Friday, March 5, 2010

பதின்ம நினைவுகள் தொடர் 2

வீட்டின் பின் முற்றத்தில் கிணறு.
அதை சுற்றி கமுக மரங்கள், வாழை மரங்கள்.
கருவேற்பிலை ஒரு புறமிருக்க
அதற்கு சற்றே தள்ளி மாமரங்கள் இருபுறமும் நின்று சோலையாக இருக்கும். உச்சி வெயிலுக்கு குளிர்மையைத் தரும்.


கிணற்றை ஒட்டி பெரிய சீமேந்துத் தொட்டி.

இந்தத் தொட்டிதான் எனக்கு மிகவும் பிடித்தது.

எனது அக்கால சுவிமிங் பூல் அல்லவா?

அண்ணாமார்கள் கடல், குளம் எனக் நீந்தவும் குளிக்கவும் செல்வார்கள்.

எங்களுக்கு இதெல்லாம் கிடைக்காது.

லீவு நாட்களில் தொட்டியை நிரப்பிவிட்டு தொட்டியில் ஏறி இருந்து காலையும் கையையும் அடிப்பேன். எனது நீச்சல் அழகைப் பார்த்து கிணற்று நீரில் வந்த மீன்கள் தோற்றுப் போய் ஓடிவிடும்.

மீன்களுள்ளும் ஒரு விஸ்வாமித்திரர் இருந்தார் போல!

தொட்டிக்கு வந்ததே கேடு. தொட்டியை இடித்துவிட்டு அவ்விடத்தில் பாத் ரூம் கட்டுவோம் என அப்பா தீர்மானித்தார்.

தொட்டியும் ஒரு நாள் என்னை விட்டு விரைந்து போயே விட்டது.

சில நாட்களில் குளியல் அறை நிமிர்ந்து நின்றது.

0.0.0.0.0.0.0

"ஐயோ! ஐயோ! படுபாவி...
... அடிக்கிறான் ஓடி வாங்கோ!"

இரவு ஒன்பது மணிக்கு நாங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மாலுக்குள் இருந்து லூடோ விளையாட்டில் இருந்தோம்.

விளையாட்டுக் குசியில் காதில் விழுந்தும் உறைக்கவில்லை.

'சந்திரா மாமி கத்துகிறாளே! ஓடுங்கடா' என்றான் பெரிய அண்ணா.

சூடுகண்ட பூனை போல துள்ளி விழுந்தோம்.

மாமி அவித்துத் தந்த தேங்காய்க் குழல் புட்டும், சிவப்பு அரிசிமாத் தோசையும் எங்களை நாலுகால் குதிரைப் பாய்ச்சல் பாயவைத்தது.

வேலிகளைப் புட்டுக் கொண்டு பறந்து சென்று நான்காம் வீட்டில் உள்ள மாமி வீட்டு விறாந்தையில் மூச்சிழுத்தபடி நின்றோம்.


மாமியின் புருசனைப் பார்க்கப் பயமாக இருந்தது. கண்ணெல்லாம் சிவந்து கோபத்தில் ஆவேசமாக நின்றார். ஏதா புளித்த வாடை குப்பென மூக்கை வெருட்டியது.

'குடித்திருக்கிறார் போலை. அம்மம்மாவைக் கூட்டி வாங்கோ' என ஒருவன் கத்தினான்.

இருநூறு யார் ஓட்டப் போட்டியில் முதலாவதாக வந்த எங்களுள் ஒருத்தன், கொளுவிக் கிடந்த கேட்டையும் உதைத்துக் கொண்டு அம்மம்மாவைக் கூட்டி வரப் பறந்தான்.

அடுத்த இரண்டாவது நிமிடம் அம்மம்மா ஓட்டக்காரனை மிஞ்சிய வேகத்தில் வந்துவிட்டார்.

அதற்குள் மாமியின் புருசன் தாள்பாள் கொட்டனை ஓங்கிக் கொண்டு முன்னேறினார்.

எங்களை அடிக்க எனப் பயந்து என் கால்கள் பின்வாங்கின. ஆனால் அவர் மாமியை நோக்கித்தான் நகர்ந்தார்.

ஓங்கிய கொட்டன் கீழிறங்குவதற்குள் அம்மம்மா குறுக்கே பாய்ந்தா.
இறுகப் பற்றினா கொட்டனை.

"என்னடா கை நீளுதோ"

மாமியை அடிக்க ஓங்கிய கை வெலவெலத்தது.

அம்மம்மாவிற்கு இந்தப் பலமா!

அம்மம்மாவைக் கண்டதும் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடும் தெருநாயைப் போல இவரும் ஒடுங்கியது எமக்கு ஆச்சரியமாக இருந்தது.

"இண்டைக்குக் குடிச்சுப் போட்டு கண்மண் தெரியாமல் நிக்குது" கையை அமத்தியபடியே சொன்னா மாமி.

"கையில் நோ" எனவும் முனகினா.

மறுநாள் அம்மம்மாவும் மாமியும் ஒட்டகப்புலம் பயணமானார்கள்.

திரும்பி வரும்போது கையில் நோ எண்ணெய் குப்பி.

அடுத்த வாரம் முழுவதும் நாங்கள் பொட்டுக்குள்ளால் மாமி வீட்டை எட்டிப்பார்க்கவே இல்லை!

மாமிவீட்டு எண்ணை மணம் எங்கடைவீடு வரை அடித்தது.

அருகில் உள்ள பரியாரி மாமா சூரியனைக் கும்பிடக் கூட கிழக்குப்பக்கம் திரும்பவில்லை நீண்ட நாட்களுக்கு.



தன்னிடம் எண்ணை வாங்க வரவில்லை என்ற கோபத்தில்.

ஒரு வருடத்துள் பொட்டு வேலிகள் யாவும் படிப்படியாக மதில்களாயின.

வேலிப் பொட்டுக்குள்ளால் மாமியைக் காப்பாற்றுவது போன்ற நன்மைகளும் இனி நடக்காது.

நமது கீரிப் பாச்சல்களும் நின்றே போய்விட்டது.

மாதேவி
0.0.0.0.0.0

17 comments:

  1. சுவிஸ் ஹேமா சுற்றுலா போய் இருப்பதால், ஈழத் தமிழை வாசிக்க முடியாமல் தவித்தேன். நீங்கள் அந்த குறையை தீர்த்து விட்டீர்கள்.

    ReplyDelete
  2. சுவாரஸ்யமா இருக்கு

    ReplyDelete
  3. நகைச்சுவையும், நெகிழ்வான சம்பவங்களும் கலந்து கொடுத்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. மாதேவி அந்த கிணறை பார்த்ததும். எனக்கும் பழைய ஞாபகங்கள் ரொம்ப இனியாக வருது.


    எந்த விஷியமானாலும் அதை செம்மையாக விவரிப்பது தான் உங்கள் சிறப்பே/

    இது தான் தாய் குழந்தைகளுக்கு ஒன்று என்றால் தாய் அந்த யானைவிட பலசாலியாவாள்.

    இன்னும் ஒரு பழமொழி என் கிரான் மா அடிக்கடி சொல்வார்கள்,. அம்மா கையில் குழந்தை இருந்தால் புலி கூட கிட்ட வர அஞ்சுமாம்.

    ReplyDelete
  5. நன்றி தமிழ் உதயம்.

    ReplyDelete
  6. வாருங்கள் அண்ணாமலையான்.தொடர் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. சிறு வயதில் தூத்துகுடியில் ஒரு வீட்டில் இருந்தோம், அங்கு பெரிய தண்ணீர் தொட்டி இருந்தது, நாங்களும் அதில் குளிப்போம்.(எங்களுக்கும் அது தான் நீச்சல் குளம்)

    உங்கள் பதிவை படித்தவுடன் எனக்கு சிறு வயது நினைவு வந்து விட்டது.

    ReplyDelete
  8. சுவாரஸ்யமா இருக்கு. அழகான ஈழத்தமிழில் நெகிழ்வாகவும் இருக்கு. சின்ன வயசில் சிலோன் ரேடியோவில் கேட்ட நாடகங்களை ஞாபகப்படுத்தி விட்டது. ம்.. அது ஒரு காலம் :-))

    ReplyDelete
  9. சைவகொத்துப்பரோட்டா மிக்க நன்றி.

    ReplyDelete
  10. ஆமாம். இலங்கை பேச்சுத்தமிழ் சில இடங்களில் வருவதால் உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம் LK.
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா.

    ReplyDelete
  12. வாருங்கள் கோமதி அரசு.
    சிறுவயது ஞாபகங்கள் என்றுமே இனிமையானவைதான்.
    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  13. பதிவு அழகா தமிழ் அழகா?அருமை

    ReplyDelete
  14. முதல் பதிவையும் அப்போதான் வாசித்தேன்.. டீனேஜை அமைதியாக அனுபவித்துள்ளீர்கள் போல.. ஆனால் அந்தக்காலத்திலே எப்படியெல்லாம் வாழ்ந்தோம் என்று கவலைப்படாமல் இப்போதும் குடம்பத்துடன் அழகாக வாழ்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..

    அழகான எழுத்து நடை

    ReplyDelete
  15. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கண்மணி.

    ReplyDelete
  16. அம்மம்மாவைக் கண்டதும் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடும் தெருநாயைப் போல இவரும் ஒடுங்கியது எமக்கு ஆச்சரியமாக இருந்தது.//
    me also....

    ReplyDelete