Saturday, October 15, 2011

நீந்தி மகிழ கசூரினா கடற்கரைக்கு வாங்க

உயர்ந்த சவுக்க மரங்களுடன் இயற்கையின் படைப்பில் உருவான அழகிய கடற்கரை வடபகுதியின் கிழக்குக் கடற்கரை மணற்காடு ஒருவித அழகைத் தருகிறது என்றால் இங்கு கசூரினாவில் இன்னொரு அழகு மிளிர்கின்றது.


சவுக்க மரங்கள் நிறைந்திருப்பதால் கசூரினா Casuarina beach என்ற காரணப் பெயர் வந்திருக்கலாம். கடல் அரித்தாலும் சாய்திடாது மண்ணில் பற்றுக் கொண்டு இறுகப் பற்றி நிற்கும் சவுக்க மரங்கள் இதன் விசேஷம்.


வெற்றுக் கட்டுமரத்தில் கரைநோக்கி வருகிறார்கள் மீனவர்கள். மீன்கள் ஒழித்து ஓடிவிட்டனவா?

மகிழ்ச்சியான செய்தி அலைகள் அள்ளிச் சென்றுவிடும் என்ற பயம் இன்றி இங்கு குளித்து மகிழலாம்.


மணற்காட்டுக் கடல் ஆர்ப்பரிக்கும் கடல் என்பதால் அங்கு குளிக்க அனுமதி இல்லை.இங்கு மக்கள் தொலை தூரத்திலும் சென்று நீந்தி மகிழ்வதைக் காணலாம்.

மாலைச் சூரியனின் தண்மையான ஒளிக்கதிரில் நீச்சலிட்டு மகிழ்கிறார்கள் சுற்றுலா வந்தவர்கள்.

இவரைப்போல கடலில் மூழ்கிவிடுவேன் என கை உயர்த்தி உதவிக்கு மற்றவர்களை அழைக்க வேண்டிய அவசியம் இங்கில்லை. மிகவும் பாதுகாப்பான கடல்.


வட பகுதியின் காரை நகரில் இக்கடற்கரை அமைந்துள்ளது.யாழ் நகரில் இருந்து ஏறத்தாள இருபது கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. 45 நிமிடத்தில் வாகனத்தில் சென்றடையலாம்.


யாழ் குடாவின் மிகச் சிறந்த கடற்கரை எனலாம். பெரியஅலைகள் இல்லாத அமைதியான நீலக்கடல். கடலுள் சில மைல்கள் தூரம் வரை நடந்து செல்ல முடியும் என்கிறார்கள்.


வடக்கில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களில் இதுவும் ஒன்று. வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளை தன்னகத்தே இழுத்துக் கொள்ளும் இடமாக மிளிர்கின்றது.


சிலர் குடித்துக் கும்மாளமிடுவதும், காதல் சோடிகள்  கண்ணியக் குறைவாக நடப்பதும் சூழலுக்கு ஒவ்வாததாக மற்றவரை நாண வைக்கிறது.

சாரணியர் பயிற்சி முகாம்கள் இங்கு நடப்பதுண்டு. மிகவும் பிரபல்யமான இடமாக இருந்தாலும் லக்ஸரி ஹோட்டேல்ஸ் இங்கு கிடையாது. தங்கி இருந்து ரசிக்க விரும்புவோர் கடற்கரை ஓரம்  குறைந்த விலையில் வாடகைக்கு வீடுகள் எடுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.


பொலித்தீன் பைகளும் வெற்றுப் போத்தல்களும், உண்டு மிஞ்சிய எச்சங்களும் எனச் சூழல் மாசுபடாது இவ்வாறு அழகாக இருக்க எல்லோரது ஒத்துழைப்பு அவசியம்.

சுனாமியாலும் போராலும் பெரிதும் பாதிக்கபப்ட்டிருந்தது. போர் நின்ற பின் ஒரு சில வருடங்களாக மக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


யாழ் பெரு நிலப்பரப்பிலிருந்து காரை நகருக்குச் செல்லும் பாதை இப்பொழுது திருத்தப்பட்டு போக்குவரத்திற்கு வசதியாக இருக்கின்றது.


பெருந்திரளாக மக்கள் இங்கு வருகிறார்கள். கடலில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.


உப்பு நீரில் குளித்து வந்தவர்கள் தங்களை நல்ல நீரில் கழுவிக் கொள்ள நன்நீர்க் கிணறு இருக்கிறது.


கழிப்பிட வசதியும் உடைமாற்றுவதற்கான இடமும் இருக்கின்றன. ஆனால் சுகாதாரமானதாக அவை இல்லை. அவற்றைச் சீர்செய்துகொள்வது அவசியம்.


இயற்கை வழங்கியுள்ள அழகை பண்புடன் பாதுகாத்து வருவது மக்கள் கைகளில்தான் தங்கியுள்ளது. இங்கு வரும் மக்கள் இதற்கு ஒத்துழைப்பு நல்கி சுற்றுச் சூழலையும் கெடாது பாதுகாப்பார்களேயானால் அதுவே அவர்கள் இயற்கைக்குச் செய்யும் கைமாறாக இருக்கும்.


இயற்கையைப் பேணி நமக்கு அளித்துள்ள வளங்களைக் காத்து இன்புற்று இருப்போம்.

:-மாதேவி-: