Sunday, February 26, 2012

வண்ணத்துப் பூச்சியில் மயங்கவும் வண்ணத்துப் பூச்சியாகப் பறக்கவும்

வசந்தம் வந்தது எனச் சொல்லாமல் சொல்லி செட்டை அடித்து மகிழ்ந்து திரியும். பல வர்ண நிறங்களால் அழகிய பட்டுச் சட்டை தரித்து அனைத்துக் கண்களையும் கவர்ந்து இழுப்பார். அதன் அழகில் எல்லோரும் மயங்கி நிற்பதில் ஆச்சரியமில்லை.

பட்டாம் பூச்சி, தட்டாரப் பூச்சி, வண்ணாத்திப் பூச்சி என்ற பெயர்களாலும் அழைப்பார்கள்.


சிறுவயதில் வண்ணத்துப் பூச்சியார்களாகி கைகளை சிறகுகளாக்கிப் பாடிய பாலர் பாடல் ஒன்று நினைவுக்கு வருகின்றது.


வண்ணத்துப் பூச்சி வண்ணத்துப் பூச்சி
பறக்கிறது பார் பறக்கிறது பார்
அழகான செட்டை அழகான செட்டை
அடிக்குது பார் அடிக்குது பார்

சிவப்பு மஞ்சள் நீலம் பச்சை
 பொட்டுக்கள் பார் பொட்டுக்கள் பார்
 தொட்டதுமுடனே தொட்டதுமுடனே
 பட் என பறக்கிறது பார்

தேனதைக் குடித்து தேனதைக் குடித்து
களிக்குது பார் களிக்குது பார்
வண்ணத்துப் பூச்சி வண்ணத்துப் பூச்சி
பறக்கிறது பார் பறக்கிறது பார்.

எங்க வீட்டு வண்ணத்துப் பூச்சி
பறக்கிறது பார் பறக்கிறது பார்

வண்ணத்துப் பூச்சிகள் இலைகளில் முட்டைகளைப் போடும். அவை 3-12 நாட்களில் கட்டர்பிலர்களாக வெளி வரும். இவை இலைகளை உண்டு வளரும்.


இரு வாரங்களின் பின் கம்பளிப் புழுவாக வளர்ந்து திரியும். மயிர்கொட்டி, மசுக்குட்டி என்றும் அழைப்பார்கள். கம்பளிப் புழுக்கள் இலைகளின் அடிப்புறம் ஒட்டிக் கொண்டு இருந்து தலை கீழாகத் தொங்கும். அது தோலை சிறிது சிறிதாகக் கழற்றி கூட்டுப் புழுவாக மாறிவிடும்.


இவையே இரு வாரங்களின் பின் வண்ணத்துப் பூச்சிகளாக வெளிவருகின்றன. பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும். உணவு உற்பத்திக்கு வழிகோலும் ஒரு அழகிய உயிரினம்.

இவை வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் இயல்புடையன. சூழலுக்கு ஏற்றதுபோல தமது வண்ணங்களை மாற்றிக் கொள்ளும்.மீண்டும் பழைய வர்ணத்திற்குத் திரும்பும் என்கிறார்கள் இதன் ஆராச்சியாளர்கள்.

Blue glaxy tiger butterfly. Thanks:- dreamstime.com
இவற்றின் வண்ணங்களுக்கு நிறமிகள் அல்ல. அவற்றின் கலங்களின் அமைப்புத்தான் காரணம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

Ceylon Rose Butterfly Thanks:- http://en.wikipedia.org/wiki/Butterflies_of_Sri_Lanka

பறவைகள் பருவ காலங்களில் கண்டம் விட்டுக் கண்டங்களுக்குச் செல்வதுபோல வண்ணத்துப் பூச்சிகளிலும் சில இனங்கள், குறிப்பாக மோனார்ச் Monarch இனங்கள் நீண்ட நாட்கள் வாழும் இயல்புடையவை. 4000- 4800 கிலோ மீற்றர் தூரம் வரை நீண்ட தூரங்கள் பறந்து செல்லும் வல்லமையுடையன.


 

வசந்தம் வந்ததற்கு அறிகுறியாக சில மாதங்களுக்கு முன் மெக்சிகோ நாட்டில் பெரும்தொகையான வண்ணத்துப் பூச்சிகள் ஒன்று கூடியிருக்கின்றன. அதைப் பல நாட்டினரும் சென்று கண்டு களித்திருக்கிறார்கள்.


வண்ணத்துப் பூச்சிகளில் காடுகளில் வசிப்பவையில் சில விஷமுள்ளவை. வண்ணத்துப் பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகை இனங்கள் உள்ளன என்கிறார்கள். தென்னிந்தியாவில் 315 வகைகள் இருக்கின்றனவாம்.

இலங்கையில் சிவனொளிபாத யாத்திரை காலத்தில் பெரும்தொகையான வண்ணத்துப் பூச்சிகள் கூட்டமாக அப் பகுதியில் சிறகடித்துப் பறந்து செல்வதைக் காணலாம்.

Thanks:- ceylonbestholiday4u.lk
வண்ணத்துப்பூச்சி சரணாலயம் தெஹிவல மிருகக் காட்சிச் சாலையில் இயற்கையொடு இசைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல இன வண்ணத்துப் பூச்சிகளைக் கண்டு களிக்கலாம்.

இப்பொழுது கொலம்பியாவில் வீட்டுவளர்புப் தொழிலாகவும் வண்ணத்துப்பூச்சிகளை வளர்க்கிறார்கள். வண்ணத்துப்பூச்சிகளின் ஆராச்சிகள் விரிவடைந்திருப்பதால் வளர்ப்பும் அதிகரித்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.

சிங்கப்பூரில் ஷாங்கி விமான நிலையத்தில் பட்டாம் பூச்சிப் பூங்கா அமைத்து இனங்கள் அழியாமல் காத்து வருகிறார்கள்.



3500 வருடங்களுக்கு முன்பிருந்தே எகிப்தில் வண்ணத்துப் பூச்சிகள் வர்ணம் தீட்டப்பட்டிருக்கினறன. பெரும்பாலும் ஆலயங்கள் கட்டிடங்களில் செதுக்கப்பட்டிருப்பதும் காண முடிகிறது.

இப்பொழுதும் ஆடை ஆபரண அணிகலங்களில் வண்ணத்துப் பூச்சிகள் முதலிடம் பிடித்து வருவதைக் காணலாம்.


சிறுவர்கள், இளம் வயதினர், பெரும்பாலும் விரும்பி அணிந்திருப்பதைக் காணலாம்.


மரங்களை அழிப்பதால் அமர்வதற்கே இடமின்றி அலைந்து திரிகின்றன வண்ணத்துப் பூச்சிகள்.

ஆனால் தபால் முத்திரையிலும் தேசங்கள் கடந்து பறந்து திரிகிறது.

அண்மையில் படித்த கவிதை ஒன்று,

பேசிப்பழக ஆசைதான்....   என்று தொடங்கி


"....ஓவியம் தீட்ட ஆசைதான்
ஆனாலும்
வண்ணத்துப் பூச்சியே
நீதான் என் யன்னல் ஓரம்
மழைச்சாரலுக்குக்
கூடத் தங்குவதில்லையே..."

இக் கவிதை மனதில் சோகமாக அமர்ந்து விட்டது. இயற்கையைப் பேணுவதில் நாம் காட்டும் அக்கறையின்மை பல உயிரினங்கள் அரிதாகிக் கொண்டே செல்கின்றன. இந்நிலையில் வண்ணத்துப்பூச்சியார் விதிவிலக்கா?


வண்ணத்துப்பூச்சிகளை கவர்ந்து இழுக்கக் கூடியதாக தோட்டங்கள் அமைத்தால் அவற்றைப் பாதுகாக்கலாம். அவற்றின் உணவுக்காக மலர்த் தோட்டங்களை அமைப்பதுடன் கவரும் வகையில் செடிகள் கொடிகள் அமைத்தால் அவற்றின் இனவிருத்திக்கும் வழிவகுக்கும் என்கிறார்கள்.

பூக்கள் இருக்கும் அனைத்துச் செடிகளிலும் தேனை அருந்தாது தனக்குப் பிடித்த செடியின் பூவை மட்டும் பருகும். அடர் சிவப்பு நிறப் பூக்கள் வண்ணத்துப்பூச்சிக்குப் பிடித்தமானவை. செம்பருத்திப் பூக்கள், சூரியகாந்தி, டெய்சி, பெடூனியா இனங்கள் சில வகை அல்லிப் பூக்கள், மஞ்சள் கூம்பு மலர்கள் பிடித்தமானவை எனச் சொல்கிறார்கள்.

என்ன? பூந்தோட்டம் அமைக்கத் தயாராகிவிட்டீர்களா?


வீட்டில் தோட்டம் அமைப்பதின் மூலம் அழியும் இனத்தைப் பாதுகாக்கலாம்.. உங்களைச் சுற்றியும் அழகிய வண்ணக் கூட்டத்தினர் சிறகடித்துப் பறப்பர்.

நீங்களும் இரு கைகளையும் விரித்து  அவையுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகப் பறக்கலாம்.

மாதேவி

Wednesday, December 21, 2011

பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை.


மார்கழிப் பூவே... மார்கழிப் பூவே...



பாடிக்கொண்டே ஆரம்பிப்போமா ?

மலர் என்றாலே நினைவுக்கு வருவது இனிய நறுமணம், அழகு, மென்மை, காதல்.

சங்கப் பாடல்களிலே மலர்களை பெண்களுக்கு உவமையாக வர்ணித்திருப்பதைக் காணலாம்.

காந்தள்

காந்தள் கையழகி, ரோஜா வதனத்தாள்.....

செண்பகம்

நொச்சி, தும்பை, கொன்றை, பாதிரி, புங்கை,  குரந்தை, வாகை, வெட்சி, குறிஞ்சி மலர், இருவாட்டி, அரளி, முல்லை, பிச்சி, மல்லிகை, பன்னீர், ஆம்பல், அல்லி, குமுதம், தாளம்பூ, செண்பகம், மனோரஞ்சிதம், சம்பங்கி, ரோஜா, துளசி, பவளமல்லி, நந்தியாவட்டை, சாமந்தி,சூரியகாந்தி,மந்தாரை எனப் பற்பல மலர்கள் பூத்து மணம்பரப்பி நிற்கின்றன.

மனோரஞ்சிதம்

மகிழம்பூ, செண்பகப்பூ, மரிக்கொழுந்து, நாகலிங்கப்பூ, புன்னை, செவ்வரத்தை, கனகாம்பரம், என அடுக்கிக் கொண்டே போய்,  ஓர்க்கிட், எகஸ்சோரா, போகன்விலா, அந்தூரியம் எனப் பலப்பல உருவாக்கங்கள் இழுத்துக் கொள்ளுகின்றன எம் மனங்களை.

நாகலிங்கப்பூ

சங்கப் பாடல்களில், மிகவும் புகழ்பெற்ற குறிஞ்சி மலர் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மலரும் என்பது பலரும் அறிந்ததுதான். மலைச்சாரலிலே பலவகையான பூக்கள் இருந்தபோதும் தேன் நிறைந்த இம் மலருக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

குறிஞ்சிப்பூக்கள்

குறிஞ்சி செடிகளின் தலையில் நீலநிறப் பூக்கள் மணியைக் கவிழ்த்தாற்போல காட்சி கொடுப்பதாக கவிஞர் ஒருவர் சொல்கின்றார். இம் மலரில் இருநூற்றி ஐம்பது வகைகள் இருப்பதாக கூறுகின்றார்கள். ஐம்பத்தொன்பது வகை தென்னிந்தியாவில் உள்ளது என்கிறார்கள்.குறிஞ்சி மலரின் தேன் மருத்துவத்தில் அதிக இடத்தைப் பிடிக்கின்றது. அதனால்தான் குறிஞ்சித் தேனுக்கு அதிக கிராக்கி. 

நிலங்களை ஐந்நிலங்களாக பூக்களின் பெயர்களாலேயே குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் எனப் பிரித்திருந்தார்கள்.

குறிஞ்சிப் பாட்டில் பூக்களின் பெயர்கள் நிறைந்த பாடல் இருக்கின்றது. அரசர்கள் போரில் வெற்றிபெற்று திரும்பும்போது வாகை மலர்மாலை சூடி வருவார்கள்.

அரசிமார் தாளம்பூ ஜடை போட்டிருப்பார்கள்.

பெண்கள் தலையில் சூடிக்கொண்டார்கள். காதலின் பரிசாகவும் பூக்கள் பண்டைய காலம்தொட்டு; அங்கம் வகிக்கின்றன. பூக்களை மாலையாகக் கட்டி திருமணநாளில் அணிந்து கொண்டனர்.  பூக்களை மாலையாகத்தொடுத்து இறைவனுக்கு சாத்தி வணங்கினர். பின்னர் பெண்கள் பூச்சரங்கள், கதம்பங்கள், மாலைகள் எனத்தொடுத்து அணிந்தார்கள்.

'கார்நறுங்கொன்றை' என கொன்றையைப் புகழ்ந்து பாடியுள்ளார் கவிஞர். முல்லைக்கு தேர்கொடுத்த பாரிவள்ளலையும் அறிவோம்.

அனிச்சம்

அனிச்சம் பூவை விருந்தினருக்கு உவமையாக 'மோப்பக் குழையும் அனிச்சம்'என்கிறார் வள்ளுவர். 

குவளை மலரின் மணம் வீசுகின்ற திரண்ட கரிய கூந்தலையும், ஆம்பல் மலரின் மணம்; தரும் பவள வாயினையும் உடையவளே என்றெல்லாம் காதலன் காதலியை வர்ணித்திருப்பதைக் காணலாம்.

அல்லி, ஆம்பல் இனத்தில் ஐம்பது வகையான கொடிகள் உள்ளன.
மல்லிகை( JASMINUM SAMBAC) இருநூறு இனங்கள் உள்ளன என்கிறார்கள்.

வேறோரிடத்தில் காதலன் காதலியைப் பிரிந்து செல்கின்றான் 'நெய்தல் மலர்போன்ற அவளது கண்' என்கூடவே வருகின்றதே என நினைக்கின்றான.;
நாட்டுப் பாடல்களிலும், சிறுவர் பாடல்களிலும் பூக்கள் தனியிடம் பிடித்துள்ளன.

நறுமண மலர்களிலிருந்து அத்தர், பன்னீர், ரோஸ் எசன்ஸ் செய்து கொள்கிறார்கள்.

இறைவனுக்கு அர்ச்சிக்கும் பூக்கள் சிறந்த இடத்தை வகிக்கின்றன. காட்டுப்பூக்கள், மயானப்பூக்கள், நீர்ப்பூக்கள், செடிப்பூக்கள், கொடிப்பூக்கள், மரப்பூக்கள் எனப் பலவகையாக இருக்கின்றன.

இமையமலைச் சாரலில் பல்வகையான அரிய அழகிய பூக்கள் காணப்படுகின்றன.

பூக்கள் பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன. அதனால்தான் பல்நெடும் காலமாக மருத்துவத்தில் பயன் படுத்தி வருகின்றார்கள். உணவாகவும் உட்கொள்ளப் படுகின்றன. 'டேன்டேலியன் மலர்கள்' வைனாக தயாரிக்கப் படுகின்றன. 'ஹாப்ஸ் மலர்கள்' பீரை சுவையூட்டப் பயன்படுத்தப்படுகின்றன.

ஓணம் பண்டிகையில் பூ அலங்காரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
மார்கழியில் கோலத்தில் பிள்ளையார் வைத்து  பூசணிப்பூக்களால் வணங்குவார்கள்.

தைப்பொங்கலன்று ஆவாரம் பூக்கள், கண்ணுப் பூக்களை வீட்டு வாயிலில் வைப்பார்கள்.ஆவாரம் பூவின் மஞ்சள் நிறம் மங்கலத்தின் அடையாளமாகக் கொள்ளப்படுகின்றது.

ஐம்பதாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ கார்ட்ஸ் என்கிறார்கள்.

நெப்பந்திசு (NEPENTHES)    பூச்சியை உண்ணும் தாவரம். இது ஒருவகை குடுவைபோன்ற தோற்றத்தை உடையன. பூக்களின் முனைகளில் நீண்ட மயிர்கள் நீட்டிக் கொண்டிருக்கும்.

நெப்பந்திசு

பூக்களின் கவர்ச்சியாலும், தேனாலும், வாசனையாலும் ஈர்க்கப்படும் பூச்சிகள் மயங்கி பூவினுள் செல்லும். பூவின் வழுவழுப்பான சுரத்தலினால் பூச்சிகள் குடுவையின் உள்ளே விழுந்து விடும். பூச்சிகள் வெளியே வரமுடியாதவாறு பூக்களின் உள்நோக்கி வளைந்திருக்கும் மூடிகள் தடுத்துவிடுகின்றன.

அதிக அளவில் ஒரே தடவையில் பூக்கும் பூக்கள் வைனீஸ்விக்டோரியா என்ற தாவரத்தில் பூக்கின்றன.

ஐம்பதாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ 'கார்ட்ஸ்' என்கிறார்கள்.

உலகின் மிகச் சிறிய மலர் 'வொல்பியா ' எனப் படுகின்றது. இவை குலைவடிவில் இலகுவாக வீழ்ந்து விடக் கூடியதாக இருக்கின்றன. இதில் இரண்டுவகை இனங்கள் உள்ளன..

கிளிபோலவே சொண்டு தலை, வால் என அச்சொட்டாக ஒரு பூ தாய்லாந்து தேசத்தில் இருக்கிறது. கிளிப்பூ (Parrot Flower) என அழைக்கப்படும் இது அங்கும் இப்பொழுது அரிதாகவே காணப்படுகிறதாம்.

கிளிப்பூ


இயற்கையின் படைப்பில் பூக்கள் எவ்வாறேல்லாம் அதிசயிக்க வைத்து மகிழ்ச்சி தருகின்றன..



பூக்களின் சமையலுக்கு பூக்களைப் பறியுங்கள்  பதிவைக் கிளிக்குங்கள்.

:-மாதேவி-:
0.0.0.0.0.0.0




Saturday, October 15, 2011

நீந்தி மகிழ கசூரினா கடற்கரைக்கு வாங்க

உயர்ந்த சவுக்க மரங்களுடன் இயற்கையின் படைப்பில் உருவான அழகிய கடற்கரை வடபகுதியின் கிழக்குக் கடற்கரை மணற்காடு ஒருவித அழகைத் தருகிறது என்றால் இங்கு கசூரினாவில் இன்னொரு அழகு மிளிர்கின்றது.


சவுக்க மரங்கள் நிறைந்திருப்பதால் கசூரினா Casuarina beach என்ற காரணப் பெயர் வந்திருக்கலாம். கடல் அரித்தாலும் சாய்திடாது மண்ணில் பற்றுக் கொண்டு இறுகப் பற்றி நிற்கும் சவுக்க மரங்கள் இதன் விசேஷம்.


வெற்றுக் கட்டுமரத்தில் கரைநோக்கி வருகிறார்கள் மீனவர்கள். மீன்கள் ஒழித்து ஓடிவிட்டனவா?

மகிழ்ச்சியான செய்தி அலைகள் அள்ளிச் சென்றுவிடும் என்ற பயம் இன்றி இங்கு குளித்து மகிழலாம்.


மணற்காட்டுக் கடல் ஆர்ப்பரிக்கும் கடல் என்பதால் அங்கு குளிக்க அனுமதி இல்லை.இங்கு மக்கள் தொலை தூரத்திலும் சென்று நீந்தி மகிழ்வதைக் காணலாம்.

மாலைச் சூரியனின் தண்மையான ஒளிக்கதிரில் நீச்சலிட்டு மகிழ்கிறார்கள் சுற்றுலா வந்தவர்கள்.

இவரைப்போல கடலில் மூழ்கிவிடுவேன் என கை உயர்த்தி உதவிக்கு மற்றவர்களை அழைக்க வேண்டிய அவசியம் இங்கில்லை. மிகவும் பாதுகாப்பான கடல்.


வட பகுதியின் காரை நகரில் இக்கடற்கரை அமைந்துள்ளது.யாழ் நகரில் இருந்து ஏறத்தாள இருபது கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. 45 நிமிடத்தில் வாகனத்தில் சென்றடையலாம்.


யாழ் குடாவின் மிகச் சிறந்த கடற்கரை எனலாம். பெரியஅலைகள் இல்லாத அமைதியான நீலக்கடல். கடலுள் சில மைல்கள் தூரம் வரை நடந்து செல்ல முடியும் என்கிறார்கள்.


வடக்கில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களில் இதுவும் ஒன்று. வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளை தன்னகத்தே இழுத்துக் கொள்ளும் இடமாக மிளிர்கின்றது.


சிலர் குடித்துக் கும்மாளமிடுவதும், காதல் சோடிகள்  கண்ணியக் குறைவாக நடப்பதும் சூழலுக்கு ஒவ்வாததாக மற்றவரை நாண வைக்கிறது.

சாரணியர் பயிற்சி முகாம்கள் இங்கு நடப்பதுண்டு. மிகவும் பிரபல்யமான இடமாக இருந்தாலும் லக்ஸரி ஹோட்டேல்ஸ் இங்கு கிடையாது. தங்கி இருந்து ரசிக்க விரும்புவோர் கடற்கரை ஓரம்  குறைந்த விலையில் வாடகைக்கு வீடுகள் எடுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.


பொலித்தீன் பைகளும் வெற்றுப் போத்தல்களும், உண்டு மிஞ்சிய எச்சங்களும் எனச் சூழல் மாசுபடாது இவ்வாறு அழகாக இருக்க எல்லோரது ஒத்துழைப்பு அவசியம்.

சுனாமியாலும் போராலும் பெரிதும் பாதிக்கபப்ட்டிருந்தது. போர் நின்ற பின் ஒரு சில வருடங்களாக மக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


யாழ் பெரு நிலப்பரப்பிலிருந்து காரை நகருக்குச் செல்லும் பாதை இப்பொழுது திருத்தப்பட்டு போக்குவரத்திற்கு வசதியாக இருக்கின்றது.


பெருந்திரளாக மக்கள் இங்கு வருகிறார்கள். கடலில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.


உப்பு நீரில் குளித்து வந்தவர்கள் தங்களை நல்ல நீரில் கழுவிக் கொள்ள நன்நீர்க் கிணறு இருக்கிறது.


கழிப்பிட வசதியும் உடைமாற்றுவதற்கான இடமும் இருக்கின்றன. ஆனால் சுகாதாரமானதாக அவை இல்லை. அவற்றைச் சீர்செய்துகொள்வது அவசியம்.


இயற்கை வழங்கியுள்ள அழகை பண்புடன் பாதுகாத்து வருவது மக்கள் கைகளில்தான் தங்கியுள்ளது. இங்கு வரும் மக்கள் இதற்கு ஒத்துழைப்பு நல்கி சுற்றுச் சூழலையும் கெடாது பாதுகாப்பார்களேயானால் அதுவே அவர்கள் இயற்கைக்குச் செய்யும் கைமாறாக இருக்கும்.


இயற்கையைப் பேணி நமக்கு அளித்துள்ள வளங்களைக் காத்து இன்புற்று இருப்போம்.

:-மாதேவி-:

Monday, September 12, 2011

யாழ் மக்களின் உள்ளங்கவர் அரசன்

நல்லூர்க் கந்தன் யாழ் இந்துக்களின் மனதில் என்றும் நிறைந்தவன். பண்டைக் கால அரசுகள் முதல் இன்றைய அரசுகள் வரை ஆட்சிகள் மாறியபோதும் மக்கள் மனதைப் புனிதப்படுத்தி என்றென்றும் அவர்கள் உள்ளத்தில் அரசனாக வீற்றிருப்பது நல்லூர் கந்தன்தான்.

எங்களைக் காப்பவனின் வரலாற்றை முழுமையாகப் பேணாதவர்களாக நாம் இருப்பது வருந்தத்தக்கது.


13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகன் அல்லது கூழங்கை சக்கரவர்த்தியால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. ஆரிய சக்கரவர்த்திகள் நல்லூரை இராசதானியாக்கி ஆண்டு வந்த காலத்தில் மன்னன் சென்று வணங்கிய தலை சிறந்த ஆலயம் இது.


15 ஆம் நூற்றாண்டில், தென்னிலங்கையைச் சேர்ந்த கோட்டே அரசனின் சார்பில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சப்புமால் குமாரயா எனப்பட்ட சண்பகப்பெருமாள் என்பவனே நல்லூரைக் கட்டுவித்தானென்றும் சிலர் கூறுவர். சிங்கை பரராஜசேகரன் இவ்வாலயத்தைப் புனரமைத்து சிறந்ததாக ஆக்கியதாகவும் சொல்கிறார்கள்.

போர்த்துக்கேயப் படையெடுப்பில் ஆலயம் அழித்தொழிக்கப்பட்டது. பின்னர் மாப்பாணர் முதலியார் பரம்பரையினரே இவ் வாயலயத்தை அமைத்தனர் என்கிறது யாழ்பாண வைபவம் என்ற நூல்.


போர்த்துக்கீசருக்கு முந்திய நல்லூரின் அமைப்புப் பற்றியும், அங்கிருந்த கட்டிடங்கள் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளக்கூடிய அளவுக்குப் போதிய தகவல்கள் இல்லை. யாழ்ப்பாண மன்னனான ஆரியச் சக்கரவர்த்திகளின் அரண்மணையை அண்டி பழைய கோவில் அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது.

யாழ் மண்ணில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் இது. ஆலய நிர்வாகம் மிகவும் சிறப்பானது. நேர அட்டவணை, பூஜை என தினப்பூசைகள் நேரம் தவறாமல் நடைபெற்று வருகின்றன. இன்றும் ஒரு ரூபா மட்டுமே கொடுத்து அடியார்கள் பூசைக்கு அர்ச்சனை செய்ய முடிவது இந்த ஒரு கோவிலில்தான்.


25 நாட்கள் ஆலய உற்சவ விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் விழாவிற்காகச் சென்று விரதம் இருந்து நல்லூர் கந்தனை வழிபடுவார்கள். சப்பறத் திருவிழா, மஞ்சம், தேர்த்திருவிழா, தீர்த்தம், பூங்காவனம், மிகவும் சிறப்பாக நடைபெறும். கோடான கோடி மக்கள் கலந்து கொள்வர்.



தேர்த் திருவிழா அன்று சுவாமியைத் தேரில் வைத்து வடம் பிடித்து இழுத்து வருவார்கள். தேர் இருப்பிடம் அடைந்ததும் சுவாமிக்கு பச்சை சாத்தி அலங்கரித்து கோயில் இருப்பிடம் கொண்டு செல்வர். தேர்த் திருவிழாவில் காவடி, தீ மிதித்தல், கற்பூரச் சட்டி, பறவைக் காவடி, தூக்குக் காவடி, அங்கப் பிரதிஸ்டை, அடி அழித்தல், என அடியார்கள் தங்கள் நேர்த்திக் கடன்கனை நிறைவேற்றுவர்.

யாழ் மண்ணின் சித்தர்களில் ஒருவரான யோகர் சுவாமி, நல்லூர்க் கந்தனின் தேரடியில் அமர்ந்திருந்து வெகு நேரம் தியானத்தில் இருப்பார் எனச் சொல்வார்கள்.

கோவிலின் பிரதான கோபுரம் கிழக்குப் பார்த்த வண்ணம் இருக்கிறது. இப்பொழுது தெற்குப் புறத்திலும் ஒரு புதிய கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் புகழ் மிக்க இவ்வாலய வருடாந்த உற்சவம் தேர், தீர்தத் திருவிழா மிகவும் சிறப்புடன் நிறைவு பெற்றுள்ளது. கந்தன் தேரில் வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.


குடா நாட்டு மக்களுடன் புலம் பெயர் மக்கள், வெளிநாட்டினர், தென்னிலங்கை மக்கள் என சகல பாகத்திலிருந்தும் மக்கள்   வருகை தந்து திருவிழாக்களைச் சிறப்பித்திருந்தனர்.

இலட்சக்கணக்கான கந்தன் அடியார்கள் இவ் விழாவில் பங்கு பற்றி கந்தன் அருள் பெற்றுள்ளார்கள். 

யாழ் தலங்களை வலம் வர:-


மாதேவி
0.0.0.0.0.0.0

Thursday, June 30, 2011

தொல்லியல் எச்சமாகுமா யாழ் கோட்டை ?

யாழ்ப்பாண வரலாற்றின் சின்னமாக விளங்குகிறது யாழ் கோட்டை. யாழ் கடல் நீரேரியின் கரையில் இது அமைந்துள்ளது. ஆறு நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட நீள் வரலாறு அதில் அடங்குகிறது.

கடந்த தூரம் நீளம்

ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட கோட்டை பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் மிகவும் பலமானதாகவும். அற்புதமானதாகவும் கட்டப்பட்டிருந்தது. கீழைத்தேச நாடுகளிலுள்ள கோட்டைகளில் யாழ்கோட்டை பலமானதாகவும், சிறந்ததாகவும் இருப்பதாக கட்டிடக் கலை நிபுணர்கள் எடுத்துரைத்திருக்கிறார்கள்.




முதலில் முஸ்லீம்களின் சிறிய பண்டகசாலையாக இக்கோட்டை இருந்ததாகவும் பின்னர் போர்த்துக்கேயர் அப் பண்டகசாலையை நாற்சதுரக் கோட்டையாக விரிவுபடுத்தியதாகவும் சில செய்திகள் கூறுகின்றன.

மாறாக சோழர் காலத்து மண்கோட்டையானது போர்த்துக்கேயரால் கற்கோட்டையாக  நவீனப் படுத்தப்பட்டதாகவும் வேறு சிலர் கூறுகின்றனர்.

போர்த்துக்கேயரின் யாழ்    கோட்டை (நன்றி தினகரன்)

1625ம் ஆண்டு போத்துக்கேயரால் கட்டப்பட்டது. 1680ல் ஒல்லாந்தரால் ஐங்கோண புதுவடிவில் கட்டப்பட்டது.


1680ல் ஒல்லாந்தரால்...

பின் 1795ல் ஆங்கிலேயர் வசம் வந்தது.


யாழ்ப்பாண கோட்டையின்     அமைப்பு (நன்றி தினகரன்)

 5 கொத்தளங்களைக் கொண்டதாக இருந்தது. கடல்நீர் ஏரியை அண்டி இரு கொத்தளங்களும், நிலத்தை அண்டி 2 கொத்தளங்களும் அமைந்திருந்தன. இந்தக் கொத்தளங்கள் உயர்ந்த மதில்களால் இணைக்கப்பட்டிருந்தன.

அடிப்பகுதி 40 அடி, உச்சியில் 20அடி. சுற்றிவர அகழி

கோட்டை மதில் அடிப் பகுதியில் 40அடி அகலமானதாகவும், உச்சியில் 20 அடி அகலமாகவும் அமைக்கப்பட்டிருந்தது. மதிலின் வெளிப்பக்கமாக முருங்கைக் கற்களால் அமைக்கப்ட்ட 4 அடிக் கட்டமைப்பு இருந்தது. உட்கோட்டையைச் சுற்றி நீராழி ஓடிக்கொண்டிருக்கும். கோட்டையைச் சுற்றியிருக்கும் 132 அடி அகலமான அகழியிது.

முதல் அரண்

 கோட்டை வாயில் பலம்வாய்ந்து இருந்ததாகத் தெரிகிறது. நீராழிக்கு வெளியேயும் கோட்டை மதில், பெரிய வாயில் இருந்ததற்கான அடையாளங்கள் இப்பொழுதும் இருக்கின்றன.

நான்கு தாழ் கொத்தளங்கள் வெளி மதிற்சுவரோடு இருந்ததாகவும், 19 காவல் அரண்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும், பத்தடிக்கு ஒரு பீரங்கி இருந்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன. இராணுவ பாதுகாப்பிற்கும், நிர்வாக நடவடிக்கைகளுக்கும் கோட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கோட்டை கதவைத் தாங்க பலமாக கொளுக்கி

கோட்டையின் வெளி வாயிற் கதவு 6 அங்குலத்திற்கு மேல் தடிப்பானதாக இருந்ததாகவும் போர் யானைகள் முட்டி உடைக்காதிருக்க கூடான ஈட்டிகள அதில் பொருத்தப்பட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

யாழ் கோட்டையிலிருந்த    ஒல்லாந்தத் தேவாலயம் (நன்றி தினகரன்)

கோட்டையின் தென் கிழக்குப் பகுதியில் சதுரங்கத் தேவாலயம் முன்பு இருந்தது. இப்பொழுது அழிக்கப்பட்டுவிட்டது.

கோட்டை இரண்டு வாயில்களைக் கொண்டிருந்தது. ஒன்று நீர்ப்பாதை. மற்றையது நிலப்பாதை. நீர்ப்பாதை கடலோரமாக அமைந்திருந்தது. நில வழிப் பாதையில்தான் பிரதான வாயிற்புறம் அமைந்திருந்தது. இது தொங்கு பாலத்தினால் தரையுடன் இணைக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலேயர் காலக் கோட்டைக்குள் கவர்னர் பங்களா, ராணி மாளிகை, சிறைச்சாலை என்பன இருந்தன. பிற்காலத்தில் கைதிகள் விசாரிக்கப்படும் இடமாக ராணி மாளிகை மாறியது.

எமக்குத் தெரிய சிறைக் கைதிகளை அடைத்து வைக்கும் இடமாக இருந்தது. பள்ளிச் சுற்றுலாவில் சென்று பார்த்திருக்கிறோம்.

பயமுறுத்தும் தூக்குமேடைக் கட்டிடம்

தூக்கில் இடுவதற்கான தூக்குமேடைக் கட்டிடம் இன்றும் காணக் கூடியதாக இருக்கிறது.

கோட்டையை அண்டிய பகுதியில் 600- 700 வருடங்களுக்கு முந்தியதாகக் கருதப்படும் ஈமச் சின்னம் மனிதர்கள் முறையான விதத்தில் அடக்கம் செய்யப்பட்ட இடம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது விஞ்ஞான ஆய்விற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.




பல மட்பாண்டங்கள் தாழிகள் உட்பட பெருமளவு பொருட்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவை 12ம் 13ம் நூற்றாண்டாம் காலத்தைச் சேர்ந்த சீன மட்பாண்டப் பொருட்கள் எனச் சொல்கிறார்கள்.

யாழ். பல்கலைக்கழக தொல்லியற்துறைத் தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் தலைமையில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.




யாழ்ப்பாணக் கோட்டையின் அகழ்வாராய்ச்சியின் போது ஒல்லாந்தர் காலத்துக்கு முற்பட்ட தொல்லியற் சின்னங்கள் மீட்கப்பட்டதாக இவ்வருட ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. பாண்டியர், பொலநறுவை மன்னர் கால நாணயங்களும் கிடைத்ததாகத் தெரிகிறது. புராதனகால சுக்கா, நாணயங்கள், மட்பாண்ட ஓடுகளும் கிடைத்ததாகப் பத்திரிகைகள் தெரிவித்திருந்தன.

தொல்லியல் எச்சமாக மறைந்து போன எமது  பாரம்பரியப் பொருட்களில் விரைவில் யாழ்கோட்டையையும் சேர்ந்து கொள்ளுமா?