Friday, August 16, 2013

கொழும்பு மயூராபதி ஆடிப்பூரத் தேர் தீர்த்தம்

தலைநகர் கொழும்பு 6 மயூரா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் மயூரபதி சிறீ பத்திரகாளி அம்மன் ஆலயம். "அம்பிகையே  ஈஸ்வரியே எம்மை ஆளவந்து கோயில்கொண்ட வேப்பிலைக்காரி " ஆக வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் அருளும் அன்னையாக விளங்குகின்றாள்.

செவ்வாய் வெள்ளி தினங்களில் சிறப்பான பூசைகளும், பெளர்ணமி, நவராத்திரி, சிவராத்திரி, திருவெம்பாவை போன்ற  தினங்களில் விசேடஅபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

வருடாந்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வருடம் 26வது வருடாந்த மஹோற்சவம் ஆடி மாதம் நடாத்தப்பட்டது. ஆடிப்பூரம் தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்த உற்சவமும் வெகுசிறப்பாக நடாத்தப்படுகிறது.

தேர்  வண்ண நிறங்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் சூழ வீதிவரும் காட்சி மனதுக்கு இதத்தை தரும்.



தலைநகர் கொழும்பு வாழைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு பக்தி மயம் வீசி விளங்குவதைக் காணலாம். வீடு, கடை வாயில்களில் பூரண கும்பம்வைத்து அம்பாள் வீதிவலம்வரும்போது வழிபடுவார்கள். ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெறுவர்.

தேர்த் திருவிழா அன்று பெண்களின் பாற்குட பவனி காலையில் ஆரம்பமாகும். பால்குடபவனியையும் அம்பாள் பால் அபிசேகத்தையும் கண்ணாரக் காண்பது குளிர்ச்சி.



அங்கப்பிரதட்சணை, காவடி, கற்பூச்சட்டி,  துலாக்காவடி எனத் தங்கள் நேர்த்திக் கடன்களை அடியார்கள் செலுத்துவார்கள்.

பஞ்சரதத்தில் அம்பாள் தேரேறி வீதி உலா வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.



தீர்த்தோற்சவம் இந்து மாக்கடலில் நடாத்தப்படுகிறது.


அம்மன் தீர்த்தமாட வீதி வரும்போது தவில் நாதஸ்வர கோஸ்டியினர் முன்னே வரும் காட்சி இது.




 அம்பாள் தீர்த்தோற்சவத்துக்காக எழுந்தருளி வரும்காட்சிகள்.


ஆரம்பத்தில்  இரு அரச மரங்களுக்கு நடுவில் வேப்பமரம் அமைந்திருக்க அதன் கீழ் சூலமாக வைத்து மக்களால் வழிபடப்பட்டு வந்தாள்அம்மன். பின் சிறிய தகரக் கொட்டகையில் அமைந்திருந்து 1980களில் அடியார்களுக்கு அருள் பாலித்து வந்தார்ள்.

நாளடைவில் பெருகி வரும் பக்தஅடியார்களின் விருப்பத்தின் படி 85 அளவில் ஆலயம் கட்டத் தீர்மானித்து ஆலயத் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.


1987 அளவில் பொன் வல்லிபுரம் அவர்கள் மேற்பார்வையில் ஆலயப் புணருத்தாரணங்கள் ஆரம்பிக்பப்பட்டன. இந்தியாவிலிருந்து தெய்வ விக்கிரகங்கள் வரழைக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டன.

1987 நவம்பர் மாதம் அம்மனுக்கு கும்பாபிசேகம் நடாத்தப்பட்டு விழா சிறப்புற எடுக்கப்பட்டது.

கலைக் கூடம் ஒன்று ஆலய சூழலில் அமைக்கப்பட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஆலய முகப்பில் கல்யாண மண்டபமும் கட்டப்பட்டது. திருமணங்கள், பூனூல் சடங்குகள், நடாத்தப்பட்டு வருகின்றன.

மக்கள் ஜாதி மத பேதமின்றி கோவிலில் வழிபட்டு வருகின்றனர்.


கடற்கரைக்கு  தீர்த்தம் ஆட அம்பாளுடன் செல்லும் அடியார்கள் கூட்டம்.

அனைவரும்  மயூரபதிசிறீ பத்ரகாளிஅம்மன்  அருள் பெற்று வாழ்வோம்.