Thursday, October 22, 2009

கண்ணன் இல்லாத கோகுலம் அம்பேவல

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியினில் கன்றினைப் போல் மாயக் கண்ணன் .... லீலைகள் பல புரிந்த சியாமள கண்ணனின் கோகிலத்தின் நினைவுகள் எழுந்து ஓடின.

இலங்கையின் மத்தியப் பிரதேசமான நுவரெலியாவிலும் கோகுலத்தை ஒத்த இடம் உண்டு. ஆனால் மாயக் கண்ணன்தான் இல்லை.

அம்பேவல பச்சைப்பசேலென்ற பரந்த புல் சமவெளி இயற்கை கொழிக்க வரவேற்கிறது. பாம் (Farm) யைச் சுற்றிலும் அமைந்துள்ள மிகப் பரந்த நிலப் பரப்புக்களில் வெள்ளை, கறுப்பு, பிறவுன் என பலவித நிறங்கள் கொண்ட மேனியுடன் உடலில் கொழுத்த ஜேஸி இனத்தைச் சேர்ந்த உயர்தர மாடுகள் கூட்டம் கூட்டமாக புற்களை மேய்ந்து சென்றன.

பயத்தை விட்டுவிட்டு மெல்லத் தொட்டுப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. பாம்மைத் தாண்டி ஓரிரு மைல்கள் பிரயாணம் செய்தால் அழகிய சுத்தமான லேக்கைக் காணலாம். பத்துப் பதினைந்து பேர் செல்லக்கூடிய அழகிய இரு படகுகள் காத்திருக்கின்றன.

லேக்கைக் சுற்றிக் காட்டுவதற்கு. நல்ல காலம் செல்ப் போட்டிங்கைக் காணவில்லை. தப்பித்தோம் பிள்ளைகளிடமிருந்து.

இதையும் கடந்து ஹைலண்ட் பால் பக்டரி வளாகத்தை அடைந்தோம்.


வழியில் நெடிய காட்டு மரங்கள் செடி கொடிகள் என சுற்றிச் சூழ்ந்திருக்க நடுவே பாதை செல்கிறது. இனிய காட்டு வழிப்பயணம் பயத்தை நீக்கி நல்ல அனுபவத்தைத் தருகிறது.




பக்டரியைச் சென்று அடைந்தால் அங்கும் பலர் பெரிய ரூரிஸ்ட் பஸ்களில் ஏற்கனவே பார்வையிட வந்திருந்தார்கள்.


நாங்கள் சென்ற நேரம் மதியமாகிவிட்டதால் எங்கள் துர்ரதிஸ்டம் பக்டரி மதிய உணவுக்காக மூடப்பட்டுள்ளது.

ஒரு மணிநேரத்தின் பின் திறக்கும் எனக் கூறினார்கள். அருகே அமைந்திருந்த சிறிய பூங்காவில் உல்லாசப் பயணிகள் பலர் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். சிலர் உணவருந்தினர். பாம் (Farm)யை பார்த்துவிட்டு மீண்டும் திரும்பி வருவோம் எனக் கூறியபடியே வந்தவழியே திரும்பினோம்.

பண்ணையின் முன்வாயிலில் இருந்து நடந்து செல்லும் பாதையின் இருபுறமும் அழகுப் பூக்கன்றுகள் பூத்துக் குலுங்கின.






























இடையிடையே மலை நாட்டு மரக்கறிகள் கரட்,























கோவா, லீக்ஸ் பயிரிடப்பட்டு பசுமைத் தோட்டங்களாகக் காட்சி தந்தன.

















லெடியூஸ் இனத்தில் புதிய சிவத்த வகை பயிரிடப்பட்டிருந்தது.
அனைவரையும் கவர்ந்தது.
















பசுக்கள் பெரிய செட்போன்ற தொழுவத்தில் அடைக்கப்பட்டு உணவூட்டப் பட்டுக்கொண்டிருந்தன.
















உடனுக்குடன் அவற்றின் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவற்றின் சாண நெடி உள்ளே நீண்ட நேரம் நிற்க முடியாதபடி எம்மை வெளியே செல்லத்தான் செய்தது.

இவ்வாறு அதிக அளவில் தொகையாக வைத்துப் பராமரிப்பது என்பது சிரமமானது என்பது பார்க்கும் போதே புரிந்தது.

பால் கறக்கும் இடம் இனிய அனுபவம். பசுக்கள் நிரையாக நிற்பாட்டப்பட்டு யந்திரங்களின் உதவியுடன் பால் கறக்கப்படுகிறது.




ஒவ்வொரு முலைகளுக்கும் ரியூப் போட்டு மின் அசைவினால் கறக்கப்படுகிறது. பின் அவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்து பெரிய போத்தல்களில் கை படாமலே சேர்க்கப்படுகிறது.




மூடிய கண்ணாடிகள் ஊடாக பார்வையிடுவோர் முண்டியடித்துக் கொண்டிருக்க இடையே புகுந்து கண்டு களிக்க வேண்டியிருந்தது.















கோகிலத்துப் பசுக்கள் எல்லாம் கோபாலன் குரலைக் கேட்டு நாலுபடி பால் கறக்குது கிருஷ்ணாயி ..

அடுத்து நாம்பன் பசுக்கள் தனியே பராமரிக்கப்பட்டு தொழுவத்தில் நிற்கின்றன.















தாயாகப் போகும் அன்னையருக்கு தனியே விசேட பராமரிப்புடன் கூடிய கவனம் எடுக்கப்படுவதை அவதானித்தோம்.
















பாற்கட்டி பெரிய தட்டையான தட்டுக்களில் உறைநிலையில் வைக்கப்பட்டு உறைந்த பின் எடுத்து சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.




இது மெசினினால் அல்ல மனித வலுவினால். இதுவும் கண்ணாடியால் மூடப்பட்ட அறையிலேயே. நாம் வெளியே நின்று பார்க்கக் கூடியதாக இருக்கிறது.





எங்கும் பசுக்கள் பராமரிப்பு எனஅனைத்தையும் ரசித்தபடி வந்த பொழுது கத்தரித் தோட்ட வெருளிகளாக பசுக்களின் மண்டை ஓட்டை வைத்திருப்பது மனத்தைக் குடையவே செய்தது.
















மாதேவி

Tuesday, October 6, 2009

1887 ல் கட்டப்பட்ட ஏரியில் 2009ல் போட் சவாரி


கிறகரி லேக் நோக்கி எமது வாகனம் பயணப்பட்டது. இது நகரிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

அக்காலத்தில் கவர்னராக (1872 - 1877) இருந்த Gregory அவர்களால் 1887ல் கட்டப்பட்டதாம். பீதுருதாலகால மலையிலிருந்து பாயந்து வரும் நனுஓயா அருவியை (Nanu Oya stream) மறித்துக் கட்டப்பட்டதாக அறிகிறோம்.


அருவியைச் சுற்றி வர வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாம் போகும் பாதையின் அருகே ஓரிடத்தில் பாரிய யந்திரங்கள் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டிருந்தன. பள்ளமாக இருக்கும் நிலத்தை நிரவிக் கொண்டிருந்தார்கள். ஹோட்டலோ அல்லது கடைத் தொகுதியோ எதுவோ கட்டப் போகிறார்கள் போலும்.


புற்றீசல் போல அமைக்கப்படும் ஹோட்டல்கள், நகரமயமாதல் மற்றும் விவசாய ஆக்கிரமிப்புகளால் ஏரியின் இயற்கை வனப்பு பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது.




கால நிலையும் நன்றாக இருந்தது. அதிகாலையில் பெய்த மழை ஓய்ந்துவிட்டது. சூரியன் எட்டிப் பார்க்க இதமான வெயிலில் உடல் சுகம் கண்டது. நகர் உயிர்த்துக் கொண்டிருந்தது. படகுச் சவாரி செல்ல ஏற்றதாக இருந்தது.


லேக்கை அடைந்தோம். முன்பு மழை பெய்து விட்டிருந்ததால் லேக்கை சுற்றியுள்ள தரை சேறும் சகதியுமாக இருந்தது. ஒரு வழிப்பாதையாய் காலை எட்டி வைத்து நடந்து சென்று டிக்கற் பெற்று போட்டில் சுற்றிப்பார்க்க ஏறிக் கொண்டோம்.


ஓடும் நீரின் ஊடே போட் நீரைக் கிழித்துச் சென்றது. சுற்றி வரவும் நுவரெலியா நகரின் அழகிய கட்டிடங்கள் இள வெயிலில் சிலிர்த்து நின்றன.

அழகிய நீண்ட பாலம் ஏரியை ஊடறுத்துச் செல்கிறது. பாலத்தின் கீழால் போட் விரைந்து பாய்கிறது. தலையில் இடித்து விடுமோ!


எம்மை அறியாது தலை சற்றுக் குனிகிறது. குனிந்து நிமிர்வதற்கிடையில் நாம் பாலத்தின் மறுபக்கத்தில். 'வாவ்' கூச்சலிடுகிறார்கள். பிள்ளைகளுக்கு உல்லாசம்.

அடர்ந்த நீர்த் தாவரங்கள் ஊடே போட் நகரத் தொடங்கியது. காற்றும் நன்றாக வீசிப் படர்ந்தது. காட்டாற்றின் ஊடே பயணிப்பது போலப் பிரமை. சுற்றுப்புற அழகையும் இரசித்த படியே பயணிப்பதில் ஏற்படும் ஆனந்தம் சொல்லும் தரம் அன்றோ!


அட இறந்கு துறை வந்துவிட்டதா! போட் புறப்பட்ட இடத்தில் மீண்டு நின்றோம். விரைவிலேயே வந்து சேர்ந்து விட்டது என எண்ணிக்கோண்டோம். தண்ணீரையும் போட்டையும் விட்டு வெளிவர மனம் வரவில்லை. 'வன்ஸ் மோர்' என அனைவரும் வாய்விட்டுக் கூறினர். வேறு இடங்களும் பார்க்கச் செல்ல வேண்டி இருந்ததால் மறுபடியும் செல்லாது நிறுத்திக் கொண்டோம்.

இருவர் செல்லும் self boating வசதி அங்கிருந்தது. Life jacket உடன் தாங்களே படகோட்டலாம். சின்னு மிது இருவரும் அதில் போக வேண்டும் என நட்டுப் பிடித்தார்கள்.




படகுகள் கவிழும் கதைகள் நினைவுக்கு வர டாட் மறுத்துவிட்டார். போட்டிங் செல்லாதது இருவருக்கும் மிகுந்த வருத்தம்தான். மறுமுறை எனச்சாட்டுக் கூறிவிட்டோம்.

லேக் அருகே குதூகலம் ஊட்டும் குதிரைச் சாவாரி செய்யலாம். சவாரிக்கு நேரம் இல்லை. முன்பு பல இடங்களில் செய்ததுதானே. குதிரையுடன் படம் மட்டும் எடுத்துக் கொண்டோம்.



குதிரை வண்டிச் சவாரியும் கிடைக்கிறது. திரைப்படங்களில் வருவது போல அழகிய வர்ணப் பூச்சு வண்டி. அதிகாலையில் சவாரி கிடைக்காததால் குதிரை புல் மேயமுயன்று கொண்டிருந்தது. பிரிட்டிஸ் கால குதிரைச் சவாரியை நினைவு ஊட்டுகிறது.

ராஜா ராணி போல பிரயாணம் செய்யலாம்.


குதிரையும் வண்டியும் அழகாக இருக்கிறதா?

சின்னுவிற்கு தான் எடுத்த படங்களில் இப்படம் ரொம்பப் பிடித்தது.

மாதேவி

Thursday, September 24, 2009

சீதா சிறை வைக்கப்பட்ட சீதா எலிய



ஆலய தர்சனத்துடன் ஆரம்பித்தோம் பத்தினித் தெய்வமான சீதையை இராவணன் கவர்ந்து சிறை வைத்திருந்த நந்தவனம் எனக்கூறப்படும் சீதா எலிய கோயிலை தரிசிக்கச் சென்றோம். சிறிய இக் கோவில் அழகில் அனைவரையும் மயக்க வைக்கும். நீண்டு உயர்ந்த மரங்கள் நிறைந்த மலையைப் பின்னணியாகக் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது.



சீதா அம்மனுக்கு இலங்கையில் உள்ள ஒரே கோயில் இதுதான்.

சிலர் உலகத்திலேயே இதுதான் சீதா பிராட்டிக்கான ஒரே கோயில் என்கிறார்கள்.

வேறு கோயில்கள் இருந்தால் சொல்லுங்களேன்.


முன்வாசலைத் தொட்டதுமே கோயிலின் பின்புறமுள்ள மலையின் இயற்கை வனப்பு, அருவியின் சலசலக்கும் சத்தம், குளிர் காற்று, ராமர் சீதா, இலட்சுமணன் மூலஸ்தான தரிசனம் என யாவும் சேர்ந்து அகமுகமும் குளிர அத்துணை இனிய அனுபவம் கிடைக்கப் பெறுகிறது.


கோவிலைத் தரிசிப்பதற்கு பிரதான பாதையிலிருந்து கீழே இறங்கிச் செல்ல வேண்டும். வழமையாக மலை மேலிருக்கும் கோயில்களை நோக்கி படிகளால் ஏறிச் சென்று அனுபவப்பட்ட எங்களுக்கு, இது புதுமையாக இருந்தது.

கோயிலிருந்து மேலும் இறங்கினால் பாய்ந்தோடும் அருவி வரும்.



கைகள் தானாகவே கூப்பி வணங்கி நிற்கின்றன. ஸ்தான மூர்த்திகளைச் சுற்றி வந்தால் கோயில் பின்புறம் அடைத்த தடுப்புக் கம்பிகள் ஊடே ஓடும் ஆறு சலசலத்து முதலில் அழைக்கிறது.

அதைப் பார்த்துக் கொண்டே பின்புறம் சுற்றி வந்தால் அனுமார் பாதம் பதித்த இடம் கற்பாறையில் தெரிகிறது.


அது மிகவும் தெளிவாகத் தெரியும் வண்ணம் சுற்றி வர மஞ்சள் நிறத்தை வட்டமாக அடித்துக் காட்டியுள்ளார்கள்.

அதன் அருகே ஆற்று நீர் அழகாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மூலஸ்தானத்தைச் சுற்றி வந்தால் இடது மூலையில் பாதம் பதித்த இடத்தைப் பார்த்தவாறே அனுமார் மூலஸ்தானத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரை வணங்கிவிட்டு இடது புறமாகச் சென்றால் படிகளின் ஊடே இறங்கி அவர் பாதம் பதித்திருக்கும் இடத்தை அடைந்து வணங்க முடியும்.

வணங்கிவிட்டு நீரோடை தவழ்ந்து ஓடும் அழகையும் மலையினின்று தழுவி வரும் குளிர் காற்றையும் உட்சுவாசித்துக் கொண்டே உடலும் உள்ளமும் சிலிர்க்க மேலே ஏறி வந்தோம். அனுமார் சந்நிதியைச் சுற்றி வணங்கினோம்.

நாங்கள் சென்ற நேரம் பூசை முடியும் நேரம் ஆதலால் விபூதி குங்குமம் வழங்கினார்கள். குளிருக்கு இதமாக சுடச்சுட சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாக அனைவருக்கும் கொடுத்தார்கள்.

சுவையில் அமிர்தம் போல இருந்தது.

சாப்பிட்டுவிட்டு, கையலம்ப திரும்பிய போது சிறிது சலசலப்பு. திரும்பிப் பார்த்த போது அனுமருக்கு துணையிருக்க வந்துவிட்டார்கள் இருவர். பயமற்று பக்தர்களிடையே வீரநடையில் ஓடித்திரிந்தனர்.



இராமர்,சீதா கல்யாணம் காடேறல் பொன்மானைப் பிடித்துத் தரும்படி வேண்டுதல் பரதன் பாதரட்சை பெறுதல் புஸ்பவாகனத்தில் இராவணன் சீதையைக் கவர்ந்து வருதல்,


மற்றும் அசோகவனத்தில் சீதை அனுமார் கணையாளியுடன் சீதையைக் காணுதல் எனத் தல வரலாறு வர்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.



தீயிட்ட வாலுடன் அனுமர் திரும்பிச் சென்ற மலை கறுத்த மரங்கள் கொண்டதாகவே காணப்படுகிறது. மண்ணும் கறுப்பாகவே இருக்குமாம்.



அழகிய சீதை ஆலயத்தை முன்பும் இரு தடவைகள் தரிசித்து இருந்தாலும் இயற்கையுடன் சேர்ந்த கோயிலின் வடிவ அமைப்பு மீண்டும் மீண்டும் சென்று தரிசிக்கத் தூண்டுகிறது.

கோயிலைத் தாண்டிச் சென்றால் ஹக்கல கார்டினை அடையலாம். இம் முறை நாங்கள் ஹக்கல செல்லாது ஆலயத்துடன் திரும்பிப் புதிய இடங்கள் பார்ப்பதென தீர்மானித்து இருந்தோம்.

ஆயினும் கோயில் வாசலுக்கு எதிர்ப்புறமாக பூங்கன்றுகளின் விற்பனைச் சாலை ஒன்று உள்ளது. அதில் நுழைந்தோம்.


நிறம் நிறமாக, வெவ்வேறு விதமான பூ மரங்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.


கொழும்புச் சுழலுக்கு ஏற்றதாக ஓரிரு செடிகளை வாங்கிக் கொண்டோம்.


நாம் வாங்கியதில் இதுவும் ஒன்று. சிறிய செடி. பச்சையாகக் காய்க்கும். பின் மேலுள்ளவாறு ஓரேஜ் கலராக வரும்.

கொண்டு வந்தது ஒரு மாதமாகவும் கருகிவிடாமல் இன்னும் உயிரோடு இருப்பதே சந்தோசமாக இருக்கிறது.


மாதேவி

Saturday, September 19, 2009

ஹொலிடே கொண்டாட்டம் 2

தலவாக்கலை நகர் நெருங்கியது மனதும் சிலு சிலுத்துப் பொங்குகிறது. ஆம் சில்லெனக் குளிர் மேலைத் தழுவ எதிரே அருவியினின்று பாயும் நீரைக் கண்குளிரக் கண்டதும் வேறென்ன செய்யும்?





கற் பாறையினின்று கொட்டும் சென் கிளயர் எனும் சிறிய அருவி. சென் கிளயர் பள்ளத் தாக்கில் தெரிகிறது வெண் பால் போன்ற அருவி.



அருகே பிரமாண்டமான அழகிய தோற்றத்துடன் காட்சி தரும் St Clares Tea Factory. . மத்திய கால சுவீடிஸ் பாணியில் கட்டப்பட்ட இந்த Mlesna Tea Castle பக்டரி அழகா எதிரே இருக்கும் அருவி அழகா? கிறங்கி நிற்கிறோம்.
உலகப் புகழ் பெற்ற Mlesna Tea இங்குதான் உற்பத்தியாகிறது. வாயிலில் அந்தக் காலத்தில் தேயிலை கொழுந்துகளை அவிப்பதற்கான பென்னம் பெரிய பொயிலர் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.


ஒன்றுக்கு ஒன்று அழகில் போட்டி போடுவனவாய் இவையெல்லாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

சுற்றுலாவின் படங்கள் யாவும் சின்னு 'கிளிக்'கியதே.

படத்தின் மேலே கிளிக்குங்கள் காட்சிகள் அழகாக முழுமையாக விரிந்து தெரியும்.

இந்தப் பக்டரி அருகே ஒரு நீண்ட பாலம். அதில் நின்றுதான் மேற் கண்ட நீர் வீழ்ச்சியைப் பாரத்தோம்.

சற்றுத் தூரம் செல்ல சலசலக்கும் டிவோன் (Devon Fall) என்னும் மற்றொரு நீர் வீழ்ச்சி.


கண்ணையும் மனத்தையும் கொள்ளை கொள்ளும் அழகுடன் சோ என்ற இரைச்சலுடன் குன்றின் உச்சியிலிருந்து கொட்டி கற்பாறைகளில் விரைந்து பாய்ந்தோடி வருகிறது.

மழைக்காலத்தில் நயகரா நீர் வீழ்ச்சி போன்று கொட்டிப் பாயும் என இங்குள்ளோர் வர்ணிக்கிறார்கள். அவர்களும் நயகரா நேரில் பார்த்ததில்லை. நானும் பாரத்ததில்லை. நீங்கள் கூறுங்கள்.

இவை காணும் தோறும் குதூகலத்தை அள்ளி வழங்குகின்றன. இயற்கையின் படைப்பில் இவ்வளவு அற்புதங்களா?

சிந்தனையுடன் ரசிக்க வைக்கிறது. இயற்கையின் உவகை எம்மையும் தொற்றிக் கொண்டு மனத்திற்கு இதத்தைக் கொடுப்பதில் வியப்பில்லை.

இருபுறமும் பச்சைப் பசேலென பரந்து விரிந்த மலைச் சரிவின்; ஓரமாக கிளை பரப்பி விரிந்து நின்ற மரத்தில் சிவப்பு நிறப் பூக்கள் பூத்துக் கொட்டுகிறது.

கண்ணைப் பறித்துத் திரும்பிப் பார் பார் என அழைக்கிறது. இவற்றையெல்லாம் பார்த்து மனம் நிறைந்து மகிழ்ச்சி கொள்ள ஹெயர் பின் வளைவுகளுடாக உயர்ந்து சென்று கொண்டிருந்தது பாதை.

அடுத்து அழகு தேவதையின் தோற்றத்தில் அழகிய நுவரெலியா நகர்.


பிரிட்டிஸ் காலக் கட்டிடத்தில் நுவரெலியா போஸ்ட் ஓபீஸ் காண்போரை மயக்க வைக்கிறது. ஐரோப்பிய கட்டிடக் கலைப் பாணியில் எழுந்து நிற்கிறது

சற்றுத் தூரம் சென்றதும் பிரமாண்டமான கிரான்ட்ஹோட்டல்.


வெளி நாட்டுப் பயணிகளுக்கும் பணம் செழித்தவர்கள் தங்குவதற்குமானது. நாளொன்றுக்கு ரூம் வாடகை 15-20 ஆயிரத்தைத் தாண்டுமாம். இது நகருக்கே அழகைக் கொடுக்கிறது.

அருகே கிரான்ட் இன்டியன் ரெஸ்ரோறன்ட் அமைந்துள்ளது. இதுவும் அழகுதான்.

இவற்றை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டே நகர்வலம் வந்தோம்.

நடுத்தர வர்க்கத்தினர் தங்கிச் செல்லக் கூடிய Angel Park எமது தங்கும் மடமாயிற்று.


இக் ஹோட்டலின் பின் புறம் நுவரேலியா நகரின் மையமாக விளங்கும் விக்டோரியா பார்க் அமைந்துள்ளது. ஹோட்டலின் ஒரு புறம் வீதிக்கு அப்பால் Good Sheperd Convent.

பயணப் பொதிகளை வைத்துவிட்டு உடலுக்கு இதமாக வெந்நீரில் நீராடி சிறிய வோக் செல்லத் தீர்மானித்தோம்.

இரவு 7.30- 8 மணி இருக்கும். குளிர் அதிகரித்து விட்டதால் நகர் அடங்கத் தொடங்கி விட்டது. வீதியில் ஓரிருவர் நடந்து சென்றனர். வாகனங்கள் சில ஓடிக் கொண்டிருந்தன. 15-20 நிமிட நடை தூரம் சென்று அத்தியாவசிய சில பொருட்களை வாங்கிக் கொண்டு ரூம் திரும்பினோம்.

இரவுக் குளிரில் ஜில் என்ற காற்றின் ஊடே வீதியில் நடந்து செல்வதில் சுகம் இருக்கத்தான் செய்தது. யாழ்ப்பாணம் கொழும்பு என வெப்பப் பிரதேசத்தில் வாழும் எங்களுக்கு ஓரிரு நாட்கள் மட்டும் தங்குவதால் குளிர் சுவாத்தியம் மனதுக்குப் பிடித்துப் போய்விடுகிறது.

தொடர்ந்தும் பல வருடங்களாக குளிரிலேயே வாழும் நிலையில் வாழ்க்கைப் பிரச்சனைகள் இருக்கலாம் என்பது லயன் வீடுகளைப் பார்த்ததும் புலப்பட்டது.

அதிகாலை ஆறு மணியளவில் எழுந்து பார்த்த போது நகரம் பனி மூடலுக்கு ஊடாக அமைதியாகக் காட்சியளித்தது.


மேல் மாடி ரூமின் முன்புற யன்னலூடாக நோக்கிய போது அடுத்து இருந்த நிலப்பரப்பில் லீக்ஸ் நாட்டப்பட்டிருந்தது. மரங்களின் இடையே பறவைகளின் சேதாரம் இல்லாது இருக்கப் போலும் சிறிய காகிதக் கொடிகள் நாட்டப்பட்டிருந்தன.

மிகுந்த குளிரிலும் பல்கணியில் சென்று ரசித்தோம்.

வீதியில் சன நடமாட்டம் இல்லை. மழை சிறியதாக தூறத் தொடங்கியிருந்தது. தடித்த கம்பளி கோட்டுடன் ஓரிருவர் குளிர் துரத்த விரைந்து சென்றனர்.

முழங் காலுக்கு கீழ் குளிர் வெடவெடக்க, வெள்ளை யூனி போர்ம், சூஸ் சொக்ஸ் அணிந்த சின்னப் பெண்கள் ஏ.எல் சோதனைக்காக குளிரிலும் புறப்பட்டிருந்தார்கள்.

ஹோலுக்கு வந்து மறுபுறம் உள்ள யன்னல் ஊடே பார்த்த போது அடுத்துள்ள நிலத்தில் கிறீன் கவுஸ் அமைக்கப்பட்டிருந்தது.



உள்ளே அழகிய செடிகள் பூத்துக் குலுங்கின.

வெளி நிலப் பரப்பில் சிகப்பு மொட்டுக்கள் விரித்தாற் போல் சிறியதாய் பீற்ரூட் செடிகள் முளைத்திருந்து அழகில் மயங்கியவரை எல்லாம் சாப்பிட வருமாறு அழைத்தன.

சின்னுவிற்கும் மிதுவுக்கும் ஒரே கொண்டாட்டம்தான். நான் முந்தி நீ முந்தி எனப் படங்கள் எடுத்து கிளிக்கிக் கொண்டார்கள்.

எட்டு மணியளவில்தான் குளிருக்கு இதமாகத் தேநீர் கிடைத்தது. நடுஇரவு முதல் Electricity Failure ஆனதால் Electric kettle வேலை செய்யவில்லையாம்.

காலைக் குளியல். குளிரில் தயங்கிய போதும் வெந்நீர்க் குளிப்பு உடலுக்கு இதமாகத்தான் இருந்தது.

குளிப்பு முடிந்ததும் சாப்பாட்டு மேசை வரவேற்றது. சான்ட்விச் தவிர மற்றதெல்லாம் எமது வழமையான உணவுகள்தான். மெத்தென்ற வெள்ளை இடியாப்பம், மஞ்சள் சொதி, இடி சம்பல் கிழங்கு மசாலா என ராஜீ கொண்டு வந்து வைத்தான்.

இடிசம்பல் மாத்திரம் சிங்களப் பக்குவம். ருசியோ ருசி. ரெசிப்பி என்னவெனக் கேட்க வைத்தது. வயிற்றை நிறைத்துக் கொண்டு வாகனத்தில் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம்.

மாதேவி

Friday, September 4, 2009

ஹொலிடே கொண்டாட்டம்

இன்னும் மூன்று நான்கு நாட்களில் ஸ்கூல் ஹொலிடேஸ் முடிந்து விடும். பிள்ளைகள் எல்லோருமே விளையாட்டு மூட் தாண்டி படிக்கத் தொடங்குவதற்கு ஆயத்தமாகிறார்கள். அரை மனத்துடன் தான்.

இந்த நேரத்தில் சற்று முன்னோக்கி ஹொலிடேயின் ஆரம்ப காலத்தில் இருந்த மகிழ்ச்சிப் பொழுது பற்றி அசைபோடத் தோன்றுகிறது.

முதல் ஓரிரு வாரம் தொலைக்காட்சி பார்ப்பது உண்பது உறங்குவது என ஜாலியாகப் பொழுது போனது.

கொறிப்பதற்கு உணவுகளும் காதுக்கு இனிமை சேர்க்க இசையும் ஒன்று கூடின.

வீட்டில் உறவினர் வருகை என அமர்க்களம். வீடே அதிரும் அளவிற்கு ஒரே சத்தமும் சிரிப்பொலியும்தான்.

அம்மா பிள்ளைகளுக்கு விரும்பிய உணவுகளை செய்து அசத்திக் கொண்டிருந்தா. வீடே சமையல் மணத்தில் மூழ்கிக் கிடந்தது.

இரவில் அயல் வீடுகளில் எல்லாம் வெளிச்சம் அணைக்கப்பட்டு தூக்கத்தில் மூழ்கிக் கிடக்க இங்கே இரவு 12 - 2 மணிவரை மின்னொளி பரவிக் கொண்டிருந்தது. பிள்ளைகள் படம் பார்ப்பது அல்லது இணையத்தில் இருப்பது என நேரம் போய் தூங்கப் பின்னிரவு ஆகிவிடும்.

சிறிது நாட்களில் இதுவும் அவர்களுக்கு அலுக்கத் தொடங்கியது.

பகலில் இன்டோர் கேம்ஸ் ஆன Sudoku,Puzzle, Scrabble, chess. அலுமாரி அடியில் ஒளிந்து கிடந்தவை பொழுதுக்கு ஒன்றாய் வெளிவந்து கொண்டே இருந்தன.

அதுவும் சலிக்க Trip என நச்சரிப்புத் தொடங்கியது.

Dad நல்ல மூட்டில் இருக்கும் நேரம் பார்த்து அவரை வளைத்துப் போட்டுவிட்டனர். லீவு எடுப்பதென்பது தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சிம்ம சொப்பனம்தான் எனச் சொல்லவும் வேண்டுமா?

ஒருவாறு இரண்டு நாட்கள் லீவிற்கு ஓகே கூறிவிட்டார். சின்னுவிற்கோ கொண்டாட்டம்தான்.

எங்கே செல்வது என டிஸ்கஸ் பண்ணத் தொடங்கிவிட்டனர்.

ரிப்பில் என்ஜோய் செய்வதற்கு கூடவே மைத்துனி, அவரின் மகள் மிது இருவரும் துணை சேர்ந்தனர்.


செல்லுமிடம் மலை நாடு நுவரெலியா என முடிவாயிற்று.

மலைநாட்டின் கொள்ளை அழகு எத்தனை முறைகள் சுற்றுலாக்களின் போது சென்று ரசித்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் ரசனையில் புதிய மாற்றங்களைக் கொடுக்க வைக்கும் அற்புதமான அனுபவங்களாகத் திகழும்.


கொழும்பில் இருந்து புறப்பட்டால் அவிசாவளையில் ஆரம்பிக்கும் மலைவனப் பாதை. கித்துள், ஈரப்பலா, மிளகு, கொக்கோ, கோப்பிச்செடி என ஒரு புறமாயும் மறுபுறம் கூடல்களாக தென்னை மரங்களாகவும் காட்சி கொடுக்கும்.

பசுமையில் தொடங்கி உயர்ந்து செல்லும் மலைப் பிரதேசத்தில் ரப்பர் மரங்களென அடர்ந்து செல்லும் பாதை.


அவிசாவளையைக் கடந்ததும் கித்துல்கம வருகிறது. ஊரின் பெயரே வாயில் இனித்தது.

கித்துள் மரத்திலிருந்து கள்ளு எடுக்கப்படுகிறது. அதிலிருந்து பெறப்படும் கித்துள் பாணி, கித்துள் கக்குறு ஆகியன சுவையில் பிரசித்தி பெற்றவை.

இவை எமது பனம்பாணி, பனங்கட்டி போன்றது. ஆனால் சுவையில் வித்தியாசம் உண்டு.

மழை வீழ்ச்சி மிக அதிகமான இடம் இதுவாகும்.

எயர் கொண்டிசனை அணைத்து வாகனத்தின் கண்ணாடியைத் திறக்க கொழும்பை தூற்ற வேண்டும் போலிருந்தது. அத்தனை சுகமான சுவாத்தியம்.
உடலுக்கு இதமான குளிர்காற்று தழுவிச் செல்லும். குளிரும் அதிகரித்து உடலை சிலிர்க்கச் செய்கிறது.

இங்கு வசிப்பவர்கள் எவ்வளவு பாக்கியசாலிகள்!

மேலே செல்லச் செல்ல தேயிலைச் செடிகள், சைப்பிரஸ் மரங்களென விரிந்து செல்லும் அழகோ கொள்ளை அழகுதான்.

ஹினிகத்தனை தாண்ட வட்டவளை வருகிறது.

வட்டவளையின் மலைச் சரிவுகள் நாற்புறமும் பரந்து அழகிய மலைப் படிவங்களாக கவர்ந்து இழுக்கிறது. இங்கு விளையும் தேயிலைக்கு உயர்ரகம் எனப் பெயர் உண்டு.


Zesta வின் தேயிலைத் தொழிற்சாலைப் பெயர் கண்ணில் பட்டது. அழகிய பெரிய ரீ கப் வடிவில் விளம்பரப் பலகை பிரயாணிப்பவரை வரவேற்கிறது. இது இயற்கையுடன் சேர்ந்து அழகு தருகிறது.

வீதி ஓரத்தில் அவர்களது தேநீர் விடுதி வாகனத்தில் போகும்போது தெரிந்தது.

இறங்கிப் பார்க்க பொழுது கிட்டவில்லை.

மலைச் சரிவுகளில் அழகிய வட்டவளை நகரின் கட்டிடங்கள், பங்களாக்கள் கொண்ட வியூ மாலை நேர மூடு பனியில் படிந்து மனதைக் கவர்ந்து, வாகனம் முன்னேற, பின்நோக்கி மறைகின்றன.

ஹோலிடே கொண்டாட்டம் தொடரும்.....

மாதேவி