Friday, February 18, 2011

வல்லைவெளி முனியப்பர்

அண்மையில் குடா நாட்டிற்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. யாழ் குடாநாடு இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள வெப்பவலயப் பிரதேசம்.

யாழ் மண்ணின் வளமே பனை என்றொரு காலம்....

கடற்கரையை அண்டிய கடலோரக் கிராமங்கள் தென்னந் தோப்புகள், மணலை அண்டிய சவுக்கங் காடுகள், பனங்கூடல்கள். வெங்காயம், கத்தரி, மிளகாய், மரவெள்ளி தோட்டங்கள், வயல் வெளிகள், புகையிலை எனப் பரந்து விரிந்து கிடக்கின்றன.

வரண்ட பூமி

பிரசித்திபெற்ற கோயில்களும் இங்கு பல அமைந்துள்ளன. சில இடங்களுக்கு உங்களையும் அழைத்துச் செல்லலாம் என நினைக்கிறேன்.

வல்லை முனியப்பர் கோவில் பின்வாயிலில் பிள்ளையார்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ரோட்டின் தெருவோரத்தில் வல்லை வெளியில் வல்லை முனியப்பர் கோவில் இருக்கிறது.

பிரதேசம் மிகவும் வரண்ட பரந்த வெளியாகும். மழைக்காலங்களில் மட்டும் இவ்வெளிகளில் நீர் நிறைந்து கடல்போன்று இருக்கும்.

வல்லைப் பாலத்தருகே தொண்டைமனாற்றில் கூடடித்து இரால் பிடித்தல்
 இதற்கு அருகேயுள்ள தொண்டமனாற்றில் இரால் மீன்பிடியில் பலர் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். இரால் கூடுவைத்து அடைத்தும், சிறுவலை வீசிப் பிடித்தும் இராலைச் சேகரித்துக் கொள்வார்கள்.

வல்லை முனியப்பர் மிகவும் பழமையான கோவில். வாகனங்களில் செல்பவர்கள் உண்டியலில் காசு போட்டு கற்பூரம் கொழுத்தி வணங்கிச் செல்வார்கள்.

திருப்பணி உண்டியலில் காணிக்கை செய்வர்

அதீத நம்பிக்கை உள்ளவர்கள் வாகனத்திற்கு திருநீறு  பூசுவதையும் காணலாம்.

கற்பூரம் கொழுத்தி விபூதி பூசி...
இவ்வாறு வணங்காது சென்றால் தங்களது வாகனத்திற்கு அல்லது தமது பிரயாணத்திற்கு இடர் ஏற்படும் என்ற பயம் மக்களிடையே நீண்டகாலமாகப் நிலவி வந்துள்ளது. இன்னமும் அந்தப் பயம் முற்றாக நீங்கிவிட்டதெனச் சொல்ல முடியாது

ஆதியில் முனியடித்துச் செத்தார் என்றேல்லாம் பயமுறுத்துவார்கள். வெளியாக இருந்ததால் மாலையானால் தனியே செல்லப் பயப்படுவார்கள். சுற்றியுள்ள முட்புதர்களும், கிலி கொள்ள வைக்கும்.

ஈச்சம் பழங்கள் இருக்கின்றனவா என ஏங்கிய காலம் நினைவுக்கு வருகிறது.

ஈச்சம் பற்றைகள் மிகுதியாகக் காணப்பட்ட இடம். பாதையோரத்தில் ஈச்சம் பழங்கள் வெட்டுவோரைக் காணக்கூடியதாக இருக்கும். இப்பொழுது ஈச்சமரங்கள் குறைந்துவிட்டன. 

நள்ளிரவில் முனியப்பர் வெளிப்பட்டு உலாவுவார் என்பர். ஊளையிட்டபடி வாகனத்தை கடந்ததாகவும் கூறுவர். சனநடமாட்டம் அற்ற வெட்டவெளியில் வேகமாகக் காற்றடிக்கும் போது அவ்வழியே வாகனத்தில் சென்றால் வாகனத்தின் வேகமும், காற்றின் வீச்சும் ஒன்று கூடி பயத்தில் உறைந்திருப்பவருக்கு ஊளையாகக் கேட்டிருக்கலாம் என விஞ்ஞான ரீதியாகக் கருத்தும் கூறலாம்.

இரவில் கொள்ளிவாய்ப் பிசாசின் அட்டகாசம் அப்பகுதியில் இருந்ததாக பல வயதானவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆயினும் சதுப்பு நிலத்திலிருந்து வெளிவரும் மீதேன் போன்ற வாயுக்கள் வெப்பத்தால் தீப்பிடிப்பதால்தான் அவ்வாறு நிகழ்ந்ததாக ஒருவர் விளக்கம் கூறினார்.

வல்லை முனியப்பருக்கு துணையாக பிள்ளையாரும் வந்துவிட்டார்
இவை எல்லாம்; மின்சாரம் இல்லா காலத்தில் பயமாகத்தான் இருந்திருக்கும்.

தொடக்காலத்தில் பெரிய மரத்தின் கீழ் சூலம் அமைக்கப்பட்டு வணங்கினார்கள். பின்னர் படிப்படியாக மாற்றமுற்று இப்பொழுது பிள்ளையாருக்குக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

போரில் சிதைந்த வல்லைப் பாலம் புதுக்கோலம் பெறுகிறது
மழைக்காலத்தில் இப்பகுதி கண்ணுக்கு விருந்தளிக்கும். பல வகைப் பறவைகளைக் கூட்டம் கூட்டமாகக் காணலாம். குளிர்ப் பிரதேசங்களிலிருந்து புலம்பெயரும் பறவைகள் அவையாகும்.

மாதேவி

Saturday, February 5, 2011

புதன் நீச்சத்தால் நீச்சமடைந்த வீடு

கண்கவர் விளம்பரங்களில் காட்டும் அழகிய அளவான குடும்பம். அப்பா, அம்மா, குட்டித் தங்கைக்கு ஒரு அண்ணா இனிதே மகிழ்ந்திருக்கும். அம்மா ராஜி படித்தவள். வேலை செய்யும் பெண். அப்பா குமார் ஆபீஸ் செல்பவர்.


இருந்தும் புரிந்துணர்வுடன் வேலையில் பெரும் பங்கெடுத்துக் கொள்வார். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து இருவருமே காலைச் சமையல், மதியச் சாப்பாடு இரண்டையும் முடித்துக்கொள்வார்கள்.

அதன் பின்பு அன்புச் செல்வங்களை எழுப்பி தேத்தண்ணிக் கடை ஆரம்பிக்கும். தேநீர் குடித்ததன் பின் ஒவ்வொருவராய் குளித்து காலை உணவு உண்டு மதியச் சாப்பாடு பக்கிங் செய்து பிள்ளைகள் முதலில் பாடசாலை செல்ல இவர்கள் இருவரும் தத்தமது வேலைக்குச் செல்வார்கள்.

வாழ்க்கை இனிய தென்றலாக வீசிக் கொண்டிருந்தது.


இனிதாய் இருந்த குடும்பத்தில் நுழைந்ததே புதன்..

புதன்கிழமை அல்ல.

நீச்சக் கிரகம்.

ஆபீஸில் ராஜியின் நண்பி தனது ஜாதகத்தை சாத்திரியார் ஒருவரிடம் காண்பித்துக் கேட்டதாகவும் நன்றாக பார்த்துக் கூறியதாக ஆசை காட்ட இவளுக்கும் ஆசை தொட்டது. குழந்தைகளின் பலனைப் பார்க்கலாம் என்று..

சிந்தித்துக் கருமங்களை ஆற்ற புத்தியிருக்கும்போது அதை நம்பாது இரண்டு கால் மனிதனொருவன், மூளையே இல்லாத கிரகம் சொல்வதாகச் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்கப் புறப்பட்டாள் ஒரு நாளில்.

மகனின் ஜாதகத்தை முதலில் காட்டினாள்.

பார்த்த சாத்திரியார் "மிகவும் நல்ல ஜாதகம் எல்லாம் உச்சத்தில் இருக்கிறது. நன்கு சிறப்புறப் படிப்பான், சித்திகள் பெறுவான், சௌகரியமாக வாழ்வான் ..

ஆனால்…. "

ஆழமாக யோசித்து ஞானிபோலக் கண்ணை மூடி…

"..புதன் நீச்சம் ஒன்று இருக்கிறது. வாழ்க்கையில் அதற்கு ஏற்றதாக பொருத்தமான ஜாதகம் பார்த்துத்தான் பெண் எடுக்க வேண்டும்" என்றார்.


சாத்திரியாரின் கேட் வாசற்படியிலிருந்து கீழே கால் வைக்கு முன்னரே ராஜியின் மூளையில் புதனானது விட்டுப்போகாத ஸ்ரிக்கர் பொட்டாக ஒட்டிக்கொண்டது.

தொடர்கதையாக சிந்தனை போனது புதனின் வழியில்.

தொடர்ந்து வாராவாரம் புதன் கிழமைகளும் வந்தன. நீச்சம்  இப்பொழுதே தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கியது.

வீட்டு வேலைகளும் ஒழுங்கில்லாது போனது.

அதிகாலைச் சமையல், குழந்தைகளின் உணவு எல்லாம் கெட்டன.

சிரிப்பும் கிண்டலும் தொலைந்து போயின.

சஞ்சலமும், ஏக்கமும் அவளை ஆட்கொண்டன.


கணவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்துவிட்டான்.

கதைத்து வேலையில்லை.

காலை எழுந்து மலமசல கூடம் போவதிலிருந்து ஆரம்பித்துவிடும்.

மகனுக்கு பொருத்தமான ஜாதகம் உள்ள பெண் கிடைப்பாளா?

கிடைக்காவிட்டால் என்னவாகும். இவனது வாழ்வு சூனியமாகிவிடுமா. வாழ்வுக்குத் தேவையான பொருளாதாரம் வசதி கிட்டுமா?

குளிக்கப் போனாலும் இதே சிந்தனைதான்.

குளிக்கப் போவது தாமதமாகும், வேலைக்கு தாமதமாவதால் மேலதிகாரியின் ஏச்சுக் கிடைக்கும் என்பன வேறு கதைகள்.

அவனுக்கு பிள்ளைப் பாக்கியம் கிட்டாது போய்விடுமா?

சமைக்கப் போனால்....

இவனுக்கு ஜாதகம் கெட்ட மனைவி வந்தால் வாய்க்கு ருசியாகச் சாப்பாடும் கிடைக்காது அல்லாடப் போகிறானே என இவள் மனம் இப்பொழுதே அல்லாடத் தொடங்கிவிடும்.

தூக்கு வாளியுடன் காலையில் எழுந்து சாப்பாட்டுக் கடைக்கு செல்ல வேண்டிய கடமை கணவன் தலையில் விழுந்தது.

குட்டி மகனின் எதிர்கால குடும்ப வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது தான் ஒருத்திதான். தன்தலையில்தான் எல்லாம் பொறுத்திருக்கிறது என நினைக்கிறாளா ராஜி.

இல்லை! இல்லை!!

புதனின் தலையில்தான் எல்லாம் என எண்ணுகிறாள்.

மகன் வளர்ந்து யுனிவர்சிட்டி செல்லும்போது அழகிய பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து அவள் பின்னே சென்று அவள் புதன் நீச்சம் கொண்டவளாயின் என்னவாகும்? என்பது அவள் சிந்தனையின் மற்றொரு பக்கம்.


ராஜியைப் போன்ற அம்மாக்கள் ஐயோ பாவம் என்றாகிறது.

“அம்மா சாப்பாடு செய்தனீங்களா?”

“தேத்தண்ணி போட்டுத்தாங்கோ”

என்றெல்லாம் வாயால் கேட்டும் சாப்பிடக் கிடைக்காத குழந்தைகளின் நிலை பரிதாபம்

அவர்கள் கேட்கும் கேள்விகளும் அவள் காதில் விழுவதாக இல்லை. நீச்சப் புதனின் ஓசை மட்டும் காது, மூளை எங்கும் நீக்கமறப் பரவி நிற்கின்றன.

எல்லாம் புதன் மயம்தான் அவளுக்கு இப்பொழுது. இனி எப்பொழுதும் அதுவாகத் தொடரவும் போகிறதா?

பரிதாபம்.

வளரும் குழந்தைகளுக்கு நேரத்திற்கு உணவு சமைத்து கொடுக்க வேண்டும் என்ற புத்தி அற்ற ராஜிக்கு குழந்தைகளின் உடல் நீச்சம் பற்றி புரியவில்லையா?

புதன் நீச்ச மாயை உடல் நீச்சம், குடும்ப நீச்சம், வாழ்க்கையே நீச்சம் எனத் தொடர்கதையாய்…

மாதேவி