Friday, November 9, 2012

பாட்டோடு புலரும் விடுமுறைப் பொழுதுகள்


வாரம் முழுக்க வேலை வேலை என ஓடித் திரியும் பலர் வாரவிடுமுறை எப்போது வரும் என ஆவலுடன் எதிர்பார்த்திருப்பர். வார முழுவுதும் அமுக்கி எடுத்த டென்சனுகள் அடங்கி சற்று ஓய்வு அப்போதுதான் சற்றுத் தலை நீட்டும்.

விரும்பிய பொழுதுபோக்குகளில் ஈடுபடுவார்கள்,

சிலருக்கு பறவைகள்போல பறந்து ஊர்சுற்றுவது பொழுது போக்காக இருக்கும். பலருக்கோ கும்பகர்ணனை மிஞ்சிய தூக்கம் பிடிக்கும். புத்தகப் புழுக்களோ கறையான் அரிப்பது போல புத்தகத்தையே அரித்து எடுத்துவிடுவார்கள்.

இவ்வாறு பல்வேறு பொழுபோக்குகளில் சினிமாப் பாடல்கள் கேட்டு ஆடுவோரும் பாடுவோரும் இருப்பர்,  சினிமாப் படம் என முண்டி அடிப்போரும், கடற்கரை, பூங்கா எனச் சுற்றுவோரும் என விதவிதமாக மனிதர்களின் விடுமுறைப் பொழுதுகள் மின்னலென வந்து பறந்து சென்றுவிடும்.


அதிகாலைப் பொழுது பியானோ இசையுடன் விடிந்தால்; எமது அடுக்குத் தொடரில் அது ஞாயிறு என அர்த்தப்படும்.

போட்டி போட்டுக் கொண்டு சில அடி தூரத்தில் உள்ள அடுத்த மாடித்தொடரில் பலத்த சத்ததுடன் பாடல் இசைக்க ஆரம்பிக்கும்.


ரக்கோட்டர் பெட்டி அலறத் தொடங்க பஸ் கார் ஓடும் தெருவே அமைதியில் ஆழ்ந்தது போலிருக்கும்.


மனைவியின் சிரமம் அறிந்த நல்ல துணைவர். அன்று விடுமுறை மனைவிக்கு. கணவனுக்கு டபுள் வேலை. காலைப்பொழுது வீடு துப்பரவாக்கும் வேலையுடன் ஆரம்பித்துவிட்டது என அக்கம் பக்கம், மேல் கீழ் எல்லாம் வெளித்துவிடும்.


காதலித்து கரம் பிடித்த துணைவியார் அல்லவா?

மாடித் தொடரில் இருக்கும் அனைவருக்கும் பசி கிளம்பும்படி அடுப்படியில் கமகம வெனச் சாப்பாடு தயாரிப்பு வேலையில் மனைவி மும்முரமாக இருப்பார்.

இவர் பாடலைப் போட்டு விட்டு வேலை செய்வார் போலும்.  

இனிமேல் பாடலுக்குப் போவோமா ? காதலித்த காலத்தில் அவர் விட்டுக் கலைத்துப் பாடிய பாடல்கள் போலும்.

கேளுங்களேன் பாடல்களை....

முதல் பாடல் இப்படி ஆரம்பிக்கும்.

"மாங்குயிலே...

பூங்குயிலே சேதி ஒன்று கேளு உன்னை மாலை இட தேதி சொல்லும் நாளு என்ன நாளு...."

அதைத் தொடர்ந்து "வந்தாள் மஹாலஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே...."



மனைவிக்குப் பயந்துதான் முதல் இரண்டுபாடலும் ஒலிக்கும்போல. அடுத்து.....

 "காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்....நேற்றுப்போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை...." பெட்டியுடன் சேர்ந்து தானும் அழுகின்றார் போல...

மனைவிக்குப் புரிந்து விட்டால் அய்யோ தும்புக்கட்டையை இவற்றை கையிலிருந்து பிடுங்கி விளாசிவிட்டால் ....


பாடலால் மனைவிக்கு சலாம் போடுவார்.;

"சொன்னால் நிற்பேனடி நீ சொல்லும்படி நடப்பேனடி........'"

ஒருமாதிரி மனைவியை ஏமாற்றிவிட்டார் என நினைக்கின்றேன்.

அடுத்து பாடுகிறார் பாருங்கள்......

"நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே பாசம் ஒரு நேசம் கண்ணாரக் கண்டேனே....." 

கலியாணம் செய்து வைத்ததற்காக அம்மாவை நினைத்து கலங்கி முறையிடுகிறார் என எண்ணத் தோன்றும்.

நேரில் வாய் திறந்து சொல்ல முடியாததை, மனைவிக்கு மறைமுகமாக எடுத்துச் சொல்கிறாரா?  இல்லையேல் மனக்கனவிலாவது சந்தோசப் படுகிறாரோ தெரியவில்லை.


கேளுங்கள்

"ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி......" எனப் பாடல் முடிகின்றது.

"உங்க வீட்டுப் பாடல்கள் எப்படி ? பாடல்போட வீட்டில் அனுமதி உண்டா ?"

"உங்கள் வீட்டில்?" என நீங்கள் எதிர்க் கேள்வி எழுப்புவது கேட்கின்றது.

"எங்கள் வீட்டிலா ?"

கணவருக்கு பாடல்கள் போட நேரமே கிடைப்பதில்லை.

பொய்சொல்லி தப்பிக்கிறாயா ? அல்லது தடா சட்டம் போட்டுவிட்டாயா? சொல் என்கிறீர்கள்.

தடாச்சட்டம் எல்லாம் போட்டதில்லை.

"நேரம் கிடைக்கும்போது எப்போதாவது பழைய பாடல்கள் விரும்பிக்கேட்பார்."

"அதுதானே என்ன? என்ன பாடல்? சொல்லு... சொல்லு... "

பாரதிபாடல் விருப்பிக்கேட்பார்....

"அச்சமில்லை... அச்சமில்லை உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை.... "



நான் என்ன அவ்வளவு மக்கா ?

ஹா....ஹா...புரிந்து கொண்டேன்.


நானும் விடுவேனா எதிர்பாட்டு பாடிடுவேனே...




"துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது .."
என விளாசிவிடமாட்டேனா....

ஹா....ஹா....


உங்கள் வீட்டுப் பாடல்கள் எப்படி ? ஊட்டத்தில் சொல்வீர்கள் தானே?

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.


-: மாதேவி :-