Thursday, September 6, 2012

மாது கங்கையில் Madu ganga படகுச் சுற்றுலா

கொழும்பு காலி பிரதான வீதியில் பலப்பிட்டிய அமைந்திருக்கிறது. இங்குதான் இந் நதி ஓடிக் கடலுடன் கலக்கிறது.


Ahungalle அப்பால் அடர்ந்த காட்டின் ஊடாக மாது கங்கை பாய்கிறது. இலங்கையின் இரண்டாவது பெரிய ஈர நிலமாக இருக்கிறது.


கீரிப் பிள்ளை இனங்கள், 303 வரையான தாவர இனங்கள் இங்கு உள்ளதாகச் சொல்கிறார்கள். இவை 95 குடும்ப வகைகளைச் சார்ந்தவையாகும். 248 வகையான முதுகெலும்புடைய விலங்குகள் உள்ளனவாம்.

மீன் பிடிக் குடும்பங்களே பெரும்பாலும் வாழ்கின்றனர். ஆற்றில் மீன் இறால் பிடிப்பதையும் இரசித்துப் பார்க்கலாம்.

புதிய வகை இனங்களான நண்டு, மீன், இறால் இனங்கள் இங்கு இருக்கின்றன.



வெளிநாட்டினர் மிகவும் விரும்பி சுற்றுலா செல்லும் இடம் என்பதால் பல ஆடம்பர ஹோட்டல்கள் கங்கைக்கு அருகில் இருக்கின்றன.

கொழும்பிலிருந்து 75 கிலோ மீற்றர் தூரத்தில் இவ்விடம் உள்ளது. 2.45 மணிநேரத்தில் சென்றடையலாம்.  


மோட்டார் படகுகளில் நதியில் சவாரி சென்று பல அற்புதமான காட்சிகளைக் காணலாம். உல்லாசப் பயணிகளின் பரடைஸ் எனவும் அழைக்கிறார்கள். இரண்டு கிலோ மீற்றர் வரை படகில் சென்று இன்புற்று வரலாம். சுற்றிவர 25-30 தீவுகள் இருக்கின்றன. ஆழமற்ற ஆறு.  ஆழமான இடத்தில் 3 மீற்றர் தாளம் இருக்குமாம்.

நாங்கள் மோட்டார் படகு ஒன்றில் ஏறி ஆற்றில் பயணித்தோம்.
வெள்ளை நிறப் பறவைகள் சிறிய மரங்களில் கூட்டமாகக் கூடியிருந்து மகிழ்கின்றன. செட்டையடித்துப் பறந்து திரிந்து எம்மையும் மகிழ்வித்தன. பாலத்தின் கீழாக பயணித்தோம்.


பாம்புத் தீவு, ஐந்து சதத் தீவு (Satha pahe Dupatha>) பன்சலத் தீவு, நய் தீவு எனச் சில தீவுகளுக்கு பெயர்களும் உள்ளன. சத பக துவா மிகவும் சிறிய தீவு. பழைய காலத்தில் 5 சதத்திற்கு வாங்கியதாக வாய் மொழிக் கதைகள் உள்ளன. சிலர் நாணய வடிவில் இருப்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது என்கிறார்கள்.

இரண்டு முக்கிய தீவுகளில் நைடுவ Nai Duwa, மாடுவா பெரிய தீவு. இது 562 மீற்றர் நீளம் கொண்ட தீவு. தீவுகளின் கரையோரங்களில் செழித்து வளர்ந்திருக்கும் சதுப்பு நிலமரங்கள் நீர் அரிப்பினால் தீவுகள் அழியாமல் பாதுகாக்கின்றன.

Maduganga Kotdoowa Rajamaha Viharaya
தேவாலயத் தீவு 800 ஆண்டுகள் பழமையானது. கோத்டுவா ராஜமஹா விகாரை இந்த கங்காவில் அமைந்துள்ளது.

ஐந்து சததீவைத்தாண்டிப் பயணித்தோம். மிகவும் சிறிய தீவு கல்லாலான சிறிய ஒரு கட்டடம்  இருக்கின்றது. மரம் ஒன்று பரந்து விரிந்து கிளைகள் பரப்பி நிற்கின்றது அழகாக இருந்தது.



நீர்ப் பாம்பு ஒன்று நீரின் மேல் ஓடித் திரிந்து பயங்காட்டியது. இவற்றையெல்லாம் இரசித்த படியே படகில் சவாரி செய்கின்றோம். பாலத்தின் கீழால் படகு செல்கிறது.

இருபறமும் அடர்ந்த மரங்கள் வளர்ந்து நிற்க கிளைகளுக்குக் கீழாக பயணித்துச் செல்வது சொல்ல முடியாத இனிய அனுபவத்தை தந்தது.




இடையே திகில் பயணமும் தொடர்கின்றது. நீரில் கபரகொயாக்களும் ஓடித் திரிந்து பயங் காட்டின.

விகாரை தூரத்தே அழகாகக் காட்சி தருகின்றது. படகில் தொடர்ந்து விகாரையைத்தாண்டிப் பயணித்தோம்.




உயரமான மேடுகளில் வீடுகள் அமைத்து மக்கள் வசிக்கிறார்கள். பொதுவாக தனித்தனி வீடுகளாகவே இருப்பதைக் கண்டோம். உயரக் குன்றில் அமைந்துள்ள கறுவாப் பயிரிடப்பட்டிருந்த வீட்டிற்கு படகை செலுத்து நிறுத்தினார்கள்.


படகிலிருந்து மகிழ்ச்சியாக இறங்கினோம். மேட்டில் அழைத்துச் செல்லப்பட்டோம். கறுவா மரங்களினூடாக ஒற்றை அடிப்பாதையில் ஏறிச் சென்றோம்.


நாங்கள் சென்று பார்த்த வீடும் தனித்திருந்தது. வீட்டைச் சுற்றிலும் நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த வீட்டுக்குச் செல்வதாக இருந்தாலும் படகை வலித்தே செல்லவேண்டும். பக்கத்து வீட்டார் தொல்லையிலிருந்து விடுதலை நேரம் கெட்ட வேளை அழைப்பு மணிகேட்காது.


ஓவ்வொரு வீட்டிலும் ஒரு படகு வைத்துள்ளார்கள். தாங்களே வலித்துச் சென்று மாதாந்திரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாகச் சொன்னார்கள்.

குடிசை வீடுதான். ஒரு கொட்டிலும் ஒரு அறையும் சாய்வாகத் திறந்த சமையலறையும் இருந்தது.

கொட்டிலில்; வெட்டிய கறுவா மரங்களை பரப்பி வைத்திருந்தார்கள் கத்தியால் கீறிக் காட்டினார்கள். வெயிலில் காய வைத்த துண்டங்கள் காயக்காய சுருண்டு வரும். ஓரளவு காய்ந்த துண்டங்களை கொட்டில் கூரையில் மேலே செருகி வைத்து நன்கு காயவிட்டிருப்பதைக் கண்டோம்.
கறுவா மரங்களையும் சென்று காட்டினார்கள். விற்பனைக்கு பைக்கற்களில் கறுவாக்களை வைத்திருந்தார்கள். கறுவாப் பொடியும், கறுவா எண்ணெயும் கிடைக்கின்றன. நாங்களும் இரண்டு இரண்டு பைக்கற்றுகள் வாங்கி வந்தோம்.

சிறிய குடும்பம் ஒன்று கணவன் மனைவி குழந்தை ஒன்று அவ்வீட்டில் வசிக்கின்றார்கள். பின்புறமுள்ள திறந்த சமையலறையைக் காட்டினார்கள். இரு விறகு அடுப்புக்கள் கட்டி வைத்திருக்கின்றார்கள். ஒரு பரணில் சட்டி பானைகள் அடுக்கி வைத்திருந்தார்கள்.

கறிவேப்பிலை மரம் சமையலறை அருகே செழித்து வளர்ந்து  நிற்கின்றது.
ஓர் சில கோழிகளும் நாய் ஒன்றும் அவர்களுடன் சிறு தீவைப் பகிர்ந்து கொள்கின்றன.

குழாய் மூலம் கொட்டிலுக்கு அருகே ஒரு இடத்தில் மட்டும்  தண்ணீர் வருகின்றது.

வெளி நாட்டுக் குடும்பம் ஒன்று எங்களுக்கு முன்பே இங்கு பார்க்க வந்திருந்தார்கள்.


பல அரிய காட்சிகளையும், பல உல்லாசப் பயணிகள் படகில் செல்வதையும் ஓடும் கங்கை ஆற்றில் பயணித்தபடியே கண்டுகளித்து வந்தோம்.

அவ்வூர் குடும்பம் ஒன்று ஆற்றில் பயணித்து செல்கின்றது. பெண் ஒருவர் குழந்தைக்கு வெயில் சுடாதபடி குடை ஒன்றைப் பிடித்தபடி வள்ளத்தில் அமர்ந்திருக்கின்றார். ஒருவர் படகை ஓட்டுகின்றார். தூரத்தே இருந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

நன்றி:- புகைப்படங்கள் கூகிளார் உதவியில் இணையம்

-: மாதேவி :-