Saturday, September 19, 2009

ஹொலிடே கொண்டாட்டம் 2

தலவாக்கலை நகர் நெருங்கியது மனதும் சிலு சிலுத்துப் பொங்குகிறது. ஆம் சில்லெனக் குளிர் மேலைத் தழுவ எதிரே அருவியினின்று பாயும் நீரைக் கண்குளிரக் கண்டதும் வேறென்ன செய்யும்?





கற் பாறையினின்று கொட்டும் சென் கிளயர் எனும் சிறிய அருவி. சென் கிளயர் பள்ளத் தாக்கில் தெரிகிறது வெண் பால் போன்ற அருவி.



அருகே பிரமாண்டமான அழகிய தோற்றத்துடன் காட்சி தரும் St Clares Tea Factory. . மத்திய கால சுவீடிஸ் பாணியில் கட்டப்பட்ட இந்த Mlesna Tea Castle பக்டரி அழகா எதிரே இருக்கும் அருவி அழகா? கிறங்கி நிற்கிறோம்.
உலகப் புகழ் பெற்ற Mlesna Tea இங்குதான் உற்பத்தியாகிறது. வாயிலில் அந்தக் காலத்தில் தேயிலை கொழுந்துகளை அவிப்பதற்கான பென்னம் பெரிய பொயிலர் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.


ஒன்றுக்கு ஒன்று அழகில் போட்டி போடுவனவாய் இவையெல்லாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

சுற்றுலாவின் படங்கள் யாவும் சின்னு 'கிளிக்'கியதே.

படத்தின் மேலே கிளிக்குங்கள் காட்சிகள் அழகாக முழுமையாக விரிந்து தெரியும்.

இந்தப் பக்டரி அருகே ஒரு நீண்ட பாலம். அதில் நின்றுதான் மேற் கண்ட நீர் வீழ்ச்சியைப் பாரத்தோம்.

சற்றுத் தூரம் செல்ல சலசலக்கும் டிவோன் (Devon Fall) என்னும் மற்றொரு நீர் வீழ்ச்சி.


கண்ணையும் மனத்தையும் கொள்ளை கொள்ளும் அழகுடன் சோ என்ற இரைச்சலுடன் குன்றின் உச்சியிலிருந்து கொட்டி கற்பாறைகளில் விரைந்து பாய்ந்தோடி வருகிறது.

மழைக்காலத்தில் நயகரா நீர் வீழ்ச்சி போன்று கொட்டிப் பாயும் என இங்குள்ளோர் வர்ணிக்கிறார்கள். அவர்களும் நயகரா நேரில் பார்த்ததில்லை. நானும் பாரத்ததில்லை. நீங்கள் கூறுங்கள்.

இவை காணும் தோறும் குதூகலத்தை அள்ளி வழங்குகின்றன. இயற்கையின் படைப்பில் இவ்வளவு அற்புதங்களா?

சிந்தனையுடன் ரசிக்க வைக்கிறது. இயற்கையின் உவகை எம்மையும் தொற்றிக் கொண்டு மனத்திற்கு இதத்தைக் கொடுப்பதில் வியப்பில்லை.

இருபுறமும் பச்சைப் பசேலென பரந்து விரிந்த மலைச் சரிவின்; ஓரமாக கிளை பரப்பி விரிந்து நின்ற மரத்தில் சிவப்பு நிறப் பூக்கள் பூத்துக் கொட்டுகிறது.

கண்ணைப் பறித்துத் திரும்பிப் பார் பார் என அழைக்கிறது. இவற்றையெல்லாம் பார்த்து மனம் நிறைந்து மகிழ்ச்சி கொள்ள ஹெயர் பின் வளைவுகளுடாக உயர்ந்து சென்று கொண்டிருந்தது பாதை.

அடுத்து அழகு தேவதையின் தோற்றத்தில் அழகிய நுவரெலியா நகர்.


பிரிட்டிஸ் காலக் கட்டிடத்தில் நுவரெலியா போஸ்ட் ஓபீஸ் காண்போரை மயக்க வைக்கிறது. ஐரோப்பிய கட்டிடக் கலைப் பாணியில் எழுந்து நிற்கிறது

சற்றுத் தூரம் சென்றதும் பிரமாண்டமான கிரான்ட்ஹோட்டல்.


வெளி நாட்டுப் பயணிகளுக்கும் பணம் செழித்தவர்கள் தங்குவதற்குமானது. நாளொன்றுக்கு ரூம் வாடகை 15-20 ஆயிரத்தைத் தாண்டுமாம். இது நகருக்கே அழகைக் கொடுக்கிறது.

அருகே கிரான்ட் இன்டியன் ரெஸ்ரோறன்ட் அமைந்துள்ளது. இதுவும் அழகுதான்.

இவற்றை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டே நகர்வலம் வந்தோம்.

நடுத்தர வர்க்கத்தினர் தங்கிச் செல்லக் கூடிய Angel Park எமது தங்கும் மடமாயிற்று.


இக் ஹோட்டலின் பின் புறம் நுவரேலியா நகரின் மையமாக விளங்கும் விக்டோரியா பார்க் அமைந்துள்ளது. ஹோட்டலின் ஒரு புறம் வீதிக்கு அப்பால் Good Sheperd Convent.

பயணப் பொதிகளை வைத்துவிட்டு உடலுக்கு இதமாக வெந்நீரில் நீராடி சிறிய வோக் செல்லத் தீர்மானித்தோம்.

இரவு 7.30- 8 மணி இருக்கும். குளிர் அதிகரித்து விட்டதால் நகர் அடங்கத் தொடங்கி விட்டது. வீதியில் ஓரிருவர் நடந்து சென்றனர். வாகனங்கள் சில ஓடிக் கொண்டிருந்தன. 15-20 நிமிட நடை தூரம் சென்று அத்தியாவசிய சில பொருட்களை வாங்கிக் கொண்டு ரூம் திரும்பினோம்.

இரவுக் குளிரில் ஜில் என்ற காற்றின் ஊடே வீதியில் நடந்து செல்வதில் சுகம் இருக்கத்தான் செய்தது. யாழ்ப்பாணம் கொழும்பு என வெப்பப் பிரதேசத்தில் வாழும் எங்களுக்கு ஓரிரு நாட்கள் மட்டும் தங்குவதால் குளிர் சுவாத்தியம் மனதுக்குப் பிடித்துப் போய்விடுகிறது.

தொடர்ந்தும் பல வருடங்களாக குளிரிலேயே வாழும் நிலையில் வாழ்க்கைப் பிரச்சனைகள் இருக்கலாம் என்பது லயன் வீடுகளைப் பார்த்ததும் புலப்பட்டது.

அதிகாலை ஆறு மணியளவில் எழுந்து பார்த்த போது நகரம் பனி மூடலுக்கு ஊடாக அமைதியாகக் காட்சியளித்தது.


மேல் மாடி ரூமின் முன்புற யன்னலூடாக நோக்கிய போது அடுத்து இருந்த நிலப்பரப்பில் லீக்ஸ் நாட்டப்பட்டிருந்தது. மரங்களின் இடையே பறவைகளின் சேதாரம் இல்லாது இருக்கப் போலும் சிறிய காகிதக் கொடிகள் நாட்டப்பட்டிருந்தன.

மிகுந்த குளிரிலும் பல்கணியில் சென்று ரசித்தோம்.

வீதியில் சன நடமாட்டம் இல்லை. மழை சிறியதாக தூறத் தொடங்கியிருந்தது. தடித்த கம்பளி கோட்டுடன் ஓரிருவர் குளிர் துரத்த விரைந்து சென்றனர்.

முழங் காலுக்கு கீழ் குளிர் வெடவெடக்க, வெள்ளை யூனி போர்ம், சூஸ் சொக்ஸ் அணிந்த சின்னப் பெண்கள் ஏ.எல் சோதனைக்காக குளிரிலும் புறப்பட்டிருந்தார்கள்.

ஹோலுக்கு வந்து மறுபுறம் உள்ள யன்னல் ஊடே பார்த்த போது அடுத்துள்ள நிலத்தில் கிறீன் கவுஸ் அமைக்கப்பட்டிருந்தது.



உள்ளே அழகிய செடிகள் பூத்துக் குலுங்கின.

வெளி நிலப் பரப்பில் சிகப்பு மொட்டுக்கள் விரித்தாற் போல் சிறியதாய் பீற்ரூட் செடிகள் முளைத்திருந்து அழகில் மயங்கியவரை எல்லாம் சாப்பிட வருமாறு அழைத்தன.

சின்னுவிற்கும் மிதுவுக்கும் ஒரே கொண்டாட்டம்தான். நான் முந்தி நீ முந்தி எனப் படங்கள் எடுத்து கிளிக்கிக் கொண்டார்கள்.

எட்டு மணியளவில்தான் குளிருக்கு இதமாகத் தேநீர் கிடைத்தது. நடுஇரவு முதல் Electricity Failure ஆனதால் Electric kettle வேலை செய்யவில்லையாம்.

காலைக் குளியல். குளிரில் தயங்கிய போதும் வெந்நீர்க் குளிப்பு உடலுக்கு இதமாகத்தான் இருந்தது.

குளிப்பு முடிந்ததும் சாப்பாட்டு மேசை வரவேற்றது. சான்ட்விச் தவிர மற்றதெல்லாம் எமது வழமையான உணவுகள்தான். மெத்தென்ற வெள்ளை இடியாப்பம், மஞ்சள் சொதி, இடி சம்பல் கிழங்கு மசாலா என ராஜீ கொண்டு வந்து வைத்தான்.

இடிசம்பல் மாத்திரம் சிங்களப் பக்குவம். ருசியோ ருசி. ரெசிப்பி என்னவெனக் கேட்க வைத்தது. வயிற்றை நிறைத்துக் கொண்டு வாகனத்தில் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம்.

மாதேவி

Friday, September 4, 2009

ஹொலிடே கொண்டாட்டம்

இன்னும் மூன்று நான்கு நாட்களில் ஸ்கூல் ஹொலிடேஸ் முடிந்து விடும். பிள்ளைகள் எல்லோருமே விளையாட்டு மூட் தாண்டி படிக்கத் தொடங்குவதற்கு ஆயத்தமாகிறார்கள். அரை மனத்துடன் தான்.

இந்த நேரத்தில் சற்று முன்னோக்கி ஹொலிடேயின் ஆரம்ப காலத்தில் இருந்த மகிழ்ச்சிப் பொழுது பற்றி அசைபோடத் தோன்றுகிறது.

முதல் ஓரிரு வாரம் தொலைக்காட்சி பார்ப்பது உண்பது உறங்குவது என ஜாலியாகப் பொழுது போனது.

கொறிப்பதற்கு உணவுகளும் காதுக்கு இனிமை சேர்க்க இசையும் ஒன்று கூடின.

வீட்டில் உறவினர் வருகை என அமர்க்களம். வீடே அதிரும் அளவிற்கு ஒரே சத்தமும் சிரிப்பொலியும்தான்.

அம்மா பிள்ளைகளுக்கு விரும்பிய உணவுகளை செய்து அசத்திக் கொண்டிருந்தா. வீடே சமையல் மணத்தில் மூழ்கிக் கிடந்தது.

இரவில் அயல் வீடுகளில் எல்லாம் வெளிச்சம் அணைக்கப்பட்டு தூக்கத்தில் மூழ்கிக் கிடக்க இங்கே இரவு 12 - 2 மணிவரை மின்னொளி பரவிக் கொண்டிருந்தது. பிள்ளைகள் படம் பார்ப்பது அல்லது இணையத்தில் இருப்பது என நேரம் போய் தூங்கப் பின்னிரவு ஆகிவிடும்.

சிறிது நாட்களில் இதுவும் அவர்களுக்கு அலுக்கத் தொடங்கியது.

பகலில் இன்டோர் கேம்ஸ் ஆன Sudoku,Puzzle, Scrabble, chess. அலுமாரி அடியில் ஒளிந்து கிடந்தவை பொழுதுக்கு ஒன்றாய் வெளிவந்து கொண்டே இருந்தன.

அதுவும் சலிக்க Trip என நச்சரிப்புத் தொடங்கியது.

Dad நல்ல மூட்டில் இருக்கும் நேரம் பார்த்து அவரை வளைத்துப் போட்டுவிட்டனர். லீவு எடுப்பதென்பது தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சிம்ம சொப்பனம்தான் எனச் சொல்லவும் வேண்டுமா?

ஒருவாறு இரண்டு நாட்கள் லீவிற்கு ஓகே கூறிவிட்டார். சின்னுவிற்கோ கொண்டாட்டம்தான்.

எங்கே செல்வது என டிஸ்கஸ் பண்ணத் தொடங்கிவிட்டனர்.

ரிப்பில் என்ஜோய் செய்வதற்கு கூடவே மைத்துனி, அவரின் மகள் மிது இருவரும் துணை சேர்ந்தனர்.


செல்லுமிடம் மலை நாடு நுவரெலியா என முடிவாயிற்று.

மலைநாட்டின் கொள்ளை அழகு எத்தனை முறைகள் சுற்றுலாக்களின் போது சென்று ரசித்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் ரசனையில் புதிய மாற்றங்களைக் கொடுக்க வைக்கும் அற்புதமான அனுபவங்களாகத் திகழும்.


கொழும்பில் இருந்து புறப்பட்டால் அவிசாவளையில் ஆரம்பிக்கும் மலைவனப் பாதை. கித்துள், ஈரப்பலா, மிளகு, கொக்கோ, கோப்பிச்செடி என ஒரு புறமாயும் மறுபுறம் கூடல்களாக தென்னை மரங்களாகவும் காட்சி கொடுக்கும்.

பசுமையில் தொடங்கி உயர்ந்து செல்லும் மலைப் பிரதேசத்தில் ரப்பர் மரங்களென அடர்ந்து செல்லும் பாதை.


அவிசாவளையைக் கடந்ததும் கித்துல்கம வருகிறது. ஊரின் பெயரே வாயில் இனித்தது.

கித்துள் மரத்திலிருந்து கள்ளு எடுக்கப்படுகிறது. அதிலிருந்து பெறப்படும் கித்துள் பாணி, கித்துள் கக்குறு ஆகியன சுவையில் பிரசித்தி பெற்றவை.

இவை எமது பனம்பாணி, பனங்கட்டி போன்றது. ஆனால் சுவையில் வித்தியாசம் உண்டு.

மழை வீழ்ச்சி மிக அதிகமான இடம் இதுவாகும்.

எயர் கொண்டிசனை அணைத்து வாகனத்தின் கண்ணாடியைத் திறக்க கொழும்பை தூற்ற வேண்டும் போலிருந்தது. அத்தனை சுகமான சுவாத்தியம்.
உடலுக்கு இதமான குளிர்காற்று தழுவிச் செல்லும். குளிரும் அதிகரித்து உடலை சிலிர்க்கச் செய்கிறது.

இங்கு வசிப்பவர்கள் எவ்வளவு பாக்கியசாலிகள்!

மேலே செல்லச் செல்ல தேயிலைச் செடிகள், சைப்பிரஸ் மரங்களென விரிந்து செல்லும் அழகோ கொள்ளை அழகுதான்.

ஹினிகத்தனை தாண்ட வட்டவளை வருகிறது.

வட்டவளையின் மலைச் சரிவுகள் நாற்புறமும் பரந்து அழகிய மலைப் படிவங்களாக கவர்ந்து இழுக்கிறது. இங்கு விளையும் தேயிலைக்கு உயர்ரகம் எனப் பெயர் உண்டு.


Zesta வின் தேயிலைத் தொழிற்சாலைப் பெயர் கண்ணில் பட்டது. அழகிய பெரிய ரீ கப் வடிவில் விளம்பரப் பலகை பிரயாணிப்பவரை வரவேற்கிறது. இது இயற்கையுடன் சேர்ந்து அழகு தருகிறது.

வீதி ஓரத்தில் அவர்களது தேநீர் விடுதி வாகனத்தில் போகும்போது தெரிந்தது.

இறங்கிப் பார்க்க பொழுது கிட்டவில்லை.

மலைச் சரிவுகளில் அழகிய வட்டவளை நகரின் கட்டிடங்கள், பங்களாக்கள் கொண்ட வியூ மாலை நேர மூடு பனியில் படிந்து மனதைக் கவர்ந்து, வாகனம் முன்னேற, பின்நோக்கி மறைகின்றன.

ஹோலிடே கொண்டாட்டம் தொடரும்.....

மாதேவி

Thursday, May 14, 2009

பேரோசைகளின் மௌனம்

கோகிலத்தின் குடிலெங்கும்
கடைந்தெழும்
மத்தொலியும்

மீட்டியதும் நரம்பதனில்
கிளர்தெழும்
வீணையின் கானமும்

ஒழுங்கை தாண்டி
ஊரெங்கும் அதிர்ந்து
எதிரொலிக்கும்
சேமக்கல ஓசையும்

குருத்தெலும்பு
உடைத்தெறிந்து
செவிப்பறை கிழித்தழிக்கும்
சில்வண்டின்
கீச்சிடும் ஓசையும்

வேட்டைத் திருவிழாவில்
விலங்காடும் விடலைகளின்
வீறோசை மறைந்தொழிக்கும்
லைட்மெசினின்
உதறல் ஒலியும்

கொட்டமடித்து குளநீர்
கலந்துளையும்
மாரித்தவளைக் கூப்பாடும்

நெஞ்சதிர வானடங்கி
பிளந்தொலிக்கும்
கருங்கல் மலையுடைப்பும் ....

எத்தனை எத்தனை ஓசைகள்!
இங்கு படைத்தாய் மனிதா!

இத்தனையும் பிரசவித்து
முளைத்தெழும்
தொடர் மாடிப் புதுமனையில்
பேச்சுக்கும் துணையின்றித்
பேரோசைகளின் மௌனத்துள்
தனிமையில் உறையும்
நான்.


மாதேவி

Wednesday, April 1, 2009

அப்பாவின் ஹெலிக்கொப்டர் கண்ணாடி


பாவித்து வந்த மூக்குக் கண்ணாடியை பவர் போதவில்லை எனப் புதிதாக ஒப்ரீசியனிடம் (Optician) புது மூக்குக் கண்ணாடி வாங்கி வந்தார் அப்பா.

வாங்கிய நாள் முதல் அதற்கு ராஜபோக மரியாதைதான். அழகான வெள்ளை பிளாஸ்டிக் பெட்டியின் அடியில் அடுக்கிய லினன் துணியின் மேல் மிகவும் அலங்காரமாக ஆடாது அசையாது வீற்றிருந்தது கண்ணாடி.

அத்துடன் பாதுகாப்பு போதாது என்று பிரீவ் கேசின் உள்ளும் பூட்டி வைத்துவிட்டார். மாதக்கணக்கில் அங்கு அடைக்கலம் புகுந்திருந்தது அது.

இடையே இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை கண்ணாடியைப் போட்டுப் பார்ப்போம் எனக் கூறுவார். ஆனால் பலநாட்களாக அது வெளியே வந்ததை நாம் காணவில்லை.

ஓரிரு மாதங்களின் பின் கவனமாக ஒரு நாள் வெளியே எடுத்து மிக அவதானமாக ஒரே ஒரு தடவை போட்டார். ஓரிரு நிமிடம் கழிந்திருக்காது. 'இது இப்போதைக்கு சரிப்பட்டு வராது. பிறகு போட்டுப் பார்ப்போம்' என்று கூறியவர் கண்ணாடிக்கு நோகாமல் கழற்றி பெட்டியுள் தூங்க வைத்து விட்டார்.

அடிக்கடி முருங்கை மரத்தில் வேதாளம் ஏறிய கதை தொடர்ந்தது.

இறுதியில் கண்ணாடியார் வெளியே வந்து விட்டார்.

அன்றிலிருந்து தொடங்கியது சனிப் பெயர்ச்சி.

எங்களுக்கு இந்த சனியில் எல்லாம் என்றுமே நம்பிக்கை கிடையாது. ஆனால் அப்பாவின் கண்ணாடி பட்ட பாட்டிற்குப் பிறகு சனியின் ஆட்டமும் உண்டோ என்று எண்ணத் தோன்றியது.

கண்ணாடியார் பாவனைக்கு வந்த மறுதினமே, 'ஆடிக்கொண்டு நிற்கிறார். வழுகிக்கொண்டு வாறார்' என்றெல்லாம் குறை.

இறுக்க வேண்டும் என ஒப்டிசியனிடம் சென்று சரிபார்த்து வந்தார்.

ஒருமாதிரி சரியாகிவிட்டதே என ஆறுதலில் இருந்த எங்களுக்கு 4-5 நாட்களில் மீண்டும் தொடர்ந்தது சனிப்பெயர்ச்சி.

'மூக்கால் இறங்கி வருகிறதே' என்று சொல்லிச் சொல்லி மேலே தள்ளிக் கொண்டே இருந்தார்.

அப்பப்பாவின் மூக்குத் தேய்ந்துவிடுமோ என்று மகள் பயந்தாள்.
ஒரு சில நாட்களுக்கு மட்டுமே இவ்வாறு தொடர்ந்தது.

மீண்டும் புறப்பட்டார்.

வளைத்து நெளித்து சரிபார்ப்பித்து வீடு மீண்டார்.

வந்ததும் 'ஒரளவு சரி' என்றார்.

இருந்தும் அப்பாவின் முகத்தில் சிரிப்பைக் காண முடியவில்லை.

'உவனுடைய கண்ணாடி சரியில்லை' என்று இடையிடையே புலம்பிக்கொண்டே இருந்தார்.

இவ்வாறு ஓரிரு வாரம் சென்றது. அப்பாவின் கண்ணாடியை நாங்கள் மறந்தே போய்விட்டோம்.

'ஓடி வாருங்கோ' என்று மகள் எங்களைச் சத்தமாக நேற்று அழைத்தாள்.
அப்பாவின் அறைக்குள் இருந்துதான்.

என்னவோ ஏதோ என ஓடிச் சென்று பார்த்தால் மகள் காட்டிய மேசையில் ஹெலிக்கொப்டர் வடிவில் இருபுறமும் செட்டை வைத்துப் பறக்கத் தயாராக இருந்தது மூக்குக் கண்ணாடி.

அப்பாவின் அறை வீட்டில் உள்ள அனைவருக்கும் நூதனசாலையானது.

செட்டையைப் பார்த்த எங்களுக்கு முதலில் வயிறு குலுங்கச் சிரிப்புத்தான். அப்பாவோ நூறு ரூபா கொடுத்து செட்டை பூட்டியதாக அழுவார்போலச் சொன்னார். காசு போனால் பரவாயில்லை கொம்பினால் எதுவும் பிரயோசனம் இருக்குமா?

அத்துடன் இது காதின் பின் பகுதியை அழுத்தி ஏதாவது புதுப் பிரச்சனையை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எங்களுக்கு.

அப்பா இப்பொழுது கண்ணாடி போடுவதென்பது ஒரு நீண்ட செயற்பாடாகும்.

கூட்டுக்குள் கொம்பு மடிந்து கிடக்கும் கண்ணாடியைக் கவனமாக எடுப்பார். பின்பு இரு கொம்புகளையும் பறவைகள் சிறக்கு விரித்துப் பறப்பது போல வெளிப்பக்கமாக மடக்கி எடுப்பார். கண்ணாடியை முகத்துக்கு நேரே பிடித்து கொம்புகள் காதைக் குத்தாதவாறு கண்ணாடிக்குள் முகத்தை மெதுவாக நுழைப்பார்.

அப்பாடி முடிந்தது என்கிறீர்களா?

இல்லை! அதன் பின் வெளிப்பக்கமாக வளைந்திருந்து கொம்புகளை அழுத்தி காதுக்குப் பின்புறமாக இறுக்கிப்; பிடிக்குமாறு செய்வார்.

இவ்வளவும் செய்து முடியக் களைத்துவிடுவார். 'ஒரு ரீ' கண்ணாடி போட்ட களை தீர்க்க.

பார்த்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு அதற்கு மேல் களை வந்துவிடும்.

அப்பாவின் கண்ணாடி சிந்திக்க வைக்கிறது.

ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் என்பார்கள்

போடத் தெரியதவனுக்கு கண்ணாடி லூஸ் என்று நீங்கள் கேட்கிறீர்களா?

உங்கள் யாருக்காவது கொம்புக் கண்ணாடி போட்ட அனுபவம் உண்டா?

மாதேவி

Tuesday, March 3, 2009

உலக தண்ணீர் தினம் யாழ் மண்ணில் ஒரு நாள்

இது ஒரு சிற்றாறு என எண்ணாதீர்கள். வரண்ட யாழ் மண்ணின் ஒரு வீதி இது. மழை வெள்ளத்தால் ஆறுபோல காட்சியளிக்கிறது. கோண்டாவிலில் உள்ள ஒரு வீதிதான் இது. 2008 நவம்பர் மாதத்தில் ஒரு நாள் அவ்வாறு காட்சியளித்தது.


உலக தண்ணீர் தினம் எதிர்வரும் மார்ச் 22ல் வருகிறதாம். அதனை நினைவூட்டுமுகமாக பதிவுகள் இடுமாறு வின்செனட் கேட்டிருந்தார்.

உலக தண்ணீர் தினத்தின் 2009 அதிகாரபூர்வமான வலைதளத்தின் இணைப்பு:- http://www.unwater.org/worldwaterday/flashindex.html

யாழ்மண் வரட்சிக்குப் பேர்போனது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் மட்டும் மழை கிடைக்கும். ஆயினும் ஏனைய நாட்களிலும் கிணற்றின் மூலம் நீர் கிடைக்கும்.

இப்பொழுது தண்ணீர் பம்புகள் மூலம் அதிகளவு நீர் இறைக்கப்படுவதால் நிலக்கீழ் நீர் உவராக மாறிவருகிறது. இதனைத் தடுப்பதற்கு பாரிய முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. போர்ச் சூழலால் எந்தவித அபிவிருத்திகளும் கிடையாது.

இந்தநிலையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் பெய்த கடும் மழையால் யாழ் குடாநாடே தவித்தது. வயல்வெளிகளில் வெள்ளநீர் நிரம்பிக் கிடக்கும் படம் மேலே உள்ளது. மேலே உள்ள இரண்டு படங்களும் துவாரகனது.

இந்த மழையின் தாக்கம் பற்றி மேலும் படிக்க கீழே சொடுக்குங்கள்.
http://www.inllanka.com/infonation/news/more_news.asp?ty=lo&id=5608

Sunday, January 25, 2009

ஒரு பிளட்ஸ் வீட்டுக்காரியின் க(த)ண்ணீர்க் கதை

எங்களுக்கெல்லாம் தொடர் மாடிவீடு ஒன்றில் வீடு கிடைத்தவுடன் ஒரே குதூகலம். இனிமேல் வேலை சற்றே குறைவு. சிறிது ரெஸ்ட் கிடைக்கும்.

ஹாயாக இருக்கலாம். மிக்க எதிர்பார்ப்புக்களுடனும் குதூகலத்துடனும் குடி புகுந்தோம்.

காலை அவசரத்தில் முற்றம் கூட்டும் வேலை இல்லை. உள்வீட்டை மாத்திரம் ஒரு தட்டு தட்டினால் சரி. மண் கூட வராது. வெறும் தூசிதான்.

சுதந்திரமாக கேட்பார் யாருமில்லை என்றாற் போல தன்போக்கில் வளர்ந்திருக்கும் பூமரங்களையும் புல்லையும் அடிக்கடி வெட்டி துப்பரவாக்கி அழகுபடுத்தும் வேலையும் கிடையாது. காற்றில் அடித்து வரும் பக்கத்து வீட்டு மாவிலைகளையும் சொப்பிங் பைகளையும் பொறுக்கத் தேவையில்லை.


ஒரே ஜாலி. கனவுகள் ஏராளம்.

ஒவ்வொரு படிபடியாக முழங்கால் துவளப் படியேறும் துன்பம் இல்லை. சொகுசு லிப்ட் சவாரி. ஏழாம் மாடியின் மொட்டைமாடி வெளியில் நின்றால் கொழும்பு மாநகரம் முழுவதுமே கண்களுக்குள் சிறையாகும்.

கனவுகள் எல்லாமே நன்றாகத்தான் இருந்தன.

இன்று காலை வழமைபோலப் பொழுது விடிந்தது.

மார்க்கற் சென்று மரக்கறிகள், கீரை, பழங்கள் வாங்கிக் கொண்டு காலாற மெதுநடையில் திரும்பி எங்கள் வீதியால் வந்து கொண்டிருந்தேன். வழியில் எங்கள் மாடி மனையில் வசிக்கும் இரு பெண்கள். எனது கைவலிக்கத் தொங்கும் மரக்கறிப் பைகளைப் பார்த்துவிட்டு ஒரு சிறு சிரிப்பு.

'இன்றைக்கு என்னென்று சமைக்கப் போறா' எனச் சிரித்தார்களோ?

விடயம் புரியாவிட்டாலும் அவர்கள் சிரிப்புக்கு எதிர்வினையாக என் முகத்தில் பதில் முறுவல்.

'தண்ணி நின்றுவிட்டது. மோட்டார் வேலை செய்யவில்லை' என குறும்புச் சிரிப்புடன் அவர்களிடம் இருந்து பதில் வந்தது.

வந்த சிரிப்பு எங்கே போனது என்றே தெரியவில்லை.

மெதுநடை குதிரை நடையாக விரைந்தது.

எமது வீடு கீழே முதல் மாடியில். அடித் தண்ணியாவது வரும். அதையாவது பிடித்து இண்டையப்பாட்டை முடிப்பம்.

கதவு திறந்ததும் திறவாததுமாக குசினியை நோக்கி ஓடினேன். சமைக்கத் தண்ணி வேண்டுமே. பைகளை ஒரு ஓரமாக வீசி எறியாத குறையாக வைத்துவிட்டு குழாயைத் திருகினேன். நல்ல காலம் தண்ணீர் லேசாக வந்து கொண்டிருந்தது. மதியம் சாப்பிட வரும் மனுஷனுக்கு, பாடசாலையால் வரும் பிள்ளைகளுக்கு சாப்பாடு தயார் படுத்திவிடலாம். சற்று நம்பிக்கை பிறந்தது.

பாத்திரம் ஒன்றில் ஒழுகும் நீரை நிறைய விட்டுவிட்டு பாத்ரூமை நோக்கி பாய்ந்தேன. மார்பிள் தரையில் வழுக்கி விழாத குறையாக. வாளியை எடுத்து குழாயைத் திறந்து வைத்தபோது வயதான கிழவனின் வாயிலிருந்து எச்சில் ஒழுகுவதுபோல நீர் சிந்தியது. கிடைப்பது மிச்சம் என எண்ணியபடி மீண்டும் குசுனிக்கு விரைந்தேன்.

பாத்திரத்து நீரை ஒரு துளியும் சிந்தாது பக்குவமாக எடுத்து வைத்துவிட்டு இன்னொரு பாத்திரத்தை நிரப்பலுக்காக வைத்தேன். அடுத்த பாத்ரூமை நோக்கி ஓடினேன். வாளியை வைத்தேன். குழாயைத் திருப்பிவிட்டேன். மீண்டும் நீர் நிறைந்து கொண்டிருக்கும் முதல் பாத்ரூமை நோக்கி ஓடினேன். அப்பாடா! வாளி நிறைந்திருந்தது. தப்பித்தேன்.

சற்று நிம்மதி. முகம் கழுவவும், பாத்ரூம் போனால் ஊற்றவும் தண்ணி போதும்.

மறுபடி குசினி நீரை எடுத்து வைத்து பானை ஒன்றை வைத்து நிரப்பத் தெடங்கினேன். இப்பொழுது குசினிக் குழாயில் மட்டும் தண்ணீர் வந்தது. பாத்ரூமில் அடியோடு தண்ணீர் ஓடும் சத்தம் இல்லை.

குசினிக்குள்தான் ஒழுகிக் கொண்டிருந்தது.

'உங்களுக்குத் தண்ணீர் வருகிறதா எனக்கு இல்லை' நிமிர்ந்து பார்த்தேன். தண்ணி ஓடும் சப்தம் கேட்டுவிட்டது போலும்.

மேல் வீட்டுப் பெண்மணி தனது வீட்டிலிருந்து எமது குசினிப் பைப்பை நோக்கியவாறு கேட்டார். கண்ணாடி யன்னல்களால் இப்படியும் பல இன்பங்கள்!
வீட்டில் சமைப்பதிலிருந்து சகலமும் மேல் மாடியினருக்கு விருந்துதான் போலும்.

வேண்டாம் தொல்லை எனத் திரைச்சீலையைத் தட்டிவிட்டால் இருட்டு மூடிவிடும்.

தடார்! தடார்!

ஒழுகும் தண்ணீர் ஓசை காணாமல் போய்விட்டது.

வாயிற் கதவு தட்டப்படும் ஓசைதான்.

வந்து திறந்தால். 5 லீட்டர் கானுடன் மேல்வீட்டுக்காரி!

'நான் கொஞ்சம் தண்ணி பிடிக்கிறேன்' எனது பதிலுக்குக் காத்திருக்காது குசினியை நோக்கி விரைந்தார்.

எனது பானையை ஒரு புறம் தூக்கி ஒதுக்கி வைத்துவிட்டு மிச்ச கொஞ்சத்தையும் தான் பிடித்துக் கொண்டு சென்றுவிட்டா.

அவவிற்கும் குழந்தைகள் இருப்பது நினைவு வந்தது.

என்ன கூறுவது எனத் தெரியாத நிலையில் நான். மிகுதியாக வந்த நீரைப் பிடிக்க. பானையை மீண்டும் வைத்தேன். பயறு சோயா சாப்பிட்டவனுக்கு வாய்வு பறிவது போலச் சத்தம் எழுந்தது.

காற்றுத்தான் வந்து கொண்டிருந்தது!.


கழுவிச் சுத்தம் செய்ய அதிக தண்ணீ தேவைப்படும் கீரை பிரிட்ஜில் தஞ்சம் புகுந்தது என்று சொல்லத் தேவையில்லை.

மரக்கறிகளுடன் சமையலை ஒருவாறு முடித்தேன்.
கீழே ஏதேதோ சத்தம் மோட்டர் திருத்துகிறார்கள் போலும்.

மதியத்தின் பின்பு சற்று தண்ணீர் வருவது போலத் தோன்றியது. இதுவும் ஒரு வாளியுடன் முடிந்து விட்டது.

அடடா தண்ணி வருமா வருமா என அரற்றியபடியே பொழுது கழிந்தது.

அடிக்கடி குழாயைத் திருகிப் பார்ப்பதில் நேரம் கடந்தது.

குழாய்தான் அழுதது.

அன்று வேறு என்ன வேலை.

மாலையில் திருகினால் மீண்டும் ஒரு வாளி மட்டும்.

இரவு உணவு பச்சை மிளகாய், வெங்காயத்துடன். மதியச் சோற்றுக்கு தண்ணீர் ஊற்றிச் சாப்பிட வேண்டி நேரவில்லை!

பச்சை மிளகாய் வெங்காயத்தை வெட்டிப் போட்டு ரொட்டி சுட்டு, இடிசம்பல் வாழைப்பழத்துடன் கழிந்தது.

அதிகாலையை யோசித்ததுமே பயம் பற்றிக் கொண்டது. ஒவ்வொருவராக ரொயிலட் போய்வர எப்படிச் சமாளிப்பது?

இரவே வாளிகளுடன் கீழே சென்று தரையோடு தரையாகப் படுத்திருந்து மிகவும் சிரமத்துடன் சம்மிலிருந்து நீரை வாளியால் கோலி எடுத்து, லிப்ட்டின் உதவியுடன் மேலே கொண்டு வந்தார் எங்கள் வீட்டுக்காரர்.

அதிகாலையும் புஷ் புஷ் சத்தம்தான்!

தண்ணீர் குழாயில் வரவேயில்லை.

வாளியில் இருந்த நீரில் உடலைக் கழுவிக் கொண்டு கணவர் பிள்ளைகள் சென்று விட்டார்கள்.

காலை 9 மணியளவில் நீர் வரத் தொடங்கியது. மீண்டும் நிரப்பல்கள்!

இவை முடித்து குளியல் தொடங்க தண்ணீர் குறையத் தொடங்கியது. அரைவாசிக் குளியலுடன் குழாயில் காற்றுத்தான் வந்தது. Dry Cleaning செய்யாத குறை.

ஒருவாறு முடித்துக்கொண்டு வெளியே வந்தால் மழை சோ எனக் கொட்டிக் கொண்டிருந்தது.

வெளியே மழை கொட்டுகிறது. குழாயில் காற்று.

சிமென்ட் சுவர்களுக்கள் சிறை. யன்னலை அடைத்தால் மூச்சுவிடக் காற்று இல்லை. பைப்பைத் திறந்தால் ஓசையுடன் வருகிறது.

என்ன வாழ்க்கை! சலித்துவிட்டது.

வசதிகளைத் தேடி இயற்கையைப் புறக்கணித்தோம்.

இயற்கை அள்ளிக் கொட்டுகிறது.

வசதியில் சற்று தடங்கல் ஏற்பட்டாலும் வாழ்வே நரகமாகிவிடுகிறது.

தொடர் கதைகள் தொடர்கின்றன. வெற்றுப் பிளாஸ்டிக் ஐஸ்கிறீம் கோப்பைகள் தயிர் கோப்பை, இட்லிப் பாத்திரம், குக்கர், ரைஸ்குக்கர் பாத்திரம் என சமையல் மேடையச் சுற்றி யாவரும் 'கொலர் அப்பில்' தண்ணீரில் மூழ்கிவிட்டார்கள்.

அவர்களுக்கும் வெளிவீதி உலா மவுசு கிடைத்துள்ளது.

தொடர்கதை முடிவது எப்போ?

என்றாவது முடிவது சாத்தியமா?

மோட்டர் திருத்தி விட்டார்கள்.

திருப்திதான். ஆனால் !

நீர்த் தேக்கங்களில் நீர் குறைந்து வருகிறது. விரைவில் 'வோட்டர் கட்' வரப்போகிறது. ரூபவாஹினி செய்தி சொல்கிறது.

நித்திய கண்டம்தான்.

நாய்க்கு நடுக்கடல் போனாலும் நக்குத் தண்ணீர்தான்.

கொழும்பில் மழை. குழாயில் காற்று

குழாயடிச் சண்டைகளை ஏளனமாகப் பார்த்த காலம் மலை ஏறப்போகிறதா? அதன் தாற்பரியம் இப்பொழுது எங்களுக்கும் புரிந்துவிட்டது.

இரண்டு மூன்று நாட்களாக பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து முதுகு வலி வந்து மருந்துகள் எடுத்தது பிறிதொரு கதை.

கிணறு, ஆறு, குளம் என இயற்கையை விட்டு செயற்கைக்கு மாறியதால் வந்த வினைகள்தான் இவைகளா? .......

மாதேவி

Thursday, December 25, 2008

மாம்பழ ரிறிப்

மாம்பழமாம் மாம்பழம் .
சுவையான மாம்பழம்.
கறுப்பாக இருக்காது .
கறுத்தகொழும்பு மாம்பழம்.
கவர்ந்திழுக்கும் கண்களை..


மூக்கை நிறைக்கும் வாசனை
முத்தமிட்டாலும்
தொற்றுமே
சூப்பித் தின்ற போதிலும்
நக்கிய கொட்டையை
வீசியெறிய
விடாது...

இன்னும் இன்னும்
மாம்பழங்கள்
செம்பாடு, அம்பலவி
வெள்ளைக் கொழும்பு, விலாட்
கிளி மூக்கு
என்றெல்லாம்
இன்னும் இன்னும்
எத்தனையோ..


பச்சைதின்னி
தெரியுமா? ...
கல்லில் குத்தி
உடைத்தெடுத்து
கார உப்பு
கலந்தெடுத்து
வாயிலிட்டால்
சுவை என்ன?
குட்டீசுகளிடம் கேளுங்க..


வரண்ட மண் யாழ்ப்பாணம்.
மழையைக் காண முடியாது.
என்றபோதும்
கெட்டியான மாம்பழ
விளைச்சலுக்கு
உலகெங்கும் பிரபலம்..


அவற்றின சுவை
சொல்லி மாளாது
வாரீங்களா
ஒரு ரிறிப் அடிப்போம்.
சுவைத்து மகிழ்வோம்..

மாம்பழ விலை
இருபத்தைந்து
போய்வர பிளெனுக்கு
இருபத்தைந்தாயிரம்
மட்டுமே...




------மாதேவி--------