அனைவருக்கும் இனிய கிருஸ்மஸ் தின வாழ்த்துக்கள்
உலகெங்கும் உள்ள கிருஸ்தவர்கள் அனைவரும் பாலகன் யேசு பிறந்த டிசம்பர் 25ம் திகதியை கிருஸ்மஸ் தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.
2010 ஆண்டுகளுக்கு முன் அவதரித்த அவர் இன்றும் நிதம் நிதம் கோடிக்கணகான மகள் உள்ளங்களில் நிறைந்திருந்திருக்கிறார். நம்பிக்கையூட்டி, வாழ்வில் நிம்மதியை நிறைவித்து போதிக்கவும் புதுமைகள் செய்யவும் செய்கிறார்.
முற்று முழுதாக சைவப் பாரம்பரியம் நிறைந்த கிராமத்தில் பிறந்த எனக்கு முதல் முதல் கிருஸ்மஸ் பற்றிய நினைவுகளுக்கு காலாக இருப்பவர் வேதக்கார அம்மா என எங்கள் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி சாமுவேல் முது அன்னையாவர்.
கரோல் பாட்டுக்கள், கிருஸ்மஸ் பப்பா ஆகியவை எமக்கு புதுமையானதாகவும், ஆச்சரியம் ஊட்டுவதாகவும் அமைந்திருந்தன.
விசேட தினத்தில் அவர் அனுப்பும் கேக்கின் சுவை இன்றும் வாயில் நீர் ஊற வைக்கிறது.
பியானே இசையில் முதல் முதல் கிறங்கியதும் அவரது இல்லத்தில்தான். இசைக்கு மேலாக பெரிய பெட்டகம் போன்ற கறுத்த அந்த வாத்தியம் எங்களுக்கு கிளர்ச்சியளிப்பதாக இருந்தது.
சின்னுவின் கிறிஸ்மஸ்ற் பொழுதுகளில் கீதங்கள் இசைக்கப் பழக்கிய செல்வி நல்லதம்பி ரீச்சருக்கும் எங்கள் அன்பும் நன்றியும் என்றும் இருக்கும்.
இப்பொழுது கொழும்பு வாசி்.
அண்மையில் கடைத்தெருவுக்கு சென்றிருந்தேன்.
பம்பலப்பிட்டி மஜஸ்டிக் சிட்டி இது மிகவும் பிரபலமான Shopping complex . பலநூறு கடைகள் அங்கு நிறைந்திருக்கும். உடைகள், பொம்மை, நகை,செருப்பு, கம்பியூட்டர், டிவீடி, உணவுவகை என எந்தப் பொருளின் பெயரைச் சொன்னாலும் அவற்றிற்கான கடைகள் அங்கிருக்கும்.
பண்டிகைக் காலம் என்பதால் அழகுற அலங்கரித்திருக்கிறார்கள்.கண்டுகளிக்க ஒரே சனக்கூட்டம். நேரம் போனது தெரியவில்லை.
பெரிய கிருஸ்மஸ் மரம் வைத்து, பலூன், ஒளிர் விளக்குகள் என அலங்காரம் பிரமாதம்.
இசைக் குழு தனது கைவரிசையைக் காட்டுவதற்கு தயார் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
இறங்கி வந்தால் சன்டா குழந்தைகளுக்கு ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார். கையில் கமரா இல்லை. மொபைல் போன் கமராவில் சிறைப் பிடித்தோம் அவரை.
வெளியே வந்தால் கண்ணைப் பறிக்கும் மஞ்சள் ஒளிக்குமிழ்கள் மனத்துக்கு உச்சாகத்தைத் தந்துகொண்டிருக்கின்றன.
அவற்றையும் அடக்கினோம் மொபைல் கமராவில்.
காலி வீதி ஓரமாகவும், ஸ்டேசன் வீதி முடக்கிலும் அலங்கார விளக்குகள் ரம்யமாக ஒளிர்ந்து கொண்டிருந்தன.
வீதி ஓர மரத்தில் மின் குமிளிகள் ஓணான் போல ஊர்ந்து ஏறி ஒளி பரப்பிக் கொண்டிருக்கின்றன.
அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டுவோம் பரமபிதாவிடம்.











