Wednesday, December 2, 2009

தேடினோம் தேடினோம் லவர்ஸ் லீப்


நுவரெலிய நகரை ஓரிடத்தில் நின்றபடியே, நாற்புறமும் முழுமையாக ரசிக்கக் கூடியதாக ஒரு மலை உச்சியின் நட்ட நடுவே கட்டப்பட்டுள்ள சீ வியூ. கருடப் பார்வை என்றும் சொல்லலாமா? இதை சாந்திபுர என அழைக்கிறார்கள்.

கால்நடையாக மலை ஏறாமலே நேரடியாக வாகனத்தில் உச்சி வரை மேலேயே சென்று பார்க்கலாம். அழகிய தேயிலைத் தோட்டப் பாதைகளின் ஊடே சென்று மலை உச்சியை அடைந்தோம்.

உச்சியின் நடுவே ஒரு கட்டிடம். வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி கட்டடத்தின் ஏணிப்படிகளில் ஏறிச் சென்று காட்சிகளை ரசிக்கலாம்.

நன்கு குளிர்மையான காற்று வருடிச் செல்ல உடல் சிலிர்த்தது. நகர் ஒரு புறம், மறு புறம் தூரத்தே உயர்ந்தோங்கிய மலைத் தொடர்கள்.


நகரின் கட்டடிடங்கள் பொம்மை வீடுகளாக அழகு கூட்டின.


அங்கிருந்து பார்க்கும் போது கீழே தெரிகிறது ஒரு கோயிலின் உயர்ந்த கோபுரம்.


அதையொட்டி தேயிலை மலைச் சரிவுகள் பசுமை போர்த்தி நின்றன.

மற்றொரு புறம் ஒற்றை மரம் ஒன்று உயர்ந்து நிமிர்ந்து என்னை யார் அசைக்க முடியும் எனச் சொல்லி நிற்கிறது. இவ்விடத்தை சிங்கிள் ரீ என அழைக்கிறார்கள்.


மலைகளில் மேக மூட்டம் சூழ்ந்திருக்க ஏறத்தாள அரை மணிநேரம் நின்று சுற்றுச் சூழலை கண்களாலும் மனங்களாலும் ரசித்துவிட்டுத் திரும்பினோம்.

Lover Leap என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். சிறிய வீடுகள் தேயிலைத் தோட்டங்கள் ஊடே மணல்பாதை மேல்நோக்கி வளைந்து வளைந்து சென்றது.

உயர்ந்து செல்ல ஒரு மரத்தின் கீழ் சூலம் நாட்டப்பட்டு முனியாண்டி கோவில் என்ற பலகை நாட்டப்பட்டிருந்தது. பாதையைக் கடந்து உயர தேயிலைத் தோட்டங்களின் ஊடே வாகனம் ஏறி ஏறிச் சென்றது.

ஒரு புறம் மலை. மறுபுறம் கிடு கிடு பள்ளம்.

நீண்ட தூரம் சென்றதும் திடீரென பாதை குருட்டு முனையாக நின்றுவிட்டது.

வாகனம் தொடர்ந்து செல்ல வழியில்லை. வாகனத்தை திரும்பவும் போதிய இடம் இல்லை.

பயத்தில் உதறல் எடுத்தது.

வாகனத்திலிருந்து கீழே எட்டிப் பார்த்தால் பாதாளச் சரிவு.

விழுந்தால் சிதறு தேங்காய்தான். அனைவருக்குமே கிலி தொற்றிக் கொண்டது.

சிறுமிகள் இருவரும் பயத்தில் கூச்சல் இடத் தொடங்கினர்.

ஓட்டுனர் ராஜா திறமைசாலி.

சிறு இடத்தில் கியரை மாற்றி மாற்றி முன்னும் பின்னும் நகர்த்தி வாகனம் கீழே உருண்டு விழுந்து விடாது ஒருவாறு திருப்பிவிட்டார் அனைவருக்கும் உயிர் மீண்டது போலிருந்தது. வாகனத்தை ஓட்டி திரும்பவும் ஒருபடியாக கீழே இறங்கி வந்தோம்.

சற்று கீழே வந்ததும் தேயிலைத் தோட்டதின் ஊடே கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்களிடம் வழி கேட்டோம். அவர்கள் இடது புறம் கையைக் காட்டினார்கள். அங்கு ஒரு பாதை இருந்தது. ஆனால் வாகனம் செல்லக் கூடியது அல்ல.

இறங்கி நடந்து அப்பாதையில் தேயிலைச் செடிகளுக்கு இடையே ஏறிச் சென்றோம். ஓரளவு தூரம் சென்றதும் கற்பாறைகள் இரண்டு உயர்ந்திருக்கும் இடம் தென்பட்டது.

ஆனால் நீரையும் காணவில்லை. நீர் வீழ்ச்சியையும் காணவில்லை.

பின் புறம் அடர்ந்த மலைக் காடுதான் தென்பட்டது..


... கற்பாறைகள்தானா லவேர்ஸ் லீப் என்றெண்ணிச் சோர்ந்து நின்றபோது

அவ்வழியாக ஒரு சிறுவன் வந்தான்.

கீழே முன்பு பார்த்த அதே முனியாண்டி கோயிலின் இடது புறம் உள்ள பாதையால் சென்றால்தான் லவேர்ஸ் லீப்ஸ் காணலாம் என்றான்.

"அது என்ன Lover Leap" எனக் கேட்டோம்"

'ஒரு வெள்ளைக்கார இளம் சோடி நீர்வீழச்சியின் அழகைப் பார்க்க மேலே சென்றார்களாம். பாறை ஒன்றில் கால்வைக்கும் போது அவளின் கால் சறுக்க உச்சியிலிருந்து விழுந்துவிட்டாளாம்.

பாவம் அவன்.

செய்வதறியாது திகைத்தான்.

சட்டென I Love You சொல்லிக் கொண்டே அவனும் குதித்துவிட்டான்.

அதிலிருந்து அது லவ்வேர்ஸ் பாறை என்றும் லவேர்ஸ் லீப் என்றெல்லாம் அழைக்கப்பட்டதாம்.'

தாஜ்மஹால் முதல் இந்த லவ்வேர்ஸ் பாறை வரை புகழ் பெற்ற இடங்கள் எல்லாமே காதலின் துயரத்தையே பேசுவதை யோசிக்க மனம் அழுத்துகிறது.

சரி வந்தது வந்தாயிற்று எனக் கூறி
திரும்ப முனைந்த போது
பிள்ளைகள் தாங்கள் 'கண்டு பிடித்த'
லவேர்ஸ் லீப் என எண்ணிய பாறைகள் மேல்
நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.

மூச்சு முட்ட சிரமத்துடன் மலைமேல் ஏறிச் சென்றது வீண் போகவில்லை.

ஒருவாறு இறங்கி கீழே வந்து வாகனத்தில் முனியாண்டி கோவிலை அடைந்து அதில் நின்று பார்த்த போது அங்கிருந்து மேலே நடை பாதையாக செல்லும் பாதை அரை மைல் தூரமளவு தெரிந்தது.

அம்மாக்கள் இருவருக்கும் பார்த்த உடனேயே களைப்பு வந்துவிட்டது. அதிலேயே நின்று விட்டார்கள். சிட்டுப் பெண்ணுகள் இரண்டும் டடியுடன் மேலே பறந்து விட்டார்கள்.


கீழிருந்து அடர்ந்த மரங்கள் ஊடே பார்த்த போது மிக உச்சத்தில் நீர்வீழ்ச்சி வழிந்தோடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

ஸ்டீப் ஆன ஒற்றை அடிப் பாதை ஊடே சலிக்காமல் ஏறிச் சென்றார்கள். நீர்வீழ்ச்சியுள்ள உயர்ந்த கல்பாறையின் அடிப்பகுதியை அடையலாம். படம் எடுத்துக் கொண்டார்கள்.

அம்மா குருவிகள் இல்லாத ஆனந்தத்தில்; நீர்வீழ்ச்சியில் நீராடி சிலிர்த்தபடியே சிட்டுகள் இரண்டும் திரும்பின.


இருளும் சூழத் தொடங்கியது. அனைவரும் களைத்துத்தான் போயிருந்தனர். டவுனை நோக்கிப் பிரயாணப்பட்டோம்.

மாதேவி

Sunday, November 8, 2009

தோசம் தராமல் போவாயோ சனி பகவானே.


இராமரைக் காட்டிற்குப் போக வைத்த அரிச்சந்திரனை சுடலை காக்க வைத்த சனியின் ஆட்ட தோசம் இன்றும் தொடர்கிறதா?

புரட்டாதி சனிக் காலைகளும் விரைவில் விடிந்து விடும்.
உதயத்தில் எண்ணெய் ஸ்ஞானம் செய்து, விரதம் இருப்பர் பல பேர்.

கோவிலுக்குச் சென்று சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் எள்ளுப் பொட்டளி விளக்கேற்றி வணங்கினால்தான் பலருக்கும் தாபம் அடங்கும்.


இருகரம் கூப்பி
ஒன்பது,
பன்னிரண்டு,
இருபத்தொன்று எனப்
பலதரம் வலம் வருவர்.

கால் கடுக்க வலம் வந்த பின்
அர்ச்சனை, ஆராதனை செய்தால்தான்
தோசம் நீங்குமாம்.

'சனீஸ்வர பகவானே நல்வரம் அளியுங்கள்';
என அருள் வேண்டி கசிந்துருகி வணங்குவர்
பக்கத்தில் இருப்பவள்
'என்ன விலையில் சேலை கட்டியிருக்கிறாள்'
என்பதைக் கடைக் கண்ணால் பார்த்தவாறே.

'கோள் என் செயும் கொடுங் கூற்று என் செயும்' என நாயனார் சொன்னதை மறந்த மாந்தர் வேறேன்ன செய்வர்.

அன்று கோவிலிலும் விளக்குச் சட்டிக்கு தட்டுப்பாடு வந்துவிடும்.

சந்தையிலும் 10 ரூபா விலையானது இருபது ரூபாவாகும்.

சட்டியில் மட்டுமல்ல எள்ளு,
கோயிலிலும் எள்ளுப் போட இடமில்லாமல்
மனிதத் தலைகள் நிறைந்திருக்கும்.

நான் முந்தி நீ முந்தி என முண்டியடிக்கும்
கூட்டத்தின் நெரிசலில் இடிபட்டு
தாங்களே எண்ணெயாகக் கசிவர்.


எள், எண்ணெய் அபிசேகம் யாவற்றையும்
தரையோடு,
உடையும்
தாராளமாகப் பெற்றுக் கொள்ளும்.

பக்தர்களுக்கு ஸ்கேட்டிங் தேவையில்லை.
எண்ணெய் சறுக்கியே
விரைவில் வீதி வலம் வந்து
தப்பிவிடலாம்.

சனி பகவானின் பார்வை
சற்றுக் குறைவாக இருந்தால்.
அட்டமத்துச் சனியன்
ஏழரைச் சனியன் ஆனால்
டொங், டமார், டுமார்தான்.

பிறகென்ன!

மண்மூட்டை, சிலிங், POP யில் போய்
சாஸ்டாங்க நமஸ்காரமாய்
மாத காலம் படுக்கையில்
கிடக்க வேண்டியதுதான்.

சனி பகவானை அல்லும் பகலும் துதிபாட
ஓரிரு மாதம்
போதிய நேரம்
தாராளமாய்க் கிட்டும்.

தப்பி வீடு வந்தோர் பாடு இரட்டிப்பு கொண்டாட்டம்தான்!

அடுத்த கிழமை கோயிலுக்குச் செல்ல
புது ஆடை வாங்கலாம்.
வீட்டுக்காரருக்கு சாட்டுச் சொல்ல
கோவிலில் எண்ணெய்க் குளியல் செய்த
ஆடை சாட்சி கூறுமே!

புரட்டாதிச் சனியின் அருளால்
இவர்களுக்குக் கிடைக்கப் பெற்றது
'ஆடைப் பொங்கு சனி'
எனச் சொல்லலாம்.


அம்மாதம் முடியும் வரை
வீட்டுக்காரருக்கோ
மங்கு சனியாகி
'பர்ஸ் காலி'.
பணப் பிணி சனியாகிவிடும்.

சனீஸ்வரன் பூரண அருள் வேண்டுமெனில்
அவரது வாகனாரையும் கவனிக்க வேண்டுமே!

அறுசுவை உணவு சமைத்து படையல் செய்து வணங்கி,
நீர் தெளித்து, கவளம் உருட்டி,
ல்ஞ்ச் சீட்டில் இட்டு, (வாழையிலை தொடர் மாடியில் கிடைக்குமா?)
மாப்பால் பெட்டியின் மட்டை மேல் வைத்து,
பல்கணி ஒட்டில் அமர்ந்து விடும்.

'கா கா' என அழைக்க முடியுமா?

அவ்வாறு அழைத்த காலம் மலையேறி விட்டது.
கூவி அழைத்தால்
ஏனைய மாடிக் குடித்தனக்காரருக்குத்
தெரிந்துவிடுமே!

சி ச் சீ வெட்கம்.

இன்றைய சினிமா பாட்டுக்கள் போல என்று
ஊ ஊ என ஊளையிட்டவள்
போல் அழைக்கிறாள்.

வந்த காகமும் பயத்தால் ஜெட் வேகத்தில் திரும்பி ஓடிவிடும்.

அரை மணித்தியாலம் அழைத்த பின்
'வாராயோ தோழி'
என வானத்தை ஊடறுத்து நோக்கி அழைத்தவள்,
இப்பொழுது
'வராயே'
என அலுத்துச் சலித்துக் கொள்கிறாள்.

காகம் வராவிட்டால் சாப்பாட்டைத் துறக்க முடியுமா?


'மன்னியுங்கள் சனி பகவானே' மனம் முணுமுணுக்க,
உள்ளே சென்று உணவருந்தி
சனி விரதம் முடித்ததன் சாட்சியாக
ஏப்பமும் வெளியே வந்தது.

'உண்டு விட்டாயா சனி பகவானே?' அங்கலாகிக்கிறது மனது.

பல்கணியில் இருந்து எட்டிப் பார்க்க,
'பறந்தோடிப் போனேனே'
என கீழ்மாடி பல்கணியிலிருந்து
சிரிக்கிறது சனிப் படையல்.

பொங்கு சனியாகப் கீழ்மாடி வீட்டுக்காரருக்குப்
பொழிந்து வந்த சாத மழை,
பல்கணி எங்கும் சிதறிக் கிடக்கிறது.

கொடியில் கிடக்கும் தோய்த்த ஆடையில் விழாத வரை
வீட்டுக்காரரின் ஜாதகத்தில் சனியின் ஸ்தானம்
நல்ல நிலையில் இருப்பதாகக் கொள்ளலாம்.

சனியின் பார்வை தொலையுமா? தொடர்ந்து வருமா?

உங்கள் ஊர்களில் எப்படி?

லண்டன் கனடாவிலும் வருமா காகம்.

மாதேவி

Thursday, October 22, 2009

கண்ணன் இல்லாத கோகுலம் அம்பேவல

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியினில் கன்றினைப் போல் மாயக் கண்ணன் .... லீலைகள் பல புரிந்த சியாமள கண்ணனின் கோகிலத்தின் நினைவுகள் எழுந்து ஓடின.

இலங்கையின் மத்தியப் பிரதேசமான நுவரெலியாவிலும் கோகுலத்தை ஒத்த இடம் உண்டு. ஆனால் மாயக் கண்ணன்தான் இல்லை.

அம்பேவல பச்சைப்பசேலென்ற பரந்த புல் சமவெளி இயற்கை கொழிக்க வரவேற்கிறது. பாம் (Farm) யைச் சுற்றிலும் அமைந்துள்ள மிகப் பரந்த நிலப் பரப்புக்களில் வெள்ளை, கறுப்பு, பிறவுன் என பலவித நிறங்கள் கொண்ட மேனியுடன் உடலில் கொழுத்த ஜேஸி இனத்தைச் சேர்ந்த உயர்தர மாடுகள் கூட்டம் கூட்டமாக புற்களை மேய்ந்து சென்றன.

பயத்தை விட்டுவிட்டு மெல்லத் தொட்டுப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. பாம்மைத் தாண்டி ஓரிரு மைல்கள் பிரயாணம் செய்தால் அழகிய சுத்தமான லேக்கைக் காணலாம். பத்துப் பதினைந்து பேர் செல்லக்கூடிய அழகிய இரு படகுகள் காத்திருக்கின்றன.

லேக்கைக் சுற்றிக் காட்டுவதற்கு. நல்ல காலம் செல்ப் போட்டிங்கைக் காணவில்லை. தப்பித்தோம் பிள்ளைகளிடமிருந்து.

இதையும் கடந்து ஹைலண்ட் பால் பக்டரி வளாகத்தை அடைந்தோம்.


வழியில் நெடிய காட்டு மரங்கள் செடி கொடிகள் என சுற்றிச் சூழ்ந்திருக்க நடுவே பாதை செல்கிறது. இனிய காட்டு வழிப்பயணம் பயத்தை நீக்கி நல்ல அனுபவத்தைத் தருகிறது.




பக்டரியைச் சென்று அடைந்தால் அங்கும் பலர் பெரிய ரூரிஸ்ட் பஸ்களில் ஏற்கனவே பார்வையிட வந்திருந்தார்கள்.


நாங்கள் சென்ற நேரம் மதியமாகிவிட்டதால் எங்கள் துர்ரதிஸ்டம் பக்டரி மதிய உணவுக்காக மூடப்பட்டுள்ளது.

ஒரு மணிநேரத்தின் பின் திறக்கும் எனக் கூறினார்கள். அருகே அமைந்திருந்த சிறிய பூங்காவில் உல்லாசப் பயணிகள் பலர் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். சிலர் உணவருந்தினர். பாம் (Farm)யை பார்த்துவிட்டு மீண்டும் திரும்பி வருவோம் எனக் கூறியபடியே வந்தவழியே திரும்பினோம்.

பண்ணையின் முன்வாயிலில் இருந்து நடந்து செல்லும் பாதையின் இருபுறமும் அழகுப் பூக்கன்றுகள் பூத்துக் குலுங்கின.






























இடையிடையே மலை நாட்டு மரக்கறிகள் கரட்,























கோவா, லீக்ஸ் பயிரிடப்பட்டு பசுமைத் தோட்டங்களாகக் காட்சி தந்தன.

















லெடியூஸ் இனத்தில் புதிய சிவத்த வகை பயிரிடப்பட்டிருந்தது.
அனைவரையும் கவர்ந்தது.
















பசுக்கள் பெரிய செட்போன்ற தொழுவத்தில் அடைக்கப்பட்டு உணவூட்டப் பட்டுக்கொண்டிருந்தன.
















உடனுக்குடன் அவற்றின் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவற்றின் சாண நெடி உள்ளே நீண்ட நேரம் நிற்க முடியாதபடி எம்மை வெளியே செல்லத்தான் செய்தது.

இவ்வாறு அதிக அளவில் தொகையாக வைத்துப் பராமரிப்பது என்பது சிரமமானது என்பது பார்க்கும் போதே புரிந்தது.

பால் கறக்கும் இடம் இனிய அனுபவம். பசுக்கள் நிரையாக நிற்பாட்டப்பட்டு யந்திரங்களின் உதவியுடன் பால் கறக்கப்படுகிறது.




ஒவ்வொரு முலைகளுக்கும் ரியூப் போட்டு மின் அசைவினால் கறக்கப்படுகிறது. பின் அவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்து பெரிய போத்தல்களில் கை படாமலே சேர்க்கப்படுகிறது.




மூடிய கண்ணாடிகள் ஊடாக பார்வையிடுவோர் முண்டியடித்துக் கொண்டிருக்க இடையே புகுந்து கண்டு களிக்க வேண்டியிருந்தது.















கோகிலத்துப் பசுக்கள் எல்லாம் கோபாலன் குரலைக் கேட்டு நாலுபடி பால் கறக்குது கிருஷ்ணாயி ..

அடுத்து நாம்பன் பசுக்கள் தனியே பராமரிக்கப்பட்டு தொழுவத்தில் நிற்கின்றன.















தாயாகப் போகும் அன்னையருக்கு தனியே விசேட பராமரிப்புடன் கூடிய கவனம் எடுக்கப்படுவதை அவதானித்தோம்.
















பாற்கட்டி பெரிய தட்டையான தட்டுக்களில் உறைநிலையில் வைக்கப்பட்டு உறைந்த பின் எடுத்து சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.




இது மெசினினால் அல்ல மனித வலுவினால். இதுவும் கண்ணாடியால் மூடப்பட்ட அறையிலேயே. நாம் வெளியே நின்று பார்க்கக் கூடியதாக இருக்கிறது.





எங்கும் பசுக்கள் பராமரிப்பு எனஅனைத்தையும் ரசித்தபடி வந்த பொழுது கத்தரித் தோட்ட வெருளிகளாக பசுக்களின் மண்டை ஓட்டை வைத்திருப்பது மனத்தைக் குடையவே செய்தது.
















மாதேவி

Tuesday, October 6, 2009

1887 ல் கட்டப்பட்ட ஏரியில் 2009ல் போட் சவாரி


கிறகரி லேக் நோக்கி எமது வாகனம் பயணப்பட்டது. இது நகரிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

அக்காலத்தில் கவர்னராக (1872 - 1877) இருந்த Gregory அவர்களால் 1887ல் கட்டப்பட்டதாம். பீதுருதாலகால மலையிலிருந்து பாயந்து வரும் நனுஓயா அருவியை (Nanu Oya stream) மறித்துக் கட்டப்பட்டதாக அறிகிறோம்.


அருவியைச் சுற்றி வர வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாம் போகும் பாதையின் அருகே ஓரிடத்தில் பாரிய யந்திரங்கள் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டிருந்தன. பள்ளமாக இருக்கும் நிலத்தை நிரவிக் கொண்டிருந்தார்கள். ஹோட்டலோ அல்லது கடைத் தொகுதியோ எதுவோ கட்டப் போகிறார்கள் போலும்.


புற்றீசல் போல அமைக்கப்படும் ஹோட்டல்கள், நகரமயமாதல் மற்றும் விவசாய ஆக்கிரமிப்புகளால் ஏரியின் இயற்கை வனப்பு பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது.




கால நிலையும் நன்றாக இருந்தது. அதிகாலையில் பெய்த மழை ஓய்ந்துவிட்டது. சூரியன் எட்டிப் பார்க்க இதமான வெயிலில் உடல் சுகம் கண்டது. நகர் உயிர்த்துக் கொண்டிருந்தது. படகுச் சவாரி செல்ல ஏற்றதாக இருந்தது.


லேக்கை அடைந்தோம். முன்பு மழை பெய்து விட்டிருந்ததால் லேக்கை சுற்றியுள்ள தரை சேறும் சகதியுமாக இருந்தது. ஒரு வழிப்பாதையாய் காலை எட்டி வைத்து நடந்து சென்று டிக்கற் பெற்று போட்டில் சுற்றிப்பார்க்க ஏறிக் கொண்டோம்.


ஓடும் நீரின் ஊடே போட் நீரைக் கிழித்துச் சென்றது. சுற்றி வரவும் நுவரெலியா நகரின் அழகிய கட்டிடங்கள் இள வெயிலில் சிலிர்த்து நின்றன.

அழகிய நீண்ட பாலம் ஏரியை ஊடறுத்துச் செல்கிறது. பாலத்தின் கீழால் போட் விரைந்து பாய்கிறது. தலையில் இடித்து விடுமோ!


எம்மை அறியாது தலை சற்றுக் குனிகிறது. குனிந்து நிமிர்வதற்கிடையில் நாம் பாலத்தின் மறுபக்கத்தில். 'வாவ்' கூச்சலிடுகிறார்கள். பிள்ளைகளுக்கு உல்லாசம்.

அடர்ந்த நீர்த் தாவரங்கள் ஊடே போட் நகரத் தொடங்கியது. காற்றும் நன்றாக வீசிப் படர்ந்தது. காட்டாற்றின் ஊடே பயணிப்பது போலப் பிரமை. சுற்றுப்புற அழகையும் இரசித்த படியே பயணிப்பதில் ஏற்படும் ஆனந்தம் சொல்லும் தரம் அன்றோ!


அட இறந்கு துறை வந்துவிட்டதா! போட் புறப்பட்ட இடத்தில் மீண்டு நின்றோம். விரைவிலேயே வந்து சேர்ந்து விட்டது என எண்ணிக்கோண்டோம். தண்ணீரையும் போட்டையும் விட்டு வெளிவர மனம் வரவில்லை. 'வன்ஸ் மோர்' என அனைவரும் வாய்விட்டுக் கூறினர். வேறு இடங்களும் பார்க்கச் செல்ல வேண்டி இருந்ததால் மறுபடியும் செல்லாது நிறுத்திக் கொண்டோம்.

இருவர் செல்லும் self boating வசதி அங்கிருந்தது. Life jacket உடன் தாங்களே படகோட்டலாம். சின்னு மிது இருவரும் அதில் போக வேண்டும் என நட்டுப் பிடித்தார்கள்.




படகுகள் கவிழும் கதைகள் நினைவுக்கு வர டாட் மறுத்துவிட்டார். போட்டிங் செல்லாதது இருவருக்கும் மிகுந்த வருத்தம்தான். மறுமுறை எனச்சாட்டுக் கூறிவிட்டோம்.

லேக் அருகே குதூகலம் ஊட்டும் குதிரைச் சாவாரி செய்யலாம். சவாரிக்கு நேரம் இல்லை. முன்பு பல இடங்களில் செய்ததுதானே. குதிரையுடன் படம் மட்டும் எடுத்துக் கொண்டோம்.



குதிரை வண்டிச் சவாரியும் கிடைக்கிறது. திரைப்படங்களில் வருவது போல அழகிய வர்ணப் பூச்சு வண்டி. அதிகாலையில் சவாரி கிடைக்காததால் குதிரை புல் மேயமுயன்று கொண்டிருந்தது. பிரிட்டிஸ் கால குதிரைச் சவாரியை நினைவு ஊட்டுகிறது.

ராஜா ராணி போல பிரயாணம் செய்யலாம்.


குதிரையும் வண்டியும் அழகாக இருக்கிறதா?

சின்னுவிற்கு தான் எடுத்த படங்களில் இப்படம் ரொம்பப் பிடித்தது.

மாதேவி