Saturday, July 27, 2013

தொடர் பதிவு - கணினியில் தவளல்

எனக்கும் கிடைத்தது ஒரு வாய்ப்பு. பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தன்னார்வ நிறுவனம் ஒன்று நடாத்திய கணினியின் பயன்பாடு பற்றிய உரை நிகழ்வு அது.  அந்த நிகழ்வில் பங்கு பற்ற எனக்கும் ஒரு அழைப்பு கிடைத்தது.

கனவுகளில்தான் கணினியை அன்று கண்டோம்.


இது போர் முற்றி யாழ் குடாநாட்டில் நாம் முடங்கியிருந்த காலத்தில் நடந்தது. காலம் சரியாக ஞாபகம் இல்லை. 1994 அல்லது 1995 ஆக இருக்கலாம்.

அப்பொழுதுதான் முதன் முதலாக கடலளவு விடயங்கள் அந்தப் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறது. அள்ளத்தான் எமக்கு வழி தெரியவில்லை என்பது புரிந்தது.

அடு்ப்பை மூட்டுவதுடன் நின்றுவிடாது கணினியையும் ஒரு கை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அப்பொழுதே தோன்றிவிட்டது. ஆனால் அந்நேரம் கண்ணாலும் காணவில்லை.

நாங்கள் வசித்தது வட மாநிலம். வீட்டுக்கு வெளியே சென்றால் "போன மச்சான் திரும்பி வருவாரா" என்பது சந்தேகம். அப்போது நிலத்தைப் பார்க்காது வானத்தைப் பார்த்துத்தான் நடப்போம்.

ஹெலியிலிருந்து சூடு வருமா, பொம்பருக்குள் இருந்து குண்டுகள் விழுமா எனப் பார்க்க வேண்டியிருந்தது.  வானத்திலிருந்து கொட்டாமலும் காலன் அசுமிசமின்றி வருவான்.

ஆம் பாலாலி காம்பிலிருந்து ஷெல்  கூவி வருவதின் சத்தம் கேட்பதற்கிடையில் தலையில் விழுந்துவிடும்.

இப்படியான சூழலில் காலம் தவழ்ந்து கொண்டிருந்தது . ஒரு தடவை ஆன்மீக நிறுவனம் ஒன்று ஒழுங்கு செய்திருந்த பாடசாலை மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சியில் கணினியை இயக்குவது எப்படி என காட்டும் கருத்தரங்கு அப் பகுதியில் நடாத்தப்பட்டது.

அப்பொழுது நீயும் மாணவியாக இருந்தாயா எனக் கேட்கிறீர்களா?  ஆம் கணனியை கற்க விரும்பிய குடும்பத் தலைவியான மாணவியாக  இருந்தேன்.  கணினி எப்படி இருக்கும் என்பதை முதன்முதலாகக் காண ஆர்வம் கொண்டு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

அங்குதான் காணாததைக் கண்டு ஆ!  என்று விழி விரியப் பார்த்து நின்றேன்.

எப்படியும் கணனி ஒன்றைச் சொந்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததும் அன்றுதான்.



காலம் அலுக்காது ஓடிக்கொண்டிருந்தது. யுத்தம் ஓயவிடாது அதைத் துரத்திக் கொண்டே இருந்தது. உணவுக்கே மக்கள் துன்பப் பட்டுக் கொண்டிருந்த நேரம். பல வருடங்களாக எலக்ரிசிட்டியும் கிடையாது. இந் நிலையில் கொழும்பிலிருந்து எங்ஙனம் கணினியை வரவழைப்பது?

தாண்டிக்குளத்தடியால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வந்து கேரதீவுக் கடலில் படகில் ஏறி மறுகரை வருவதே  மனிதருக்கு பெரிய பாடாக இருக்கும்போது கணினியாவது மண்ணாங்கட்டியாவது?

கனவு களிமண்ணாக நீரில் கசிந்து கரைந்து வடிந்துவிட்டது.

சிறிது காலம்போனது. 1996 மீண்டும் இலங்கை இராணுவம் யாழ் குடாவைக் கைப்பற்றியது.. நாங்களும் 1997 ஆரம்பத்தில் குடும்பமாக கொழும்பு வந்து சேர்ந்தோம்.

வந்த புதிதில் மீண்டும் தொழில் தொடங்கி அம் முயற்சியில் ஈடுபட்டு ஆறு மாதங்கள் அளவில் ஓரளவு முன்னேற்றத்தை அடைந்தோம்.

அப்பொழுதுதான்  நீண்ட நாள் கணினி ஆசைக்கு வீட்டில் முடிவு வந்தது.

கணவரும் பிள்ளைகளும் விரல் தேயத் தேய தட்டித் தட்டிப் பழகினார்கள். நானோ தட்டவும் இல்லை. பழகவும் இல்லை. எப்படியோ கணினியை திறக்கவும் மூடவும் மட்டும் பழகியிருந்தேன் :))


இது போதாதா?.  மற்றையபடி பிள்ளைகள் கணவர் செய்வதை பார்த்துக் கொண்டிருப்பேன். எல்லோரும் முறுக்கிய முறுக்கில் கணினியின்  உயிரும் ஊஞ்சல் ஆடும். ரெக்னீசியனும் அடிக்கடி வீசிட் அடிப்பார்.

பிள்ளைகள்  கேம் விளையாடுவார்கள். அம்மாவும் பலூனை வெடிக்க வையேன் என்பார்கள். முயற்சிப்பேன் சரியாக வருவதில்லை. Tom rider  சுட்டு விளையாடு என்பார்கள். சுடப்போனாலும் அம்மாவுக்கு வடைதான் சுடத் தெரியும் எனச் சிரிப்பார்கள்..

கணவரும் கணனி கற்கச் சென்றதில்லை. தனது நிறுவனத்திற்காக தானே படித்து இயக்கக் கற்றுக் கொண்டார். வாடிக்கையாளர்கள் விபரங்கள்,  நிறுவனக் கொள்வனவு அவற்றி்ற்கான விபரங்கள்,கணக்குகள், என பதியப் பழகியிருந்தார்.

நானும் கணவருடன் வேலைக்கு சென்று உதவுவதுண்டு. அப்பொழுது தொடங்கி வாடிக்கையாளர்களின் பதிவு, விபரங்கள் அறிவதற்காக தட்டித் தட்டிப் பழகிக் கொண்டேன்.

நிறுவனத்தில் இரு கணனிகள் இருந்தன. ஒன்று கணவரின் பாவனைக்கு மற்றது ஊழியர்களின் பாவனைக்கு.  தொழிலுக்கு வேண்டிய விபரங்களை பார்வையிடப் பழகிவிட்டேன்.

 நானும் கணவரிடம் இருந்து அறிந்ததுதான். ஆங்கில எழுத்தின் மேல் தமிழ் எழுத்தை எழுதி ஒட்டிஅதைப் பார்த்துப் பார்த்து தமிழிலும் அடிக்கப் பழகினேன்.

கணவரின் ஆபீஸ் தேவைகளை வாசித்து திருத்திக் கொடுப்பதற்காக என செய்து பழகிக் கொண்டதுதான் எனது அனுபவம்.

அத்துடன் எங்கள் இருவருக்குமே வாசிக்கும் ஆர்வம் நிறைய இருந்ததால் கணினியி்ல் பத்திரிகைகள்,  தினமணி, நக்கிரன், பதிவுகள் போன்றவற்றில் கட்டுரைகள்  வாசிக்கப் பழகியிருந்தேன்.

பலரின் பதிவுகளையும் விரும்பிப் படித்திருக்கிறேன். அவ்வாறான வாசிப்பும் தேடலும்தான் தமிழ்மணத்தையும் அறிமுகமாக்கியது.

சமையல் திரட்டி நடாத்திய 'வாரத் திட்டம்' என் கண்முன் வந்தது. அதைப் பார்த்ததும் நானும் அதில் கலந்து கொள்ளலாம் எனத் தோன்றியது. கணவரும் உதவி புரிந்தார்.

சமையல் அனுபவத்தை தூயா அவர்களுக்கு அனுப்பினேன். அவரும் உற்சாகத்தோடு வரவேற்பு தந்தார். அப்படியாக காலடி எடுத்து வைத்தவள்தான் இவள். துயாவின் சமையல்கட்டு அவர்களுக்கு நன்றிகள்.

இப்பொழுதும் என்ன வாழுது எனக் கேட்கிறீர்களா?

 "வந்தாள் மஹாலஷ்மியே .........." என கட்டிய பாவத்திற்கு கணவரும்,

 "அம்மாவை வணங்காத உயிர் இல்லையே"  என மகளும்  சொல்லித் தருவதால் ஓடுகின்றது கணினியுடன் நாட்கள்.

அதுதான் உப்பைப் புளியைப் போட்டு அவர்களின் வாயை அடைத்து விடுகிறேனே என கணவரே கூறிவிட்டார்.... ஹா.. ஹா....

ஆனால் "உப்பு கூடி பிரஷர் உன்னால்தான்" எனச் சொல்ல இன்னும் நேரம் வரவில்லை..

சின்னுரேஸ்ரி முகப்புப் பட டிசைன் மகள் சின்னுவின் கைவண்ணம்.


என்னை எழுத அழைத்த "எனது எண்ணங்கள்" தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு நன்றிகள்.

பலரும் எழுதிவிட்டார்கள்

இன்னும் பலரும் தங்கள் அனுபவங்களை பகிர ஆவலுடன் இருப்பார்கள்.

என்னை  ஒருவரும் அழைக்கவில்லையே என நினையாது அனைவரையும் உங்கள் அனுபவங்களை தருமாறு அன்புடன் அழைக்கின்றேன்.  

உங்கள் அனுபவங்களைப் படித்து சுவைக்க காத்திருக்கின்றோம்.

சிலரையாவது அழைக்க வேண்டும் அல்லவா? சுவையாகத் தரும் இவர்கள் அனுபவங்களைப் படிக்க விரும்புகின்றேன்.

 நாச்சியார் வல்லிசிம்ஹன்

முத்துச்சரம் ராமலஷ்மி

 தீராத விளையாட்டுப் பிள்ளை  RVS

கவிதை வீதி செளந்தர்

சேட்டைக்காரன்  

-: மாதேவி :-

Saturday, July 13, 2013

புகையென மூடுபனித் துளியாய் வீசி எறியும் துன்ஹிந்த நீர்வீழ்ச்சி

பதுளை மாவட்டத்தில் துன்ஹிந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பதுளை நகரிலிருந்து 5 கிலோமீற்றர் தூரத்தில் பதுளை மஹியங்கன பாதையில் உள்ளது. இலங்கையில் உள்ள நீர்விழ்ச்சிகளில் மிகவும் அழகுடையது இது.


யூன் யூலை சிறப்பான காலநேரம். 210 அடி உயரத்திலிருந்து பாய்கிறது.
Smoky dew drops spray என்கிறார்கள்.


வழியில் kuda dunhinda என்ற சிறிய நீர் வீழ்ச்சியையும் காண முடியும். குளிப்பதற்கு தடை இருக்கின்றது. கற்பாறைகளுடன் கூடிய மிக ஆழமான இடம். அதனால் அபாயமானது பாரக்கச் சென்ற ஓரிருவர் காணாமலும் போயிருக்கிறார்கள். Dhunhinda Addaraya என்ற சிங்கள டிராமா துன்ஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்த அசோக ஹந்தகம என்பவரால் தயாரிக்கப்பட்டது.


பசுமையான பள்ளத்தாக்குகளும் மலைகள் சிறு ஓடைகள் இனிய குளிர்காலநிலை என சுற்றிவர ரம்யமான சூழல் மனதை மயக்கும் பாதையின் ஆரம்பத்தில் சிறிய கடைகள். குளிர்பானம் ரீ, தொதல், கொறிப்பதற்கு அவித்த சோளம், உப்பு மிளகாய் இட்ட அன்னாசித் துண்டுகள். சியம்பல எனும் சிறிய கற்புளி, கண்ணுக்கு விருந்தாக கலைப் பொருட்கள், அழகிய தொப்பிகள் என பற்பல கடைகள். இவற்றைப் பார்த்தவாறே வாயிலில் ரிக்கற் பெற்றுக்கொண்டு ஆளுக்கு 20 ரூபாய். நடையைத் தொடர்ந்தோம்.


சமதரை அல்ல. மண்மலைப் பாதை. மேடு பள்ளமாய் வளைந்து நெளிந்து சென்றது பாதை. நீர்வீழ்ச்சியைக்காண ஒருமைலுக்கு மேல் செல்லல் வேண்டும். இடையிடையே கடைகளில் இளைப்பாறி இருப்பதற்கு ஆசனங்கள் வைத்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் கடந்து அரை மைல் அளவு வந்துவிட்டோம். மலையின் ஓரத்தில் சீமென்தினால் கட்டிய ஒரு வியூ அமைத்துள்ளார்கள். ஆகா!  அழகு கொள்ளை அழகு. இங்கிருந்து அதள பாதாளத்தில் பாயும் நீர் வீழ்ச்சியின் அழகை கண்களால் பருகி மகிழ்ந்தோம்.

ஓய்வாக இருந்து செல்ல அங்கே ஆசனங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அப்பால் பயணத்தைத் தொடர்ந்தோம். பாதைஓரப் பாறைகளில் நின்ற மரக் கொப்பிலிருந்து எம் இனத்தார்கள் இறங்கி அங்கும் இங்கும் எம்மை நோக்கி ஓடி வந்தார்கள். குட்டிகளும் கூடவே பறந்து வந்தன. சிலர் பழங்கள் கொடுத்தனர். கொடுத்த பழத்தைப் பிடுங்கி வாயில் இட்டுக் கொண்டு சிலர் தா... தா எனக் கையை நீட்டிய படியே கிட்ட ஓடிவந்தனர்.


கண்டு கிளிக்குக் கொண்டே நகர்கின்றோம். அமைதியான இயற்கை அழகு பாதை எங்கும் படிகள் கிடையாது. கற்பாறைகள்தான் இடையிடையே இருந்தன. மேலே ஏறி கீழே இறங்கி எனச் சென்று கொண்டிருந்தோம்.

அடுத்து வந்ததே ஆடு .. ஆடு ... பாலம்....


ஒருவாறு ஏறி ஆடி ... இரு புறமும் கைகளையும் பிடித்து ஆடிச்சென்று இறங்கினோம்.


அதைத் தொடர்ந்து பாதை சீரானதாக இல்லலை. அந்தோ!  மலையின் ஓரமாய் பாதை சென்றது. கீழே அதளபாதாளம். கரணம் தப்பினால் ....... நிச்சயம்.  மிகவும் மெதுவாக அடி மேல் அடி வைத்து பூனையார்கள் ஆனோம். கீழே இறங்கிச் செல்கின்றது பாதை. கற்படிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காலை அகல எட்டி வைத்து இறங்குவதே மிகவும் சிரமமாக இருந்தது.

இந்தா வந்துவிடும் நீர் வீழ்ச்சி அருகே கண்டு மகிழலாம் என்று எண்ணம். இளைத்துக் களைத்து செல்லுகின்றோம். சில இடங்களில் ஒருவருக்கு ஒருவர் ஏறி இறங்க கைகொடுத்து உதவுகின்றோம். கீழே செல்லச் செல்ல பாதை மிகவும் மோசமாக இருந்தது. முன்னால் நானும் மைத்துனியும் பின்னால் பிள்ளைகள் கணவர்.

ஓரிடத்தில் திடீரென பாதாளப் படிகள். பள்ளத்தைப் பார்த்து திகைத்து நின்றது மனம். கீழிருந்து மிகவும் சிரமத்துடன் ஏறி வந்த பெண்ணுக்கு ஒதுங்கி வழி விட்டபடியே யோசனையில் நான் நின்றிருந்தேன். படிகள் எட்டியே இருந்தன. மேலே வந்த பெண்மணி 'கொச்சர கதறராய் '  ரொம்ப கரைச்சல் என்றார்.

இதைக் கேட்டதும் எனக்கு கிலி பற்றிக் கொண்டது.



'சிறீபாத கொந்தாய்' சிவனொளிபாதம் நல்லது எனவும் பெண்மணி கூற நானும் மைத்துனியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி தொடர்வதில்லை திரும்புவது என்றும் இவ்வளவே நீர் வீழ்ச்சி பார்த்தது போதும் முதல் வியூவிற்கே மீண்டும் சென்று பார்த்து மகிழ்வோம் எனப் பேசிக் கொண்டோம்.

நாங்கள் திரும்பிச் செல்வதாகக் கூறிவிட்டோம்;.

பிள்ளைகள், கணவர் தொடர்ந்தார்கள். துன்ஹிந்தையை அருகே பார்க்க.

நாங்கள் மீண்டு வந்து மேல் உள்ள வியூவில் நின்றபடியே நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு ஆடுபாலத்தில் ஏறி இறங்கி முன்வாயிலை அடைந்தோம்.


கடையில் போட்டிருந்த ஆசனத்தில் களைதீர அமர்ந்து பார்த்திருந்தோம். சற்று நேரம்செல்ல போன் கோல் மதியம் ஆகிவிட்டதா ஹோட்டலில் சென்று உணவை அருந்திவிட்டு அவர்களுக்கு பார்சல் வாங்கி வாருங்கள் என்றார்கள்.
சற்றுதள்ளி நல்ல ஹோட்டல் ஒன்று இருந்தது. சென்று ரைவரும் நாங்களும் சாப்பிட்டுவிட்டு  மீண்டு வந்து காத்திருந்தோம்.

சற்று நேரம் செல்ல மூவரும் போரில் வெற்றி கொண்ட வீரர்கள் போல களைத்த உடலும் பெருமிதம் பொங்கும் முகத்துடனும் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.

அடடா வந்துவிட்டார்களே என்று பார்த்தபோது பின்புறமாய் கையைக் கட்டிக் கொண்டு வந்தார் கணவர். கூட ஒருவர் கைகளில் என்ன என எட்டிப் பார்த்தபோது அட! தன்னைப் போல ஒருவரைக் கூட்டி வந்துவிட்டாரே.


கீழே செல்லச் செல்ல பாதைகள் மிகவும் மோசமாக இருந்ததாக சொன்னார்கள்.

நீங்கள் வராததும் நல்லதே என்றாள் மகள்.

கீழே சென்று பார்க்க கட்டிடம் கட்டி இருக்கிறார்கள். அங்கிருந்து கொட்டும் நீர்வீழ்சியின் அழகைக் கண்டு களித்தார்களாம்.

பலரும் கட்டிடத்துடனே பார்த்து ரசித்துவிட்டு திரும்பிவிட்டார்களாம். தாங்களும் ஓர் சிலரும் கீழே ஒடுங்கிய மலைப் பாதை வழியே சென்றார்களாம்.  ஒடுங்கிய பாதையின் இருபுறங்களிலும் புல்கள் கற்களும் சறுக்கீஸ் விளையாட்டுக் காட்டின. அவற்றையும் தாண்டி கீழே சென்று துன்ஹிந்த நதியில் கால் பதித்து அருகே கொட்டும் நீரையும் கண்டு களித்து திரும்பியதாகச் சொன்னார்கள்.


"ஓரிடத்தில் சிரமப்பட்டு நிலத்தில் இருந்து அருகிருந்த பாறைகளைப் பற்றி ஒரு காலை கீழே விட்டு அது சரியாக தரையில் பதிந்ததை உறுதிப்படுத்திய பின் மிகவும் சிரமத்துடன் மற்றக் காலையும் கீழே போட்டு இறங்கினார்களாம். கரணம் தப்பினால் துன்ஹிந்தவில் குருதி ஆறு பாய்ந்திருக்கும்." என்றாள் மகள்.

துன்ஹிந்தையில் கால் பதித்த மூன்று ஜோடிப் பாதங்கள் வாழ்க! என வாழ்த்திவிட்டோம்.

0..0.0.0..0