Saturday, February 27, 2010

பதின்ம நினைவுகள்

பாடசாலைகள், நூல்நிலையம், கோயிற் பணிவேலைகள் என ஊரின் முக்கிய வேலைகளில் முன்நின்று வந்த பிரபலமான ஒருவர்தான் எனது அப்பா.

மிகவும் அன்பானவர். அதே நேரம் கண்டிப்பையும் நல்லொழுக்கத்தையும் கடைப்பிடித்தவர். எங்களிலும் எதிர்பார்ப்பவர்.

சிறுவயதில் தந்தை தாயாரை இழந்து விட குடும்ப பாரம் சுமந்தவர். தனது அயராத முயற்சியால் முன்னேறி தென் பகுதியில் வியாபாரம் செய்து நல்ல நிலையில் இருந்தார்.

புகைப்படம் நன்றி uyirmmai.com

சத்தம் போட்டுப் பேசத் தெரியாத மிகவும் சாதுவான அம்மா.

இவர்களுக்கு நண்டு சிண்டுகள் என எத்தனை எனக் கேட்கப்படாது....

ஆனால் குசேலர் வீடு அல்ல.

அப்பாவிற்கு கட்டுப்பட்டே அனைவரும் வளர்ந்தோம். பிள்ளைகளுக்கு இடையே பதின்மத்தின் கீழ் வயதில் கூட சண்டைகள் வருவதில்லை. ஒட்டுறவுவோடுதான் இருந்தோம்.

இதில் கடைக்குட்டியாக நான்.

உருப்பட்ட மாதிரித்தான் எனச் சொல்வது கேட்கிறது.

அக்கா ஒருவர். ஏனையோர் அண்ணாமார்தான்.

அக்காவிற்கும் எனக்குமான வயது வித்தியாசம் 10. என் மீது மிகுந்த அன்பானவர். கூடிய வயது இடைவெளியே எம்மை நன்கு பிணைத்தும் இருக்கலாம்.

சிறுவயதில் எனக்கான உடைகளை தானே தைத்து எனக்குப் போட வைத்து அழகு பார்ப்பார் அக்கா.

எனது பதின்ம வயதிற்கு எட்ட முன்பே அக்காவின் திருமணம் நடைபெற்றது. நம் ஊர் வழக்கப்படி பெண்கள் திருமணத்தின் பின்பு அப்பா அம்மாவுடன்தான் வசித்து வருவார்கள். அம்மம்மாவும் எங்களுடனேயே இருந்தார்.

பெண்ணிற்குத்தான் வீடு பண்ட பாத்திரங்கள் கொடுப்பார்கள். அதிலேயே போண்டியாகி விடுவார்கள் பலபேர்.

ஆண் பிள்ளைகளுக்கு கொடுக்கும் வழக்கம் இல்லை. ஆண்கள் திருமணம் முடித்து பெண் வீட்டிற்கே போய் விடுவார்கள். இப்பொழுதும் இந்த வழக்கம்தான் இருக்கிறது. ஆனால் என் அப்பாவை ஆண்பிள்ளைகளுக்கும் சீதனம் கொடுத்தவர் என சிலர் சீண்டுவார்கள்.

மாமனார் மருமகன் கொடுமை இருந்ததாகத் தெரியவில்லை :)

இம்முறைப்படி அக்காவும் அத்தானும் எங்களுடனேயே ஒரு வருடம் இருந்தார்கள். அப்பா அவர்களுக்கு நமது வீட்டுக்கு அருகே புதிய வீடு கட்டத் தொடங்கியிருந்தார். கட்டி முடிந்ததும் அவர்கள் அங்கே குடி போனார்கள்.

அத்தான் வெளி ஊரில் வேலை என்பதால் அக்காவிற்கு உதவியாக அம்மம்மா பெரும்பாலும் அங்கேயே இருப்பார்.

அக்காவும் தனியே சென்றுவிட வீட்டு ராணி யாரென உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இருந்தாலும் அதட்ட அடம்பிடிக்க மாட்டேன். நல்ல பிள்ளையாகவே இருப்பேன். சந்தேகம் என்றால் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பாருங்களேன்.

எல்லாம்தான் கிடைத்துவிடுமே. பிறகு ஏன் பிரளி செய்வான் என எண்ணம். :)
அண்ணாமார்களும் தங்கையின் மேல் உயிராக இருந்தார்கள் எனச் சொல்ல வேண்டியதில்லை.

பத்து வயதுவரை எங்கள் வீட்டில் இருபுறத்து வேலிகளிலும் பொட்டுக்கள் இருக்கும். ஒரு வீட்டியிலிருந்து மற்றதற்கு தவழ்ந்து சென்று வரக் கூடிய பொட்டுக்கள்.

கீரிப்பிள்ளை போல அவற்றிற்குள்ளால் நுழைந்து ஒவ்வொரு வீடுகளாய் கடந்து ஐந்தாம் வீட்டில் உள்ள ராஜன் தம்பி வீடுவரை சென்று விளையாடி வருவேன்.

அவர்களும் அவ்வாறே தவழல்தான் தெருவால் சுற்றிப் போகும் வழக்கம் எல்லாம் இருந்ததில்லை. அணில்கள் போல எல்லோருக்கும் பொட்டுக்களே பாதைகளாக இருந்தன.

இடைப்பட்ட வீடுகளில் பிள்ளைகள் இல்லை. இருந்தும் அன்னியோன்யமாக அனுமதித்திருந்தார்கள்.

ராஜன் வீட்டு நெல்லிக்காய் கொய்யா மரம் ஏறுவதிலிருந்து மாமி வீட்டு விளாம் பழம், கமலா அக்கா வீட்டு ஆட்டுக் குட்டி, மாட்டுக் கன்றுவரை குறுமன்களுக்குத்தான் சொந்தமாக இருந்தன.

லீவு நாட்களில் அண்டை அயலிலுள்ள பிள்ளைகள் எல்லாம் கூடி விளையாடுவோம். மாபிள் குண்டு, கிரிக்கற், கிளித்தட்டு, சடுகுடு, உயரம் பாய்தல் எனத் தொடர்ந்தது. தென்னை மரங்களில் கட்டிய ஊஞ்சல்கள் .....

கிளிசரியா மரத்துப் பொன்வண்டுகள் எமது நெருப்புப் பெட்டிக்குள் சிறையாவர்கள்.
தும்பி, தம்பளப் பூச்சி யாவும் கைக்குள் அடங்கின.

மயில் இல்லாவிடினும் அவற்றின் சிறகுகள் புத்தகங்களுக்குள்.

வீட்டு முற்றத்திலேயே பூங்காவனம், தேர்த் திருவிழாவிற்கும் குறைவில்லை. மேளக் கச்சேரி, கதாப்பிரங்கம் வில்லுப்பாட்டு என தொடர்கதையாக நடைபெறும்.

சின்ன மேளம் என பையன்கள் ஆட்டமும் போடுவார்கள்.

இதில் குண்டாக நல்ல வளர்த்தியாக சிவத்தப்பையன் ஒருவன் இருப்பான். புதிய கோலிக் குண்டுகள் வைத்திருப்பான் முகம் சுளிக்காமல் எங்களுக்கும் தருவான்.

மிகவும் நல்ல உள்ளம் அவனிடத்தில் இருந்தது. எல்லோருடனும் சிரிக்கப் பேசி எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பான். ஒருவருடனும் சண்டைக்குப் போக மாட்டான். எல்லோருக்குமே அவனைப் பிடித்திருந்தது.

அடிக்கடி வருத்தம் வரும் அவனுக்கு. ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருப்பான். பின் சுகமாகி வீடு வந்ததும் விளையாட வந்துவிடுவான். நாங்கள் மகிழ்ந்திருப்போம்.

வழமையாகப் இப்படியாகச் சென்று அட்மிட் ஆகி திரும்பி வரும் அவன் ஒரு முறை மீண்டும் விளையாட வரவேயில்லை.

"அவன் வயிறு வீங்கி ஆஸ்பத்திரியிலேயே செத்துவிட்டான்" என்று அண்ணா கூறினார்.

அதுதான் முதல் கேட்ட சாவு இடியாக இருந்தது.

இவனைப் புதைப்பார்களா? ஏரிப்பார்களா? என்ற கேள்வி சிறுசுகள் எல்லோருக்கும் எழுந்தது.

"எரித்தால் அவனுக்குச் சுடாதா?" எனக் கேட்டேன்.

செத்த வீட்டுக்குப் போகவிடமாட்டார்கள்.

அன்று மரண ஊர்வலத்தை ஒழித்து நின்று களவாகப் பார்க்க முடிந்தது. பாவம் அவனெனக் கூறி அழத்தான் முடிந்தது எங்களால்.

நீண்டகாலமாக மாபிள் விளையாட்டை விளையாட மனமே வரவில்லை. அவன் எங்களுக்குத் தந்திருந்த புதிய மாபிள்க் குண்டுகள் எப்போதும் அவன் நினைவை எழுப்பிக் கொண்டே இருந்தன.
புகைப்படம் நன்றி veyililmazai.blogspot.com/2006/12/21.html

ஒரு நல்ல நண்பனை இழந்த சோகம் எல்லோர் மனங்களிலும் இன்றும் நிலைத்து நிற்கிறது.

சிலர் பகிர்ந்தார்கள். பகிரும்படி கேட்டிருந்தார்கள்.

நானும் ஏதோ சொன்னேன். இன்னும் சொல்வேன்.

நீங்களும் உங்கள் பதின்ம வயது டயறியையும் பிரித்து பார்த்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன.

மாதேவி.

Sunday, February 7, 2010

அம்பேவல ஹீரோயினின் குத்தாட்டம்

நுவரெலியாவில் அமைந்துள்ள அம்பேவல பாற்பண்ணையில் வெள்ளாடுகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.


இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு இன ஆடுகள் குட்டிகள், காடாய்கள் தனித்தனியாக பாராமரிக்கப்பட்டு வருவதை காணக் கூடியதாக இருந்தது.

நெதர்லாந்து சாணன் இன வெள்ளாடுகள் இருந்தன. இவை ஏறத்தாள 40 கிலோவிலிருந்து 60 கிலோ வரை நிறை உடையன.


ஒன்று ஒன்றரை வருட காலங்களில் தாய்மையடையும் தன்மையன. வயிற்றில் சுமக்கும் காலம் 5 மாதங்களாகும்.

நீண்ட முடிகளுடன் கூடிய ஆடுகளும் இங்கு இருந்தன. அவை சிம்பு ஸ்டைலில் தாடி வைத்து தம்மை அழகுபடுத்தி்ப் பார்த்தன.

ஒழுங்கு பற்றி நிறையவே படித்திருந்தன. நாங்கள் இவைகளிடம்தான் கத்துக்கணும். கொம்புச் சண்டையெல்லாம் போடுக்கல.


இளம் ஆடுகள் ஒழுங்காக நின்று, கம்பி வேலிக்கு வெளியே போடப்பட்டிருந்த புற்களை தலையை நீட்டிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன.


இணையத்தில் வரப்போறம் எனத் தெரிஞ்சிடிச்சுப் போல. வெள்ளாட்டார் மிடுக்கான தோற்றத்தில் நிற்கிறார்.


ஒருவருக்கு ஏனிந்தக் கோபமோ? யார் மேல்?
வீட்டுக்காரி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு போய்விட்டாவோ?


தனியே ஒரு மூலையில் சுவருடன்கொம்பை வைத்து மோதிக் கொண்டிருந்தார்.

நல்ல காலம் அடைத்திருந்ததால் நாம் தப்பினோம்.

நல்ல புத்திசாலி முகத்தைக் காட்டாமல் தனக்குக் கிடைத்த 'அடையாள அட்டையைக் காட்டி நிற்கிறார்.


சுவரில் ஏறிநின்று குதித்துக் கொண்டு என்னைப் பார்... ஒழுங்காகப் படங்கள் எடு என சர்க்கஸ் காட்டிக் கொண்டு நின்றார்.


கிளிக் .. கிளிக் செய்த பின்னர்தான் தனது ஆட்டம் யாவும் முடித்து சந்தோசமாகக் கீழே இறங்கி நின்றார்.

எப்படியெல்லாம் கற்று வைத்திருக்கிறார் நிறையக் குத்துப் பாட்டுக்கு ஆடுவார் போல்.

அடுத்த தமிழ்பட சான்ஸ் நிச்சயம் இவருக்குத்தான்.

மாதேவி