 அல்லது 1995 ஆக இருக்கலாம்.

அப்பொழுதுதான் முதன் முதலாக கடலளவு விடயங்கள் அந்தப் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறது. அள்ளத்தான் எமக்கு வழி தெரியவில்லை என்பது புரிந்தது.

அடு்ப்பை மூட்டுவதுடன் நின்றுவிடாது கணினியையும் ஒரு கை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அப்பொழுதே தோன்றிவிட்டது. ஆனால் அந்நேரம் கண்ணாலும் காணவில்லை.

நாங்கள் வசித்தது வட மாநிலம். வீட்டுக்கு வெளியே சென்றால் "போன மச்சான் திரும்பி வருவாரா" என்பது சந்தேகம். அப்போது நிலத்தைப் பார்க்காது வானத்தைப் பார்த்துத்தான் நடப்போம்.

ஹெலியிலிருந்து சூடு வருமா, பொம்பருக்குள் இருந்து குண்டுகள் விழுமா எனப் பார்க்க வேண்டியிருந்தது.  வானத்திலிருந்து கொட்டாமலும் காலன் அசுமிசமின்றி வருவான்.

ஆம் பாலாலி காம்பிலிருந்து ஷெல்  கூவி வருவதின் சத்தம் கேட்பதற்கிடையில் தலையில் விழுந்துவிடும்.

இப்படியான சூழலில் காலம் தவழ்ந்து கொண்டிருந்தது . ஒரு தடவை ஆன்மீக நிறுவனம் ஒன்று ஒழுங்கு செய்திருந்த பாடசாலை மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சியில் கணினியை இயக்குவது எப்படி என காட்டும் கருத்தரங்கு அப் பகுதியில் நடாத்தப்பட்டது.

அப்பொழுது நீயும் மாணவியாக இருந்தாயா எனக் கேட்கிறீர்களா?  ஆம் கணனியை கற்க விரும்பிய குடும்பத் தலைவியான மாணவியாக  இருந்தேன்.  கணினி எப்படி இருக்கும் என்பதை முதன்முதலாகக் காண ஆர்வம் கொண்டு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

அங்குதான் காணாததைக் கண்டு ஆ!  என்று விழி விரியப் பார்த்து நின்றேன்.

எப்படியும் கணனி ஒன்றைச் சொந்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததும் அன்றுதான்.



காலம் அலுக்காது ஓடிக்கொண்டிருந்தது. யுத்தம் ஓயவிடாது அதைத் துரத்திக் கொண்டே இருந்தது. உணவுக்கே மக்கள் துன்பப் பட்டுக் கொண்டிருந்த நேரம். பல வருடங்களாக எலக்ரிசிட்டியும் கிடையாது. இந் நிலையில் கொழும்பிலிருந்து எங்ஙனம் கணினியை வரவழைப்பது?

தாண்டிக்குளத்தடியால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வந்து கேரதீவுக் கடலில் படகில் ஏறி மறுகரை வருவதே  மனிதருக்கு பெரிய பாடாக இருக்கும்போது கணினியாவது மண்ணாங்கட்டியாவது?

கனவு களிமண்ணாக நீரில் கசிந்து கரைந்து வடிந்துவிட்டது.

சிறிது காலம்போனது. 1996 மீண்டும் இலங்கை இராணுவம் யாழ் குடாவைக் கைப்பற்றியது.. நாங்களும் 1997 ஆரம்பத்தில் குடும்பமாக கொழும்பு வந்து சேர்ந்தோம்.

வந்த புதிதில் மீண்டும் தொழில் தொடங்கி அம் முயற்சியில் ஈடுபட்டு ஆறு மாதங்கள் அளவில் ஓரளவு முன்னேற்றத்தை அடைந்தோம்.

அப்பொழுதுதான்  நீண்ட நாள் கணினி ஆசைக்கு வீட்டில் முடிவு வந்தது.

கணவரும் பிள்ளைகளும் விரல் தேயத் தேய தட்டித் தட்டிப் பழகினார்கள். நானோ தட்டவும் இல்லை. பழகவும் இல்லை. எப்படியோ கணினியை திறக்கவும் மூடவும் மட்டும் பழகியிருந்தேன் :))


இது போதாதா?.  மற்றையபடி பிள்ளைகள் கணவர் செய்வதை பார்த்துக் கொண்டிருப்பேன். எல்லோரும் முறுக்கிய முறுக்கில் கணினியின்  உயிரும் ஊஞ்சல் ஆடும். ரெக்னீசியனும் அடிக்கடி வீசிட் அடிப்பார்.

பிள்ளைகள்  கேம் விளையாடுவார்கள். அம்மாவும் பலூனை வெடிக்க வையேன் என்பார்கள். முயற்சிப்பேன் சரியாக வருவதில்லை. Tom rider  சுட்டு விளையாடு என்பார்கள். சுடப்போனாலும் அம்மாவுக்கு வடைதான் சுடத் தெரியும் எனச் சிரிப்பார்கள்..

கணவரும் கணனி கற்கச் சென்றதில்லை. தனது நிறுவனத்திற்காக தானே படித்து இயக்கக் கற்றுக் கொண்டார். வாடிக்கையாளர்கள் விபரங்கள்,  நிறுவனக் கொள்வனவு அவற்றி்ற்கான விபரங்கள்,கணக்குகள், என பதியப் பழகியிருந்தார்.

நானும் கணவருடன் வேலைக்கு சென்று உதவுவதுண்டு. அப்பொழுது தொடங்கி வாடிக்கையாளர்களின் பதிவு, விபரங்கள் அறிவதற்காக தட்டித் தட்டிப் பழகிக் கொண்டேன்.

நிறுவனத்தில் இரு கணனிகள் இருந்தன. ஒன்று கணவரின் பாவனைக்கு மற்றது ஊழியர்களின் பாவனைக்கு.  தொழிலுக்கு வேண்டிய விபரங்களை பார்வையிடப் பழகிவிட்டேன்.

 நானும் கணவரிடம் இருந்து அறிந்ததுதான். ஆங்கில எழுத்தின் மேல் தமிழ் எழுத்தை எழுதி ஒட்டிஅதைப் பார்த்துப் பார்த்து தமிழிலும் அடிக்கப் பழகினேன்.

கணவரின் ஆபீஸ் தேவைகளை வாசித்து திருத்திக் கொடுப்பதற்காக என செய்து பழகிக் கொண்டதுதான் எனது அனுபவம்.

அத்துடன் எங்கள் இருவருக்குமே வாசிக்கும் ஆர்வம் நிறைய இருந்ததால் கணினியி்ல் பத்திரிகைகள்,  தினமணி, நக்கிரன், பதிவுகள் போன்றவற்றில் கட்டுரைகள்  வாசிக்கப் பழகியிருந்தேன்.

பலரின் பதிவுகளையும் விரும்பிப் படித்திருக்கிறேன். அவ்வாறான வாசிப்பும் தேடலும்தான் தமிழ்மணத்தையும் அறிமுகமாக்கியது.

சமையல் திரட்டி நடாத்திய 'வாரத் திட்டம்' என் கண்முன் வந்தது. அதைப் பார்த்ததும் நானும் அதில் கலந்து கொள்ளலாம் எனத் தோன்றியது. கணவரும் உதவி புரிந்தார்.

சமையல் அனுபவத்தை தூயா அவர்களுக்கு அனுப்பினேன். அவரும் உற்சாகத்தோடு வரவேற்பு தந்தார். அப்படியாக காலடி எடுத்து வைத்தவள்தான் இவள். துயாவின் சமையல்கட்டு அவர்களுக்கு நன்றிகள்.

இப்பொழுதும் என்ன வாழுது எனக் கேட்கிறீர்களா?

 "வந்தாள் மஹாலஷ்மியே .........." என கட்டிய பாவத்திற்கு கணவரும்,

 "அம்மாவை வணங்காத உயிர் இல்லையே"  என மகளும்  சொல்லித் தருவதால் ஓடுகின்றது கணினியுடன் நாட்கள்.

அதுதான் உப்பைப் புளியைப் போட்டு அவர்களின் வாயை அடைத்து விடுகிறேனே என கணவரே கூறிவிட்டார்.... ஹா.. ஹா....

ஆனால் "உப்பு கூடி பிரஷர் உன்னால்தான்" எனச் சொல்ல இன்னும் நேரம் வரவில்லை..

சின்னுரேஸ்ரி முகப்புப் பட டிசைன் மகள் சின்னுவின் கைவண்ணம்.


என்னை எழுத அழைத்த "எனது எண்ணங்கள்" தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு நன்றிகள்.

பலரும் எழுதிவிட்டார்கள்

இன்னும் பலரும் தங்கள் அனுபவங்களை பகிர ஆவலுடன் இருப்பார்கள்.

என்னை  ஒருவரும் அழைக்கவில்லையே என நினையாது அனைவரையும் உங்கள் அனுபவங்களை தருமாறு அன்புடன் அழைக்கின்றேன்.  

உங்கள் அனுபவங்களைப் படித்து சுவைக்க காத்திருக்கின்றோம்.

சிலரையாவது அழைக்க வேண்டும் அல்லவா? சுவையாகத் தரும் இவர்கள் அனுபவங்களைப் படிக்க விரும்புகின்றேன்.

 நாச்சியார் வல்லிசிம்ஹன்

முத்துச்சரம் ராமலஷ்மி

 தீராத விளையாட்டுப் பிள்ளை  RVS

கவிதை வீதி செளந்தர்

சேட்டைக்காரன்  

-: மாதேவி :-

Saturday, July 13, 2013

புகையென மூடுபனித் துளியாய் வீசி எறியும் துன்ஹிந்த நீர்வீழ்ச்சி

பதுளை மாவட்டத்தில் துன்ஹிந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பதுளை நகரிலிருந்து 5 கிலோமீற்றர் தூரத்தில் பதுளை மஹியங்கன பாதையில் உள்ளது. இலங்கையில் உள்ள நீர்விழ்ச்சிகளில் மிகவும் அழகுடையது இது.


யூன் யூலை சிறப்பான காலநேரம். 210 அடி உயரத்திலிருந்து பாய்கிறது.
Smoky dew drops spray என்கிறார்கள்.


வழியில் kuda dunhinda என்ற சிறிய நீர் வீழ்ச்சியையும் காண முடியும். குளிப்பதற்கு தடை இருக்கின்றது. கற்பாறைகளுடன் கூடிய மிக ஆழமான இடம். அதனால் அபாயமானது பாரக்கச் சென்ற ஓரிருவர் காணாமலும் போயிருக்கிறார்கள். Dhunhinda Addaraya என்ற சிங்கள டிராமா துன்ஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்த அசோக ஹந்தகம என்பவரால் தயாரிக்கப்பட்டது.


பசுமையான பள்ளத்தாக்குகளும் மலைகள் சிறு ஓடைகள் இனிய குளிர்காலநிலை என சுற்றிவர ரம்யமான சூழல் மனதை மயக்கும் பாதையின் ஆரம்பத்தில் சிறிய கடைகள். குளிர்பானம் ரீ, தொதல், கொறிப்பதற்கு அவித்த சோளம், உப்பு மிளகாய் இட்ட அன்னாசித் துண்டுகள். சியம்பல எனும் சிறிய கற்புளி, கண்ணுக்கு விருந்தாக கலைப் பொருட்கள், அழகிய தொப்பிகள் என பற்பல கடைகள். இவற்றைப் பார்த்தவாறே வாயிலில் ரிக்கற் பெற்றுக்கொண்டு ஆளுக்கு 20 ரூபாய். நடையைத் தொடர்ந்தோம்.


சமதரை அல்ல. மண்மலைப் பாதை. மேடு பள்ளமாய் வளைந்து நெளிந்து சென்றது பாதை. நீர்வீழ்ச்சியைக்காண ஒருமைலுக்கு மேல் செல்லல் வேண்டும். இடையிடையே கடைகளில் இளைப்பாறி இருப்பதற்கு ஆசனங்கள் வைத்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் கடந்து அரை மைல் அளவு வந்துவிட்டோம். மலையின் ஓரத்தில் சீமென்தினால் கட்டிய ஒரு வியூ அமைத்துள்ளார்கள். ஆகா!  அழகு கொள்ளை அழகு. இங்கிருந்து அதள பாதாளத்தில் பாயும் நீர் வீழ்ச்சியின் அழகை கண்களால் பருகி மகிழ்ந்தோம்.

ஓய்வாக இருந்து செல்ல அங்கே ஆசனங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அப்பால் பயணத்தைத் தொடர்ந்தோம். பாதைஓரப் பாறைகளில் நின்ற மரக் கொப்பிலிருந்து எம் இனத்தார்கள் இறங்கி அங்கும் இங்கும் எம்மை நோக்கி ஓடி வந்தார்கள். குட்டிகளும் கூடவே பறந்து வந்தன. சிலர் பழங்கள் கொடுத்தனர். கொடுத்த பழத்தைப் பிடுங்கி வாயில் இட்டுக் கொண்டு சிலர் தா... தா எனக் கையை நீட்டிய படியே கிட்ட ஓடிவந்தனர்.


கண்டு கிளிக்குக் கொண்டே நகர்கின்றோம். அமைதியான இயற்கை அழகு பாதை எங்கும் படிகள் கிடையாது. கற்பாறைகள்தான் இடையிடையே இருந்தன. மேலே ஏறி கீழே இறங்கி எனச் சென்று கொண்டிருந்தோம்.

அடுத்து வந்ததே ஆடு .. ஆடு ... பாலம்....


ஒருவாறு ஏறி ஆடி ... இரு புறமும் கைகளையும் பிடித்து ஆடிச்சென்று இறங்கினோம்.


அதைத் தொடர்ந்து பாதை சீரானதாக இல்லலை. அந்தோ!  மலையின் ஓரமாய் பாதை சென்றது. கீழே அதளபாதாளம். கரணம் தப்பினால் ....... நிச்சயம்.  மிகவும் மெதுவாக அடி மேல் அடி வைத்து பூனையார்கள் ஆனோம். கீழே இறங்கிச் செல்கின்றது பாதை. கற்படிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காலை அகல எட்டி வைத்து இறங்குவதே மிகவும் சிரமமாக இருந்தது.

இந்தா வந்துவிடும் நீர் வீழ்ச்சி அருகே கண்டு மகிழலாம் என்று எண்ணம். இளைத்துக் களைத்து செல்லுகின்றோம். சில இடங்களில் ஒருவருக்கு ஒருவர் ஏறி இறங்க கைகொடுத்து உதவுகின்றோம். கீழே செல்லச் செல்ல பாதை மிகவும் மோசமாக இருந்தது. முன்னால் நானும் மைத்துனியும் பின்னால் பிள்ளைகள் கணவர்.

ஓரிடத்தில் திடீரென பாதாளப் படிகள். பள்ளத்தைப் பார்த்து திகைத்து நின்றது மனம். கீழிருந்து மிகவும் சிரமத்துடன் ஏறி வந்த பெண்ணுக்கு ஒதுங்கி வழி விட்டபடியே யோசனையில் நான் நின்றிருந்தேன். படிகள் எட்டியே இருந்தன. மேலே வந்த பெண்மணி 'கொச்சர கதறராய் '  ரொம்ப கரைச்சல் என்றார்.

இதைக் கேட்டதும் எனக்கு கிலி பற்றிக் கொண்டது.



'சிறீபாத கொந்தாய்' சிவனொளிபாதம் நல்லது எனவும் பெண்மணி கூற நானும் மைத்துனியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி தொடர்வதில்லை திரும்புவது என்றும் இவ்வளவே நீர் வீழ்ச்சி பார்த்தது போதும் முதல் வியூவிற்கே மீண்டும் சென்று பார்த்து மகிழ்வோம் எனப் பேசிக் கொண்டோம்.

நாங்கள் திரும்பிச் செல்வதாகக் கூறிவிட்டோம்;.

பிள்ளைகள், கணவர் தொடர்ந்தார்கள். துன்ஹிந்தையை அருகே பார்க்க.

நாங்கள் மீண்டு வந்து மேல் உள்ள வியூவில் நின்றபடியே நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு ஆடுபாலத்தில் ஏறி இறங்கி முன்வாயிலை அடைந்தோம்.


கடையில் போட்டிருந்த ஆசனத்தில் களைதீர அமர்ந்து பார்த்திருந்தோம். சற்று நேரம்செல்ல போன் கோல் மதியம் ஆகிவிட்டதா ஹோட்டலில் சென்று உணவை அருந்திவிட்டு அவர்களுக்கு பார்சல் வாங்கி வாருங்கள் என்றார்கள்.
சற்றுதள்ளி நல்ல ஹோட்டல் ஒன்று இருந்தது. சென்று ரைவரும் நாங்களும் சாப்பிட்டுவிட்டு  மீண்டு வந்து காத்திருந்தோம்.

சற்று நேரம் செல்ல மூவரும் போரில் வெற்றி கொண்ட வீரர்கள் போல களைத்த உடலும் பெருமிதம் பொங்கும் முகத்துடனும் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.

அடடா வந்துவிட்டார்களே என்று பார்த்தபோது பின்புறமாய் கையைக் கட்டிக் கொண்டு வந்தார் கணவர். கூட ஒருவர் கைகளில் என்ன என எட்டிப் பார்த்தபோது அட! தன்னைப் போல ஒருவரைக் கூட்டி வந்துவிட்டாரே.


கீழே செல்லச் செல்ல பாதைகள் மிகவும் மோசமாக இருந்ததாக சொன்னார்கள்.

நீங்கள் வராததும் நல்லதே என்றாள் மகள்.

கீழே சென்று பார்க்க கட்டிடம் கட்டி இருக்கிறார்கள். அங்கிருந்து கொட்டும் நீர்வீழ்சியின் அழகைக் கண்டு களித்தார்களாம்.

பலரும் கட்டிடத்துடனே பார்த்து ரசித்துவிட்டு திரும்பிவிட்டார்களாம். தாங்களும் ஓர் சிலரும் கீழே ஒடுங்கிய மலைப் பாதை வழியே சென்றார்களாம்.  ஒடுங்கிய பாதையின் இருபுறங்களிலும் புல்கள் கற்களும் சறுக்கீஸ் விளையாட்டுக் காட்டின. அவற்றையும் தாண்டி கீழே சென்று துன்ஹிந்த நதியில் கால் பதித்து அருகே கொட்டும் நீரையும் கண்டு களித்து திரும்பியதாகச் சொன்னார்கள்.


"ஓரிடத்தில் சிரமப்பட்டு நிலத்தில் இருந்து அருகிருந்த பாறைகளைப் பற்றி ஒரு காலை கீழே விட்டு அது சரியாக தரையில் பதிந்ததை உறுதிப்படுத்திய பின் மிகவும் சிரமத்துடன் மற்றக் காலையும் கீழே போட்டு இறங்கினார்களாம். கரணம் தப்பினால் துன்ஹிந்தவில் குருதி ஆறு பாய்ந்திருக்கும்." என்றாள் மகள்.

துன்ஹிந்தையில் கால் பதித்த மூன்று ஜோடிப் பாதங்கள் வாழ்க! என வாழ்த்திவிட்டோம்.

0..0.0.0..0

Tuesday, June 25, 2013

பனி விழும் மலர் வனம்....

பூக்களின் வண்ணங்கள், சுகந்த மணம், அழகு என்பன எம்மை அதன் பால் ஈர்த்து லயிக்கச் செய்கின்றன. பூக்களின் நறுமணங்களால் கவரப்பட்டு தேனீக்கள், வண்டுகள், பூச்சிகள், குருவிகள் அவற்றில் தேன் அருந்த வருகின்றன.

மகரந்த சேர்க்கையை பரவலாக்கி தமது இனத்தைப் பெருக்க தாவரங்கள் பூச்சிகளை கவரும் விதமாக பலவண்ணப் பூக்களையும் நறுமணத்தையும் உருவாக்குகின்றன. இதனால்தான் நாமும் மலர்களில் கிறங்கிப்போய் நிற்கின்றோம்.


இரவில் மலரும் மல்லிகை முல்லை மலர்கள் பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கும் அதீத வாசனையைத் தருகின்றன.  பூ இதழ்களில் உள்ள எசன்ஸ் ரசாயனப் பொருள் அதீத மணத்தைத் தருவதால் தொலைவில் உள்ள பூச்சிகளும் கவர்ந்து வருகின்றன.


மஞ்சள், வெள்ளை, சிவப்பு, நீல, பலவண்ண மலர்கள் பூத்து நிரம்பிய மலைகள், ஓக்கிட் காடுகள், பூந்தோட்டங்கள் அழகில் மயக்குகின்றன.


குறிஞ்சி மலைகள், பிச்சி, ரோஜா, என ரம்யமான இனிய பூக்களின் மணம் காற்றில் மிதந்து வந்து மனதிற்கு இதம் தருகின்றன.



மூதூர் பிரதேசத்தில் மல்லிகைத்தீவு என்று அழைக்கப்படும் இடம் இருக்கின்றது.

நானிலங்கள் மலர்களின் பெயர்களால் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

உலகில் அதிகமாக பூக்கள் மலர்வது நெதர்லந்து நாட்டில்தான்.


வசந்த காலத்தில் இலைகள் புதியதாகத் தோன்றி வண்ண மலர்களைப் போல தோற்றம் தருகின்றன.


புதிய மாவிலைக் கொழுந்து இலைகள் சிவந்த நிறத்தை உடையனவாக தோன்றுகின்றன. பொதுவாக கொழுந்தான புதிய இலைகள் குருத்துப் பச்சை, சிவப்பு ஓரென்சு நிறங்களாக இருக்கின்றன.

இவற்றில் கரோட்டினொயிட் எனும் நிறமிகள் காணப்படுவதால் இலைகள் அவ்வாறு தோன்றுகின்றன. இந்த நிறங்கள் பூச்சித் தாக்கத்தையும் தடுக்கின்றன. இதனால் கொழுந்துகளுக்கு பாதுகாப்பு ஏற்படுகிறது. சூரிய ஒளியின் தாக்கத்தையும் குறைக்கின்றது.

வசந்தகாலத்தில் மலர்கண்காட்சிகள் நடாத்தி மகிழ்கிறார்கள்.


பூக்களின் மணங்கள் ஐந்து வகையாக இருக்கும் என்கிறார்கள் தாவரவியல் வல்லுனர்கள். இன்டோலாயிட் மணங்கள், அமினொயிட் மணங்கள், பென்சொலாட் மணங்கள், மெழுகு மணங்கள், டெரபினோயிட் மணங்கள் எனப்படும். அனைத்துத் தாவரங்களின் பூக்களும் இவற்றில் அடங்கும்.


இலங்கைக்கு உரித்தான இனங்களாக 1025 பூக்கும் தாவரங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிங்கராச வனத்தில் மட்டும் 820 பூக்கும் தாவர இனங்கள் இருக்கின்றன.


இலங்கையில் பெரதேனியா, ஹக்கல, கம்பஹாவில் உள்ள ஹெனரத்கொட ஆகிய இடங்களில் தாவரவியல் பூங்காக்கள் உள்ளன.


இந்த மூன்றும் பிரிட்டிஸ் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன. ஹெனரத்கொடவில் 1876 ம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாவரவியல் பூங்காவே பிரிட்டிஸ்காரரால் ஆரம்பிக்கப்பட்ட கடைசி மலர் வனம் ஆகும்.


மிரிஜவில Mirijjawila எனும் இடத்தில் வரட்சி மண்டல பூந்தோட்டம் உள்ளது. இது கொழும்பு கதிர்காமம் பாதையில் ஹம்பந்தோட்டவில் உள்ளது. இடது புறம் மத்தள சர்வதேச விமான தளமும், வலது புறம் ஹம்பந்தோட்ட துறைமுகமும் உள்ளன. 300 ஏக்கர் விஸ்தாரமுள்ள இப் பூங்காவனம் இன்னும் வளர்ச்சிடைந்து கொண்டிருக்கிறது.

இயற்கையை ரசிப்போம் வாழ வழிவகுப்போம். வண்ணமலர்களையும் நாட்டி மனதுக்கு புத்துணர்சி பெறுவோம்.

மாதேவி

Wednesday, May 22, 2013

சிவனார் பாதம் பதித்த சிவனொளி பாத மலை

சிவனொளி பாத (Sri pada- Adam's Peak ) பருவகால யாத்திரை இம்மாதம் 24 வெசாக் பௌர்ணமி தினத்தன்று முடிவடைகிறது. சமன் தெய்வமும் உபகணங்களும் நல்ல தண்ணி நகரிலிருந்து இரத்தினபுரியில் உள்ள பெல்மதுல்ல ரஜமஹா விகாரைக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.

எதிர் வரும் டிசம்பர் பௌர்ணமி தினத்தில் மீண்டும் யாத்திரை காலம் ஆரம்பிக்கும். நிரத்தரமாக வெளிச்சம் தரக் கூடிய மின்குமிழ்கள் மலையின் உச்சியில் வெளிச்ச வீடு போல பொருத்தப்பட உள்ளன என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

இவ் வருடம் பெப்ரவரியில் குறிப்பிட்ட ஒருநாளில் மட்டும் 4 இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரீகர்கள் தர்சிக்கச் சென்றிருக்கின்றார்கள்.

Thanks :- goldensrilanka.com
திருமணமாகிய போது கணவர் வேலை புரிந்த இடம் பதுளை மாவட்டம். ரயிலில் செல்லும்போதே ஹட்டனுக்கு அப்பால் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உயர்ந்து நின்ற மலைச் சிகரம் ஆசையைத் தூண்டிவிட்டது. அங்கிருந்தபோதே செல்ல வேண்டும் என நினைத்திருந்தேன்.

சேர்ந்து செல்வதற்கு ஒருவரும் முன்வரவில்லை. இவ்வளவு தூரம் ஏறமுடியாது என்றார்கள் சிலர். எனது ஆசையும் நிறைவுறாது தொடர்ந்தது. பல வருடங்களின் பின்புதான் ஒரு சித்திரை வருடப் பிறப்பு செல்வதற்கான நேரம் கிட்டியது. மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. துணைக்கு இப் பயணத்தில் எங்கள் சகோதரர் குடும்பத்தாரையும் நாத்தனார் குடும்பத்தாரையும் கூட அழைத்துச் சென்றோம்.

எல்லோருமாக 12 பேர் ஒரு வாகனத்தில் செல்ல தயார்ப்படுத்தியிருந்தார் கணவர். கொழும்பிலிருந்து ரம்பொடை ஆஞ்சனேயர் கோயில் சென்று தர்சித்தோம். அங்கிருந்து நுவரெலியா சென்று பகல்பொழுது நகரைச் சுற்றிவிட்டு சாயந்திரம் ஹட்டன் மஸ்கலியா வழியாக சிவனொளிபாத மலை சென்றோம். மாலை ஆகிவிட்டது. விடுதியில் பொருட்களைப் போட்டுவிட்டு குளித்து உணவருந்தி மலை ஏறுவதற்கான குளிர் தொப்பி, ஆடைகள் அணிந்து தயாராகினோம்.

அடிவாரத்தில் நின்று மலையைப் பார்ததும் திகைத்துத்தான் போனோம். மின்னொளியில் வானத்தைத் தொடுமாறு நின்றது. அடிவாரக் கடைகளில் பத்திக் குச்சுகள், தீப்பெட்டி, அட்டைக் கடிக்குத் தப்ப சித்தாலேப தைலம் எல்லாம் வாங்கிக் கொண்டோம். கடைக்காரர் நூல் பந்தும் கொடுத்தார்கள். வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பிதோம். அல்ல ஏற ஆரம்பித்தோம்.

கடல் மட்டத்திலிருந்து 2243 மீட்டர் ( 7359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலை. சப்ரஹமுவ மத்திய மாகாணங்களுக்கு இடையேயான எல்லையில் அமைந்துள்ளது. சிவன் நடனமாடும்போது இமயமலையில் ஓர்காலையும் சிவனொளிபாத மலையில் ஓர்காலையும வைத்தார் என்பது இந்துக்களின் ஐதீகம்.

மலை உச்சியில் இருக்கும் 1.8 மீட்டர் அளவான பாறையில் அமைந்துள்ள பாதத்தை இந்து மதத்தவர்கள் சிவனின் பாதச் சுவடியாகவும், பௌத்த மதத்தவர்கள் கௌதம புத்தரின் பாதச்சுவடியாகவும், கிறீஸ்தவர்கள் சென்ட் தோமஸ் பாதச்சுவடியாகவும், இஸ்லாமியர்கள் ஆதாமின் பாதச்சுவடியாகவும் சொல்லி வழிபட்டு வருகிறார்கள்.

அதி உயர் மலை உச்சி என்பதால் பருவகால யாத்திரை மட்டும் செல்ல முடியும்;. நல்ல தண்ணி என்ற இடத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்வதற்கான பாதை ஆரம்பிக்கிறது. வெள்ளை உடைதரித்த வயது முதிர்ந்த மாது இரு கை கூப்பிய வண்ணம் பாடிக் கொண்டே தள்ளாத வயதிலும் படி ஏறிச் செல்வதைக் காண எமக்கும் கால்கள் விரைந்து சென்றன.

மதவேறுபாடின்றி சுற்றுலாப்ப பயணிகள் உள் நாட்டு மக்கள் என கூட்டம் கூட்டமாக ஏறிச் செல்வதைக் காணலாம். இடையிடையே வெளிச்சங்கள் அமைத்துள்ளார்கள். சிறு கோவில்கள் அங்கங்கே தரிசித்துக் கொண்டே செல்ல அமைந்துள்ளன. இருபுறமும் அடர்ந்த புதர்கள் மரங்கள் என இருக்க அங்கங்கே சீரில்லாப் படிகளும் வந்து ஏறுவதில் சிரமம் கொடுத்தன.

தாகசாந்திக்கு இடையிடையே சிறுகடைகளில் தேநீர் சிறு உணவு எனக் கிடைக்கின்றன. எம்மையும் முந்திக்கொண்டு  பெட்டிகளுடன் பாரத்தை சுமந்தபடியே ஏறிச் செல்கிறார்கள் சிலர்.

Thanks :- www.dailynews.lk 

பாதித்தூரம் அளவிற்கு ஏறிவந்துவிட்டோம். எங்களுடன் வந்தவர்களில் சிலர் இனிமேல் முடியாது திரும்பிப் போவோம் என்றுவிட்டார்கள். என்ன செய்வது என்று சங்கடமாக இருந்தது. எனக்கோ மனதில் ஏமாற்றம். இடையில்உள்ள கடையோரத்தின் இருக்கையில் தங்கியிருங்கள் முடிந்தவர்கள் மேலே சென்று வருவோம் என முடிவு எடுத்தோம்.

ஐந்து ஆறு பேர் ஏறத் தீர்மானித்தோம்.சற்றுப் படிகள் ஏறிச் சென்றுவிட்டோம். பின்னால் அழைக்கும் குரல் எல்லோருமே சேர்ந்து கொண்டார்கள். ஆறதலாக ஏறுவோம் எனச் சொல்லி அவர்களையும் அழைத்துச் சென்றோம்.

இடையிடையே மர இருக்கைகளாலான மர இருக்கைகளில் இருந்து கால்களுக்கு ஓய்வு கொடுத்து ஏறினோம். சற்று வெளிச்சமற்ற இருபுறமும் மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒருவர் அட்டைக் கடி என்றார். எமக்கும் பயம் தொற்றியது. பயத்தில் எங்கள் காலகளைப் பார்த்துக் கொண்டோம். கடித்தவரின் காலை விட்டு இறங்க மறுத்தது அட்டை. பத்திக் குச்சை ஏற்றி வைக்க அட்டையார் விழுந்துவிட்டார்.

சீமெந்துப் படிகளைத் தாண்டி இன்னும்மேலே ஏறிச் செல்கிறோம். மலையும் உயர்ந்து செல்வதால் படிகளும் நெருக்கமாகச் செல்கின்றன. ஏறுவோர் இறங்குவோர் என கம்பிக் கட்டினால் பிரிக்கப்பட்டிருந்தது பாதை.

Thanks:- chaise1kashmika.blogspot.com 

பாதை நீண்டே பல மைல்கள் உயர்ந்து செல்வது தெரிகிறது. அவ்விடம் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும். பயத்தில் தலையே சுற்றுகிறது.

இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே என முன்னேறுகின்றோம். மிகுந்த செங்குத்தான படிகள் இந்தா வந்துவிட்டோம் என நினைத்து வந்த வழியைத் திரும்பிப் பார்க்கின்றோம். நீண்ட அனகொண்டா பாம்பின் வால் போல பல மைல்கள் தூரம் பாதை இறங்கிச் செல்வது தெரிகின்றது. ஆரம்பத்தில் இருந்த விகாரைகோயிலும் தெரிகின்றது. இவ்வளவு தூரமா ஏறி வந்துவிட்டோம் என மலைப்புத்தான் ஏற்பட்டது. இன்னும் முன்நோக்கி கால் எடுத்து வைக்கின்றோம். எல்லோரும் களைத்தாகிவிட்டது.

இந்திய யாத்திரையில் ஏறிய திருக்கழுக்குன்றமலை, உச்சிப்பிள்ளையார், சரவணபெரகுல, இலங்கையிலுள்ள கதிர்காம கதிரமலை எல்லாமே சிறிய மலைக்குன்றுகள் சுலபமாக ஏறி இறங்கியிருந்தோம். இது அவற்றைவிட 4 - 5 மடங்கு தூரம் கூடியதாக எனக்குத் தெரிந்தது.

செங்குத்தாக படிகள் நெருக்கிக் கொண்டே வருகின்றன.

Thanks :- www.srilankaguardian.org
சிவ...சிவ... நீதான் அருளவேண்டும்; என்றவாறே ஏறுகின்றேன். இந்திய சுற்றுலா பிரயாணி ஒருவரும் ஓரிடத்தில்; எங்களுடன் சேர்ந்து கொண்டார். மூச்சு இளைக்க அளவளாவினோம். இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இன்னும் சிறிது தூரம்தான என ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டே நெருங்கிய உச்சிப் படிகளில் மிகவும் சிரமமாகவே ஏறிக் கொண்டிருக்கிறோம்.

அவர் விடை பெற்று முன்னே செல்கிறார். நாம் எம் உறவினர்களுக்காகக் காத்து நிற்கிறோம். அனைவரும் சேரந்த பின்னர் மீ;ண்டும் ஏறத் தொடங்கினோம். சிறிது தூரத்தில் ஒரு தேநீர்க் கடை. எல்லோரும் களைப்பிற்கும் குளிரைப் போக்கவும் தேநீர் அருந்துவோம் என கடைக்குள் நுழைக்கின்றோம். குளிருக்கு இதமாக சுவையாக தேநீர் கிடைத்தது களைப்பும் நீங்கியது.

மேலே ஏறத் தொடங்குகிறோம். சிறிது தூரம் செல்லவும் அண்மிக்கிறது மலை உச்சி. ஆகா! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி அனைவர் முகங்களிலும். கோயில் கட்டிடங்கள் தெரிகின்றன. கீழ் தட்டு மண்டபத்தில் மக்கள் இளைப்பாறி இருக்க மண்டபம் இருக்கிறது. பலர் உறங்கிக் கொண்டிருந்தனர். சிலர் நிலத்தில் இருந்து கொண்டிருந்தனர். நாங்கள் மேலே உள்ள மண்டபத்தில் அமைந்துள்ள பாதச் சுவடியைத் தரிசிக்கச் சென்றோம். புத்தர் படம் சிவன் படம் இரண்டும் வைக்கப்பட்டிருந்தன.

1890 இல் இருந்த பழைய கோயில் படம் கீழே.

Thanks :- http://srilankamemories.blogspot.com/2010/07/1890-scowen-sripada.html
பாதத்தை ஒட்டி மஞ்சள் அங்கி வைத்து தாமரைப் பூக்களால் அர்ச்சித்து இருந்தார்கள். சிவனை நினைத்து நாமும் தொட்டு ஆசை தீர வணங்கினோம். வெட்டிய பழத் தட்டுக்களை கைகளில் ஏந்திய வண்ணம் கொண்டு வந்து வைத்து வழிபட்டு எடுத்துச் செல்கிறார்கள்.



கீழ் மண்டபத்திற்கு இறங்கி வருகின்றோம். மண்டபத்து மூலையில் பெரிய மணி ஒன்று கட்டப்பட்டுள்ளது. செல்வோர் அதை அடிக்கின்றார்கள். எத்தனை தரம் செல்கின்றோமோ அத்தனை தரம் அடிக்க வேண்டும் என்கின்றார்கள். மண்டபத்தி;னுள்ளே செல்ல முடியவில்லை. நிறைந்த ஆட்கள் வாயிலோடு ஒட்டியே இருக்க இடம் கிடைத்தது.

குளிரும் சொல்லி முடியாது. பலமாக வீசும் காற்று நடுக்கத்தைக் கொடுத்தது.'மந்தியும் குளிரில் நடுங்கி குந்தியிருக்கும்'' என நாமும் ஒடுங்கி உறைந்து இருந்தோம். நடுங்கும் குளிரில் சூரிய விடியலுக்காகக் காத்திருந்தோம். விடியல் ஆரம்பிக்கும் முன்பே வெளியே படிகளில் வந்து ஓரமாக இடங்களைப் பிடித்துக் கொண்டோம். குளிரும் தந்தியடிக்கத் தொடங்கியது. உடலே விறைத்துவிட்டது. அதை யார் பொருட் படுத்தியது. உதயம் பாரத்தால் ஆயிற்று என ஆவலுடன் கிழக்கு வானைப் பார்த்தபடி இருந்தோம்.

இருண்ட வானின் அடியில் மஞ்சள் ஓரஞ் வண்ணங்கள் தெரிய ஆரம்பித்தன. செம்பந்து மெதுவாக மேல் எழத் தொடங்கியது அதன் அழகைச் சொல்லி முடியாது. செங்கோள் மஞ்சள் வர்ணமாகி இளம்கதிர்களைப் பரப்பி மேல் எழுந்து வருகின்றான். மகிழ்ச்சியில் கைதட்டி அனைவரும் ஆர்ப்பரித்தோம்.

நீங்களும் வீடியோவில் சூரிய உதயத்தைப் பாருங்களேன்..

இது போல் காட்சியை வாழ்நாளில் எங்குமே கண்டதில்லை. கண்கள் கூசுமாப் போல கதிர்கள் வீச மக்களும் மலை உச்சியிலிருந்து விரைந்து இறங்க நாங்களும் எழுந்து இறங்கி வருகின்றோம் பல மைல்தூரங்கள்.

வாழ்க்கையில் ஓரிரு தடவைதானும் சிவனொளிபாதமலையை தர்சிப்பது இயற்கை காட்சிகளுடன் பலஅனுபவங்களையும் மிகுந்த மகிழ்ச்சியையும் தரும்.

வி  ஜ பிகள் ஹெலியில் சென்று மலையில் இறங்கக் கூடியதாக ஹெலி இறங்கு தளம் அமைக்கலாம் என திட்டம் போடப்பட்டுள்ளது. இது நடந்தால்

ஒருகாலத்தில் பொதுமக்களுக்கும் இலகுவாக செல்ல வசதி வரலாம் என நம்பிக்கை கொள்வோம்.

இங்கு இணைக்கப்பட்டவை இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் ஆகும். நாம் எடுத்த புகைப்படங்கள் ஹாட் டிஸ்கிலிருந்து விழுந்து தற்கொலை செய்துவிட்டன.

:- மாதேவி -:
0.0.0.0..

Friday, April 19, 2013

கங்குல் கரைய கவி இனம் பாட


உலகில் வாழும் பறவை இனங்களில் அறிவுத் திறன் மிக்கது காகம்.  இவற்றில் உள்ள சிறப்பு அம்சம் எந்தப் பருவநிலையுள்ள கண்டங்களிலும் வாழும் திறன் பெற்றவை.

தென்னமெரிக்கா மற்றும் பெருங்கடலுக்கு அப்பால் காணப்படும் சிறு தீவுகளைத் தவிர உலகெங்கும் காணப்படும் பறவை இது.

குட்மோனிங்  இன்னுமா தூங்குகிறாய்

Carvidae (கார்விடே) குடும்பத்தைச் சார்ந்தது இது. இவற்றில் நாற்பது இனங்கள் இருக்கின்றன. பொதுவாக கரிய நிறம் கொண்டவை.

ஆனால் அரிதாக வெண் நிறக் காக்கைகளும் இருக்கின்றன.

Thanks :- www.tumblr.com
குப்பைகளையும் வீணான உணவுப் பொருட்களையும் உண்டு வாழும் பறவையினம்.

சுற்றுப்பற சூழல் பாதுகாப்பிலும் முக்கிய பங்கு இதற்கு இருக்கின்றது. 'தோட்டி' என்ற பெயரும் இதற்கு உண்டு.

வயல்களில் உள்ள பூச்சிகளையும் உண்பதால் 'உழவர்களின் நண்பன்' என்றும் அழைக்கிறார்கள்.

கொக்குகளுடன் நண்பனாக வயலில் பூச்சி புளு தேடல்

ஆசியாவில் பெரும்பாலும் இருப்பவை கரியன் காகம், வீட்டுக் காகம் ஆகியவையே.

அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பிய இனங்கள் பலவும் இருக்கின்றன.

தமிழர் நம்பிக்கையில் விரத நாட்களில் காக்கைக்கு உணவிட்டு உண்ணும் பழக்கம் இருக்கின்றது. அவுஸ்திரேலிய பூர்வகுடி மக்களும் காக்கைகளை கலாசாரத்தின் சின்னமாகவும் மூதாதையரின் அம்சமாகவும் கருதினார்கள்.

பஜ்ஜி சுட்ட ஓர்நாளில் அடுப்பில் வேகும் போதே மணத்தில் அடுக்களை பல்கனியில் வந்து கூப்பிடத் தொடங்கிவிட்டார்கள் இருவர். ஒருவர் பஜஜியுடன் ஓடிவிட்டார் மற்றவர் சாப்பிடுகின்றார்.  

சிவ பூசைக்காக அகத்திய முனிவர் கொண்டு வந்து கங்கை நீரை வைக்க விநாயகர் காகமாக உருவெடுத்து வந்து கமண்டலத்தைத் தட்டிவிட நீர் வழிந்து ஓடி காவிரி ஆறு ஆகியது என புராணங்கள் சொல்கிறது. காகங்கள் பற்றி இலக்கியத்திலும் வந்திருக்கின்றன.

தேங்காய் சாப்பிட ஆசையாக இருக்கு எனக்கும் தாவேன்

'கில்காமேஸ்'  என்ற நூல் காகங்கள் பற்றியது உலகின் பழமையான நூலாகக் கருதப்படுகின்றது. ஐரிஸ் புராணங்களின் படி காகங்கள் போர் மற்றும் இறப்பிற்கான 'மாரிகின்' என்ற கடவுளாகக் கருதப்படுகின்றது.

சனிபகவானின் வாகனமாகவும் கொள்கிறார்கள்.


மத்திய ஆசியாவில் முதன் முதலில் தோன்றியதாக கருதுகிறார்கள். பின்னர் வட அமெரிக்கா ஆபபிரிக்கா ஐரோப்பா அவுஸ்திரேலிய நாடுகளுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது.

காக்கைகள் மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும் திறன் உள்ளவையாக இருக்கின்றன. இவை உணவைப் பகிர்ந்து உண்ணும் குணத்தை உடையன.
இருபது வருடங்கள் வரை உயிர் வாழக் கூடிய பறவை.
கூட்டாக உண்டு மகிழ்வோம்

பெண் காகங்கள் மூன்று வருடத்திலும், ஆண்காகாங்கள் ஐந்து வருடத்திலும் பருவமடைந்து கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.

Thanks :- commons.wikimedia.org

பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தின் பின்பே முட்டை இடுகின்றன. முட்டைகள் நீல பச்சைப் பின்னணியில் மண்நிறப் புள்ளிகள் கொண்டவையாக இருக்கும். நாலு ஐந்து முடடைகள் இடும்.

nature.gardenweb.com
முட்டை வெளி வந்து 6 வார காலத்தில் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கத் தயாராகிவிடும்.

அமெரிக்கக் காடுகளில் வாழ்ந்த காகம் அதி கூடுதலாக முப்பது வருடங்கள் வாழ்ந்ததாக சொல்கின்றார்கள்.

கிளிகளைப் போல் காகங்களும் மனிதக் குரலில் பேசும் திறன் பெற்றவை எனச் சொல்லப்படுகிறது.

சொல்லேன் என்ன வாங்கித்தர ஜஸ்கிறீமா சோடாவா மைலோவா.

அமெரிக்க மீன்வள உயிரினங்கள் சேவை மையத்தில் தகவலின் படி
ஹவாயன் காகம், மரியனா காகம் உலகின் அழிந்து போன உயிரினங்களின் வகைகளில் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளனவாம்.

இலங்கையில் 'காக்கைத் தீவு' என்ற இடமும் இருக்கின்றது.

பாலர் பாடல்களில், கதைகளில் காக்கையாருக்கு முக்கிய இடம் உண்டு.

'அண்டங்காக்கா கொண்டைக்காரி'... என்று பாடத் தோன்றுகிறதா.

நவீன கால புத்திசாலிக் காக்காவை பாருங்கள் ..........


0.0.0..0.