Wednesday, January 20, 2010

ஹொலிடே தீர சோர்ந்த மலர்கள்.

அழகிய மரவேலைப்பாடுகளுடன் கூடிய குடில் இளைப்பாறும் இடம் போல அமைந்திருக்கிறது.

அருகே பட்ட மரத்தின் வெட்டப்பட்ட அடிப்பகுதி கைவிடப்பட்ட காவல் அரண்போல நிற்பது பார்க்க ரம்யமாக இருந்தது.

இலங்கையை மாங்காய் வடிவத்திற்கு ஒப்பிடுவர். பசுமையான தரையின் மத்தியில் இலங்கை வடிவில் ஒரு நீர்த் தேக்கம். அதற்குள் தீவு போல ஒரு நிலப்பரப்பு.

தீவுக்குள் மற்றொரு தீவா?

அந்தத் தீவிற்கு போவதற்கு ஒரு பாதை.
அனுமான் போட்ட கற் பாலம்போல என எண்ணத் தோன்றுகிறது.

விக்டோரியா பார்க்கில் பூப்பறிக்க முடியுமா? பறித்தால் தண்டம் போடுவார்களா தெரியாது.

பூ வாங்குவதற்கு என நகரத்தின் மையத்தில் உள்ள பஸ் நிலையத்தின் மத்தியில் உள்ள கட்டிடத்தின் மாடியில் பல கடைகளில் பூப் பூவாக கடை விரித்திருக்கிறார்கள்.


பிளாஸ்டிக் வாளிகளில் நிறம் நிறமாக பல்வேறு பூக்கள் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன.

கொழும்பு விலையோடு பார்க்கும்போது கொள்ளை மலிவு. ஆயினும் நிறைய வாங்க பர்சில் காசுத்தாள்கள் மலர்ந்து கொட்டுகின்றனவா?


கொழும்பிலிருந்து நுவரெலியா பார்க்கப் போனவர்களுடன் தொற்றிக் கொண்டு சில பூங் கொத்துகள் கொழும்பு பார்க்க வந்தன.






கொழும்பு பார்க்க மலர்ச்சியுடன் வந்த அவை சின்னுவின் பூச்சாடிக்குள் ஓரிரு நாள் சிலிர்த்திருந்து மறுநாள் முதல் அழுது வடியத் தொடங்கின.


ஆனாலும் எங்களுக்கு இன்னும் நாலு நாளாவது பார்திருந்தால்தான் ஆசை தீரும் போலிருந்தது.

அடுத்த விடுமுறைக்கு சின்னு விடுமுறையில் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு என்பது போல தலை விரித்து வாடி வதங்கிக் காத்திருக்கிறது.


மாதேவி

Sunday, January 3, 2010

ரோஜா மலர்வனம் விக்டோரியா பார்க்கில்

ரோஜாத் தோட்டம் கண்ணில் பட்டு அழைத்தது. தனியே பிரத்தியேகமாக உயர்ந்த இடத்தில் தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது.


ரோஜாக்கள் என்றாலே எல்லோருக்கும் ஆனந்தம்தான்.

ரோஜாக்களில் சிறிய இனத்தில் தொடங்கி இருபது அடி உயரம்வரை ஏறி வளரக்கூடிய இனங்களும் உண்டு.


நூற்றுக்கு மேற்பட்ட இனங்களுடன் பல வர்ணங்களில் செடிகளும் உள்ளன.
தென் இத்தாலியின் ஆஸ்கன் மொழியிலிருந்து வந்த லத்தீன் சொல் ரோசா என்பது.

நடையும் துள்ளல் நடையாகி, சிரித்து மகிழ்ந்தபடியே உட் புகுந்தோம்.


பல வர்ண ரோஸாச் செடிகள் அழகாகக் கத்தரிக்கப்பட்ட மரங்களிலிருந்து பூத்துக்குலங்கின.

கிளைம்பர் இன ரோஜாக்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்தன. சிறிய மினி ரோஜாக்கள் மழலையாய் சிரித்தன.

புதிய இன ரோஜாக்கள் பெரிதாய் மலர்ந்து நின்று வா வா என அழைத்து மனத்தைகிறங்கடித்து நின்றன. இதில் பிங் நிறத்தாலான பூ எங்கள் எல்லோரின் அன்பையும் பிடித்துக் கொண்டது.


மிக நீண்ட நேரம் இனிய நறுமணத்தை நுகர்ந்து இன்புற்றோம்.


ரோஜா என்றதும் கருவி பாலகிருஷ்ணன் புன்னகை என்ற தலைப்பில் எழுதிய கவிதை ஞாபகத்திற்கு வந்தது.


புன்னகை
பூக்கள்தான் இந்த
பூவுலகை
நிறைக்கிறது.
ரோஜாக்களின்
புன்னகைதான் அதன்
முட்களை
மறைக்கிறது....

ரோஜாக்களைப் பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றோம்.


பதியமிடப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிறிய பூச்செடிகள்,ஓக்கிற் மலர்கள்,பிகோனியாஸ் கிறீன்கவுஸ் இரண்டினுள்ளே நின்று கவர்ந்திழுத்தது.


விரைந்து சென்றோம் எங்கள் போதாதகாலம் மூடியிருந்தது. கவலையுடன் வெளியே சுற்றி வந்து ஆசையைத் தீர்த்துக்கொண்டு அப்பால் சென்றோம்.


அழகிய மரவேலைப்பாட்டுடன் இளைப்பாறுவதற்கான கொட்டேஜ் அமைக்கப்பட்டிருந்தது.

பாதியாக வெட்டப்பட்டிருந்த மூங்கில்குழாய்களில் பசளையிடப்பட்டு சிறிய பூக்கன்றுகள் மரக்குத்திகளின் மேல் இருந்து குடிலுக்கு மெருகு சேர்த்தது. சற்று இளைப்பாறி விட்டுத் தொடர்ந்தோம்.

சிறீலங்கா வரைபடம் போன்று கட்டப்பட்டிருந்த குளம் சுற்றிவர மரங்கள் நாட்டப்பட்டு குளத்தின் நடுவே நீரினிடையே பெரிய கற்கள் வைக்கப்பட்டிருந்தது.


குளத்தில் சிவப்பு, கறுப்பு பெரிய இனமீன்கள் துள்ளித் திரிந்தன. நடுவே கல்மேல் தாவிச்சென்று படம் எடுத்துக் கொண்டோம் புதிய அனுபவமாக இருந்தது.

மாதேவி