யாழ் மண்ணின் வளமே பனை என்றொரு காலம்.... |
கடற்கரையை அண்டிய கடலோரக் கிராமங்கள் தென்னந் தோப்புகள், மணலை அண்டிய சவுக்கங் காடுகள், பனங்கூடல்கள். வெங்காயம், கத்தரி, மிளகாய், மரவெள்ளி தோட்டங்கள், வயல் வெளிகள், புகையிலை எனப் பரந்து விரிந்து கிடக்கின்றன.
வரண்ட பூமி |
பிரசித்திபெற்ற கோயில்களும் இங்கு பல அமைந்துள்ளன. சில இடங்களுக்கு உங்களையும் அழைத்துச் செல்லலாம் என நினைக்கிறேன்.
வல்லை முனியப்பர் கோவில் பின்வாயிலில் பிள்ளையார் |
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ரோட்டின் தெருவோரத்தில் வல்லை வெளியில் வல்லை முனியப்பர் கோவில் இருக்கிறது.
பிரதேசம் மிகவும் வரண்ட பரந்த வெளியாகும். மழைக்காலங்களில் மட்டும் இவ்வெளிகளில் நீர் நிறைந்து கடல்போன்று இருக்கும்.
வல்லைப் பாலத்தருகே தொண்டைமனாற்றில் கூடடித்து இரால் பிடித்தல் |
வல்லை முனியப்பர் மிகவும் பழமையான கோவில். வாகனங்களில் செல்பவர்கள் உண்டியலில் காசு போட்டு கற்பூரம் கொழுத்தி வணங்கிச் செல்வார்கள்.
திருப்பணி உண்டியலில் காணிக்கை செய்வர் |
அதீத நம்பிக்கை உள்ளவர்கள் வாகனத்திற்கு திருநீறு பூசுவதையும் காணலாம்.
கற்பூரம் கொழுத்தி விபூதி பூசி... |
ஆதியில் முனியடித்துச் செத்தார் என்றேல்லாம் பயமுறுத்துவார்கள். வெளியாக இருந்ததால் மாலையானால் தனியே செல்லப் பயப்படுவார்கள். சுற்றியுள்ள முட்புதர்களும், கிலி கொள்ள வைக்கும்.
ஈச்சம் பழங்கள் இருக்கின்றனவா என ஏங்கிய காலம் நினைவுக்கு வருகிறது. |
ஈச்சம் பற்றைகள் மிகுதியாகக் காணப்பட்ட இடம். பாதையோரத்தில் ஈச்சம் பழங்கள் வெட்டுவோரைக் காணக்கூடியதாக இருக்கும். இப்பொழுது ஈச்சமரங்கள் குறைந்துவிட்டன.
நள்ளிரவில் முனியப்பர் வெளிப்பட்டு உலாவுவார் என்பர். ஊளையிட்டபடி வாகனத்தை கடந்ததாகவும் கூறுவர். சனநடமாட்டம் அற்ற வெட்டவெளியில் வேகமாகக் காற்றடிக்கும் போது அவ்வழியே வாகனத்தில் சென்றால் வாகனத்தின் வேகமும், காற்றின் வீச்சும் ஒன்று கூடி பயத்தில் உறைந்திருப்பவருக்கு ஊளையாகக் கேட்டிருக்கலாம் என விஞ்ஞான ரீதியாகக் கருத்தும் கூறலாம்.
இரவில் கொள்ளிவாய்ப் பிசாசின் அட்டகாசம் அப்பகுதியில் இருந்ததாக பல வயதானவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆயினும் சதுப்பு நிலத்திலிருந்து வெளிவரும் மீதேன் போன்ற வாயுக்கள் வெப்பத்தால் தீப்பிடிப்பதால்தான் அவ்வாறு நிகழ்ந்ததாக ஒருவர் விளக்கம் கூறினார்.
வல்லை முனியப்பருக்கு துணையாக பிள்ளையாரும் வந்துவிட்டார் |
தொடக்காலத்தில் பெரிய மரத்தின் கீழ் சூலம் அமைக்கப்பட்டு வணங்கினார்கள். பின்னர் படிப்படியாக மாற்றமுற்று இப்பொழுது பிள்ளையாருக்குக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
போரில் சிதைந்த வல்லைப் பாலம் புதுக்கோலம் பெறுகிறது |
மாதேவி