Tuesday, October 12, 2010

யானைகள் மத்தியில் நாம் ...

இந்த மின்னேரிய வன சரணாலயத்தில் 24 வகையான பாலூட்டி இனங்கள் வாழ்வதாகச் சொல்கிறார்கள். அதில் மிக முக்கியமானவர் உருவத்தில் மிகப் பெரியவரான யானையார்தான்.


மொத்தம் 200 வரையான எண்ணிக்கையில் இந்தச் சரணாலயத்தில் வாழ்கிறார்களாம்.

சிறுத்தைகளும் காணப்படுகின்றனவாம். ஆனால் எங்கள் கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டார்கள் போலும்.

தான் கண் விழித்திருக்கும் எம் கண்ணில் படாத சிறுத்தை

இவ்வனம் வனபரிபாலன இலாகாவின் (Department of wild life Consevation) கீழ் இயங்குகிறது. 

  அதே போல கரடிகளும் உள்ளனவாம். Sri Lankan Sloth Bear என்பார்கள். சிங்களத்தில் வலகா. மேலே உள்ள புகைப்படம் தமிழ் விக்கிபீடியாவில் சுட்டது.


முதலைகளும் தாராளமாக உலவுகின்றனவாம். நல்ல காலம் ஜீப்பிலிருந்து கீழே இறங்கி கீழே மின்னேரியாக் குளத்துள் கால் வைக்க இடம் தராததால் 
தப்பித்தோம்.


இலங்கையில் 400க்கு மேற்பட்ட பறவையினங்கள் வாழ்கின்றனவாம். அவற்றில் 160 இந்த வனத்தில் காணப்படுகின்றன என்ற தகவலும் வனபரிபாலன இலாகாவின் தகவலாகும்.

எல்லோருக்கும் பிடித்தமான யானையார் அனேகம் இருப்பதால் அவரைப் பற்றி சற்றுப் பார்த்துவிட்டுச் செல்வோம்.


யானை இனத்தில் எஞ்சியுள்ளது 3 இனங்கள் மட்டுமே. ஆபிரிக்க புதர்வெளி யானைகள் ஒரு வகை. ஆபிரிக்கக் காட்டு யானைகள் இரண்டாவது வகை. ஆசிய யானைகள் மூன்றாவது வகை.

ஆசிய யானைகள் இலங்கை இந்தியா, இந்தோனசியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இவை ஆபிரிக்க யானைகளை விட சிறிய காதுகளை உடையன.  ஆசிய யானைகளுக்கு காதுகள் வெளிப் புறம் மடிந்திருக்கும். ஆபிரிக்க யானைகளுக்கு காதுகள் உட்புறம் சுருண்டு இருக்கும்.

பாலூட்டி வகையைச் சேர்ந்த தாவர உண்ணி விலங்காகும். ஒரு நாளுக்கு 150 - 170 கிலோ உணவை உட்கொள்ளும். விரும்பிய உணவு கரும்பும் மூங்கிலுமாகும். நிலத்தில் வாழும் மிருகங்களில் உருவத்தில் பெரியது இதுதான். காட்டு ராஜா சிங்கம் புலி போன்ற வலிமையான மிருகங்கள் கூட நெருங்க முடியாத பலம் இதற்கு உண்டு.

6.6 – 11.8 அடி வரை உயரமுடையது. எடை 3000-5000 கிலோ வரை இருக்கும். மனிதர்களைத் தவிர்த்து நீண்ட நாள் வாழக் கூடியது இதுவாகும். 70 ஆண்டுகள் வரை வாழக் கூடியது.

ஆண் யானையை களிறு என்பர். பெண் யானை பிடி எனப்படும். யானையின் குட்டியை குட்டி யானை என்றே அழைப்பர்.

சினைக் காலம் 22 மாதங்கள். குட்டி 90லிருந்து 115 கிலோ வரை எடையுள்ளது. வளர்ந்த ஆசிய ஆண் யானைகளுக்கு தந்தங்கள் உண்டு. ஆபிரிக்க யானையில் இரு பாலாருக்கும் தந்தங்கள் இருக்கும். தந்தம் 3 மீற்றர் வரை வளர்ந்திருக்கும்.

மிகச் சிறந்த கேட்கும் திறன் இதற்கு உண்டு. மிகுந்த புத்திக் கூர்மையுடையது.

தோல் 3-4 செமீ தடிப்புள்ளதாக இருக்கும்.

வெப்பதிலிருந்து காப்பதற்காக உடல் முழுவதும் மண்ணை அல்லது சேற்றைப் பூசிக் கொள்ளுமாம்.

யானையின் சத்தம் பிளிறல் எனப்படும்.

வல்விலங்கு, கைமா, எறும்பி, சிந்துரம், புகர்முகம், வாரணம், போதகம், மாதங்கம், வேழம், கரி, கயம், களிறு. முதகயம், இபம் என்றெல்லாம் எமது தமிழில் இவரை அழைத்திருக்கிறார்கள்.

முதலில் பார்த்தவர் முன்காலை ஆட்டி ஆட்டி புல்லை துதிக்கையால்  சுழற்றிப் பிடுங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

புற்களைச் சுருட்டியெடுத்து....

அவரை அருகே சென்று பார்த்த போது அவர் எம்மைக் கண்டு மிரளவே இல்லை. தன் வேலையில் கருத்தாக இருந்தார்.

இயற்கை சூழலில் உல்லாசமாய் திரியும் அவரை மிக அருகே சென்று பார்த்தது புதிய அனுபவத்தையும் சொல்ல முடியாத மகிழ்வையும் கொடுத்தது.

அவரை நன்கு பார்த்து இரசித்துவிட்டு அப்பால் திரும்பினோம்.


சிப்பாயாக ஒருத்தர் நின்று எம்மைக் கண்டு விட்டு சல்யூட் அடித்துக் கொண்டார்.

சல்லூட்

மோகனும் வாகனத்தை அவர்அருகே செலுத்தினார். இருவருக்கும் கைகால் புரியாத மகிழ்ச்சி.
வேறேன்ன நெற்றில் வரப்போகின்றோம் என்றுதான்.

அப்புறம் மண்குளியல் செய்து காட்டினார். மண்மழை பொழிந்ததைக் கண்டோம். மிகவும் அருமையாய் இருந்தது. இவருக்கு டபுள் டாட்டா…

இடையே கண்டவர்கள் பறவைகள் விலங்கினங்கள் இவர்கள் உங்களுக்கு

ஹலோ சொல்ல அடுத்தபதிவில் வருவார்கள்...

சென்று கொண்டிருந்த வண்டியை காட்டின் உட்பகுதியை நோக்கிச் செலுத்தினார் மோகன். நெருங்கிய காட்டு மரங்களின் கொப்புகள் தலையை முட்டி வந்தன.

அவர்ந்த வனத்தில் குறுகிய பாதை
பயத்தில் தலையை வளைத்துக் கொண்டோம்.
சில பக்கப்பாட்டில் கைகளிலும் முதுகிலும் இடித்தன.

அத்துடன் புதிய சத்தமும் கேட்கத்தொடங்கியது கிலியையும் தந்தது.
கரடியாய் இருக்குமோ… ஒருவரும் பேசவே இல்லை.
சத்தம் தொடர்ந்தது எமது வாகனத்துக்கு அருகாமையில்.

ஹா..ஹா.. நிலத்தில் கிடந்த பட்ட தடிகள் ஜூப்பில் இழுபட்டுவந்த சத்தம் தான் அது என்று தெரிந்துகோண்டோம்.

சென்றுகொண்டிருந்த பாதை சற்று மரங்களற்ற வெளியை அடைந்தது.

ஆகா ஆச்சரியம்!

இத்தனை கால்களா இந்த யானையாருக்கு?
இவருக்கு எத்தனை கால்கள். நீங்களே பார்த்துச் சொல்லுங்கள்.

எம்மைக் கண்டதும் அவருக்கு கால்கள் பலவாயின. அம்மா கையால் சிக்னல் கொடுத்துவிட்டார்.

“குழந்தைகளே மனிதப் பிசாசுகள் வருகுதுகள்” ஒழிந்துகொள்ளுங்கள்.
அவர்களும் உசாராகி தாயுடன் ஒட்டிக்கொண்டனர். வாகனத்தை முன்னே செலுத்தி கண்டுகொண்டேன்… கண்டுகொண்டேன்… பாடினோம்.

சிறுசுக்கு சிரித்த முகம். அள்ளி அணைக்கலாம்போல் இருந்தது. சிறிது நேரத்தில் தாயைவிட்டு சற்று ஓடி கையை வீசி வீசி ஆட்டி தாம்… தோம் என ஓடினார்.

நான் ஒருத்தி எனக்கு இருவர்.
எங்கட சிறிசுகளும் நல்லாச் சிரிச்சிதுகள்.   

அம்மா பிள்ளைகளாகச் சேர்ந்து அழகிய ஊர்கோலம் புறப்பட்டார்கள்.

நாங்களும் அவர்களை விட்டு விலகி ஓரமாகப் பயணப்பட்டோம்.



திரும்பி வரும் வழியில் நாங்கள் ஒரு சிறிய ஓடையைக் கடக்க வேண்டியிருந்தது.


கடக்க முற்பட்டபோது மறுகரையில் அடர்ந்த மரங்களின் இடையே இருந்து....

மிகவும் ஆவேசமாக ....

ஆவேசமாக எம்மை நோக்கி..

யார் அடித்தார்? ... ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!
 
வீட்டுக்காரி கொண்டைப் பின்னால் காதில் குத்திவிட்டாவா?

வேகமாக எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
எமக்குச் சற்றுப் பயமாகவும் இருந்தது.

வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தார்
 மோகனும் உசாராகவே இருந்து கொண்டார்.

ஓடைக்கு நடுவே நாம் செல்ல இருக்கும் பாதையால் இறங்கி வந்தால் நாம் பின்னோக்கி வாகனத்தை எடுக்க வேண்டிய கட்டாயம். எல்லோரும் மூச்சை அடக்கி ஒரு முகமாக அவரை உற்று நோக்கியபடி இருந்தோம்.

நல்லகாலம் நம்முடன் முட்டாமல் விறுவிறுவென மேல் பாதையால் சென்று கொண்டே இருந்தார். நாங்கள் ஓடையைக் கடந்து அவர் என்ன செய்யப் போகிறார் எனப் பார்க்கப் பின்தொடரந்து சென்றோம்.


ஓரளவு தூரம்  காதை விசிறிக் கொண்டு விரைந்து சென்றவர் அடர்ந்த வீடொன்றில் ஓடி மறைந்தார்.

மறைந்த காட்டு வீடு கீழே.

காடு அவர்களது வீடு

க்ளிக்கிக் கொண்டோம். மனைவியிடம் போட்டுக் கொடுக்கத்தான்.

-: மாதேவி :-